Wednesday 4 March 2015

06.11.2014
காலை முதலே மனம் எப்போது மாலை வரும் என்று ஏங்கிக்கிடந்தது.
பேராசிரியர் ச.மாடசாமி அவர்களை சந்திக்கப்போகிறேன்,பள்ளிக்கே வரப்போகிறார் என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன்.
பிற்பகல் 3.30மணிக்கு பள்ளி நிறைவடைந்தது.
ஆசிரியர் வந்துவிட்டார். இனிய எளிய மனிதர். நீண்டநாட்கள் பழகியவர்கள்போல இயல்பாக சிரித்துக்கொண்டோம்.
அவரின், சொலவடைகளும் சொன்னவர்களும் புத்தகமும் அமர்த்யா சென் எழுதிய The Argumentative Indian புத்தகமும் இரு பேனாக்களும் பரிசாகத்தந்தார்.மிகவும் மகிழ்ந்தேன்.
நிறைய பேசினோம்.
அவர்தம் எழுத்தைப்போலவே எளிமையும் ஒளிவு மறைவுமில்லா வெள்ளந்தி மனிதர்.
எனது பள்ளி அனுபவங்களையும் கேட்டார்.
நகரில் ஆண்கள் பள்ளி பெண்கள் பள்ளி என்று பிரிந்து இருப்பதே அவருக்கு ஆச்சரியமானதாக இருந்தது.
சமச்சீர் கல்வி புத்தக ஆக்கத்தில் அவரின் பங்கு, இன்றைய மாணவர்களின் நடத்தை மாற்றங்கள் என பல்வேறு செய்திகளை பேசினோம்.

பேராசிரியரிடம் பேசியதிலிருந்து,
பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று பத்தாண்டுகள் ஆகிவிட்டன.
ஓய்வு பெறும்போது மாணவர்களின் வாய்களுக்கு கொடுத்த அளவு கைகளுக்கு வேலை கொடுக்கவில்லையோ? என்றே எண்ணினேன்.
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பல்வேறு தண்டனைகளை அடிக்கடி பெற்றாலும் எனது கல்லூரி வகுப்பறையில் பரிசோதனை முயற்சிகளில் நிர்வாகம் தலையிட்டதில்லை.
புதிய பரிசோதனைகளை செய்யும் ஆசிரியர்கள் நிறைய பின்விளைவுகளை சந்திக்கத்தயாராக இருக்க வேண்டும்.இல்லையெனில் தனிமைப்பட்டுவிட நேரிடும்.
ஐரோப்பிய வகுப்பறைகள் எளிமையானவை. சுதந்திரமானவை.சமீபத்தில் பிரான்ஸ் நாட்டவரின் கட்டுரை ஒன்றைப்படித்தேன். இப்போது அங்கே பள்ளிகள் 'இந்திய மாதிரியை' பின்பற்றத்தொடங்கிவிட்டன. நம்மைப்பார்த்து கடினமான பாடங்களை சிறு வயதிலிருந்தே கற்பிக்க தொடங்கிவிட்டனர்.
மனதுக்கு மகிழ்ச்சியாகவும் தெம்பாகவும் இருந்தது. தொடர்ந்து ஆசிரியரை அவரது இல்லத்திலேயே சந்திப்பேன்.இன்னும் நிறைய கற்க வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment