Wednesday 4 March 2015

27.11.2014
முந்தாநாள் காலை தலைமையாசிரியர் என்னையும் நண்பர்களையும் அழைத்தார்.
இன்று மாலை ஆண்டுவிழா நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக நடத்தித்தர வேண்டும். கலை நிகழ்ச்சிகள் உங்களின் கைகளில்தான் உள்ளது. மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதீர்கள்.
சிவா, மனதில் எதையும் வைத்துக்கொள்ளாதே, பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
சார், எல்லாம் சிறப்பாக நடக்கும்.
பரதம் அந்தப்பையன் நன்றாக ஆடுகிறான்.முதல் நிகழ்ச்சியாக அவனே ஆடுவான். ஓரிரு ஆசிரியர்கள் பக்கவாத்தியங்கள் வாசிப்பதுபோல நடிப்பார்கள். எனவே, பார்க்க நன்றாக இருக்கும். என்றார்கள்,நண்பர்கள்.
நான் சொன்னேன்,
சார், முந்தைய வருடங்களில் அவர்கள் சொல்லித்தந்து பரதம் ஆடிய யாரும் ஆடியது பரதமே இல்லை. எப்போதுமே மாணவர்கள் அவர்களாகவே ஆடுவார்கள்.இவர்கள் சும்மா பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
முதல் நிகழ்ச்சியாக வேண்டாமே!
சார், முதலில் பரதம் தான். நல்லா இருக்கும்.
அனைவரும் வெளியே வந்தோம்.
எனக்கு கடுமையான கோபம்.
என்னசெய்யலாம் என்று யோசித்தேன்.
கிராமிய நடனத்தில் நான் ஆடுவதை நிறுத்திக்கொள்ளலாம் என முடிவு செய்தேன்.
யாரிடமும் சொல்லவில்லை.
சித்திரைத்திருவிழாவில் ஆற்றில் இறங்கும் அழகர்போலவே குதிரையில் அழகரை உருவாக்கிக்கொண்டிருந்தனர் எங்கள் முன்னாள் மாணவர்கள் சையது மற்றும் சேகர்.
ஒப்பனை முடிந்ததும் அப்படியே பெண்போலவே இருந்தான் பரதம் ஆடும் மாணவன்.
ஆசிரியர்களும் பக்கவாத்தியக்காரர்கள் போல அபிநயிக்க பரதம் அற்புதமாக அரங்கேறியது.
அழகர் ஆட்டக்காரர்கள் ஒப்பனை முடிந்ததும் அனைவரிடமும் பேசினேன்.
நண்பர்களே,இது நம் பள்ளியில் உங்களுக்கு இறுதி ஆண்டுவிழா. முழு வேகத்துடன் ஆடுங்கள்.உங்கள் பயிற்சி சிறப்பாக இருந்தது. நன்றாக ரசித்து மகிழ்ந்து ஆடுங்கள்.என்றேன்.
சார்,இன்னும் நீங்க டிரஸ் மாட்டல.
நான் ஆடல.
அனைவரும் உடைகளை களையத்தொடங்கினர்.
பதறித்தடுத்தேன்.
நண்பர்களே, நான் ஆடவில்லை என்பதற்கு காரணம் இருக்கிறது. இதைவைத்துதான் நான் கலை நிகழ்சிகள் தொடர்பாக வருங்காலத்தில் கேள்வி கேட்க முடியும்.நீங்கள் ஆடாவிட்டால் அது என்மீது குற்றமாக மாறிவிடும். நீங்கள் சிறப்பாக ஆடினால் நான் தைரியமாகப்பேசமுடியும்.
மாணவர்கள் ஒத்துக்கொண்டனர்.
அழகர் ஆட்டம் என்பதால் ஆறு மாணவர்களுமே ஆடத்தொடங்கிய நாளிலிருந்தே விரதமிருந்துவருகின்றனர். அன்றையநாளில் காலையில் இருந்தே எதுவுமே சாப்பிடவில்லை.
நிகழ்ச்சிக்கு முன் ஏதேனும் சாப்பிடச்சொல்லியும் மறுத்துவிட்டனர்.
இறுதி நிகழ்ச்சியாக அழகர் ஆட்டம் தொடங்கியது.
ஒருசில ஒளிப்படங்கள் மட்டுமே என்னால் எடுக்க முடிந்தது.
ஆட்டத்தின் வேகத்தில் மெய்மறந்து விழிகளில் நீர்த்திரையுடன் நின்றிருந்தேன்.
அழகர் மேடையில் தோன்றியபின் அனைவரும் எழுந்து ஆர்ப்பரிக்க நானும் வைகைக்குள் நின்றுகொண்டிருந்தேன்.

No comments:

Post a Comment