Wednesday 4 March 2015

20.11.2014
நேற்று,
ஆறாம் வகுப்பில் படைப்பாற்றல் திறன்.
குறிப்புகளை எவ்வாறு விரித்து எழுதுவது?என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.
ஒரு மாணவன் எழுந்தான்.
சார், முஸ்லீம், இந்துவுக்கு அண்ணனா?
எனக்கு விளங்கவில்லை. என்ன கேள்வி இது?
நீங்க தானே சொன்னீங்க, முஸ்லீம் இந்துவுக்கு அண்ணன் அப்படின்னு!
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இது என்ன?இப்படி ஒரு செய்தி நான் சொல்லியிருக்க மாட்டேனே!என்றேன்.
சிலர்,இல்லை, சொல்லவில்லை.என்றனர்.

நான் சுதாரித்துக்கொண்டேன்.
சுதந்திரம் பெற்ற நாளை வைத்துப்பார்த்தால்,
சுதந்திர பாகிஸ்தான் அண்ணன்,
சுதந்திர இந்தியா தம்பி என்று முந்தைய வகுப்பில் கலந்துரையாடியிருந்தோம். அதைத்தான் அவன்,
மதம் சார்ந்து புரிந்துகொண்டிருக்கிறான்.
வகுப்பறையில் உரையாடும் செய்திகளை எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்வதில்லை. வேறு வேறு மட்டங்களில் புரிந்துகொள்கின்றனர்.
கவனிக்கின்றனர். விட்டுவிடுகின்றனர். தவறாகவும் புரிந்துகொள்கின்றனர்.
அவரவர் புரிதலின் படி நமது செய்தி வீட்டிலும் நண்பர்களிடையேயும்
பகிர்ந்துகொள்ளப்படும்.
சாதி,மதம் போன்ற சிக்கலான செய்திகளை வகுப்பில் விவாதிக்கும்போது மிகுந்த கவனமுடன் நடுநிலையுடன் இருக்கவேண்டியது அவசியம்.
கவமுடனும் தெளிவுடனும் இருந்தும் தவறான புரிதல்கள் இருப்பதை எண்ணி வியந்தேன்.கேட்டதை எண்ணி மகிழ்ந்தேன்.
தம்பி,
நாடுகளை இந்து,முஸ்லீம் என்று மதத்தின் பெயரால் அழைக்கக்கூடாது.
சில நாடுகள் மதம் சார்ந்தவை.
நம் நாடு மதம் சார்ந்தது அல்ல.
இந்தியா, மதச்சார்பற்ற நாடு.
பல்வேறு இன,மொழி,மத மக்கள் வாழும் நாடு.
இன்று ஒரு வரி புதுசா படிப்போம்,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி நம்ம ஊர்ல இருந்த ஒரு புலவர் பாடின பாட்டு,
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"
கரும்பலகையின் மேற்பகுதியில் எழுதிவந்தேன்.

No comments:

Post a Comment