Wednesday 5 November 2014

கல்விகுறித்தும் ஆசிரியரின் அனுபவங்கள் குறித்தும் இப்போது தமிழில் நிறைய நூல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.
பல ஆண்டுகளாகவே ஆசிரியரின் அனுபவங்களை, கல்வி குறித்த தமது எண்ணங்களை வெளியிட்டுக்கொண்டே இருப்பவர்
பேராசிரியர் ச. மாடசாமி.
' எனக்குரிய இடம் எங்கே?' என்ற அற்புதமான அனுபவத்தொகுப்பே நான் வாசித்த இவரின் முதல் நூல்.

பேராசிரியர் ச.மாடசாமியின் எழுத்துக்கள்,
போலியான முகமூடிகள் ஏதுமில்லாத இயல்பான ஆசிரிய அனுபவங்களின் எளிய நடை வாசிப்போரை மயக்கும்.
தன்னையும் சுயவிமர்சனம் செய்துகொள்ளும் நேர்மை கொண்டவை.
இவரின் நூல்களிலிருந்தே 'ஆசிரியம்' குறித்த நூல்களை தேடித்தேடி வாசிக்கத்தொடங்கினேன், திரைப்படங்களை சேகரித்தேன்.
ஆசிரியர்கள், பள்ளி குறித்த திரைப்படங்களின் கதைகளை நண்பர்களுக்குச்சொல்லுவேன். இருப்பினும், படத்தைப்பார்த்தவர்கள் உரையாடினால் மேலும் பல செய்திகளை பேசலாமே என்று எண்ணுவேன். இது போல் நான், எனக்குள் ரசித்த பல படங்களைப்பற்றி பேராசிரியர் எழுதியிருப்பார். வாசிக்கும்போது மனம் துள்ளும். அப்படியான ஒரு படம், ' Good bye,Mr.Chipps'.
1939 இல் வெளியான கருப்பு வெள்ளை காவியம். இதை நாவலாக வாசித்த அனுபவத்தை சிறு நூலாக எழுதியிருப்பார்.
' ஆசிரிய முகமூடி அகற்றி' என்ற இவரில் நூலிலேயே மெக்கோர்ட் - அறிமுகமானார்.
 மெக்கோர்ட்டின் மொழிப்பாட வகுப்புகளை பல இடங்களில் என் வகுப்பு போலவே எண்ணி வியந்தேன்.
' ஆளுக்கொரு கிணறு' மறுத்தல் திறன், சுய விமர்சனம், அறிவொளி, மொழி, கல்வி குறித்த பல்வேறு செய்திகளை கற்றுத்தந்தது.
மதுரையில் வசிக்கிறார் என்றாலும் சந்திக்க இயலாமலே இருந்தது. ஒவ்வொரு புத்தகத்திருவிழாவிலும் சந்திப்பை தவறவிட்டிருக்கிறேன்.
இணையத்தில் கல்வி குறித்து எழுதும் செய்திகளுக்கு பேராசிரியரின் விருப்பமும் எண்ணப்பகிர்வும் மனதில் மகிழ்ச்சியை நிரப்பும்.


சில மாதங்கள் அமெரிக்காவில் இருந்த பேராசிரியர் மதுரை வந்துவிட்டார். முகநூல் வழியே தொடர்புகொண்டபோது, தொலை பேசி எண்ணை வாங்கி அவரே பேசினார்.
நாளை எங்கள் பள்ளிக்கே வந்து சந்திக்கிறேன் என்று அவர் சொன்ன போது அவரின் எழுத்துக்களைப்போலவே சொல்லிலும் எளிமை கண்டு வியந்துபோனேன்.
ஆவலோடு காத்திருக்கிறேன்.மனதுக்குள் பேசிக்கொள்கிறேன்.
பேராசிரியர் ச.மாடசாமி அவர்களுடனான உரையாடல் என் ஆசிரியப்பணியில் புது வேகம் தரும். இன்னும் பல்வேறு எண்ணங்கள் மனதுக்குள்.

Tuesday 4 November 2014

எது சரியான கல்வி?


முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. 
கல்வி குறித்த சிந்தனைகளோடு இறையன்பு இ.ஆ.ப.
எழுதியுள்ள சிறு நூல்.
சரியான பாதையில் கற்கிறோமா? என்று மாணவர்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள இந்நூல் உதவியாக இருக்கும்.
ஆசிரியர்களுக்கும் கல்வி குறித்த விவாதங்களை மாணவரிடையே எழுப்ப இந்நூல் அறிமுகமாக இருக்கும்.
மனப்பாடத்தையும் மதிப்பெண்ணையும் விட்டுவிட்டு வாழ்க்கையோடு கல்வியை எப்படித்தொடர்பு படுத்தலாம்?
படைப்பாற்றலை வளர்த்தலே கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும். என்று பல்வேறு கோணங்களில் சிந்தனையைத்தூண்டும் பெரிய கருத்துக்களடங்கிய சிறு நூல்.

நூலிலிருந்து,

சரியான விடைகள், சரியான வினாக்களிலிருந்தே விடுபடத்தொடங்குகின்றன.
சாதாரண நிகழ்வுகளை கல்வியோடும், படிக்கிற பாடங்களை வாழ்க்கையோடும் தொடர்புபடுத்திப்பார்க்கிறபோது நாம் விசாரணையை ஆரம்பிக்கிறோம்.
படைப்பாக்கத்திறன் உள்ளவர்கள் எந்தப்பாடத்தையும் அதற்கான காரணங்கள், விளைவுகள் குறித்த விவரங்களுடன் தீவிர மனப்பான்மையுடன் அணுகுவார்கள்.


Monday 3 November 2014


நான் மாணவனாக இருந்தபோது,
எனது ஆசிரியர்கள் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று கனவு கண்டேனோ,
அப்படியொரு ஆசிரியராக வேண்டும் என்றே தினமும் முயல்கிறேன்.
" நான் சொல்வதை நீ கேளு!"
அவ்வப்போது தோன்றினாலும் அது சரியா? என்று சொல்லும் முன்போ, பின்னரோ யோசிக்கிறேன்.
வகுப்பறை, சிறைச்சாலை அல்ல.
அமைதியான வகுப்பறையை அதிகம் விரும்புவதில்லை.
அதற்காகவே உரையாடல்களை உருவாக்குகிறேன்.
வகுப்பறை கடந்த வெளியே மனதுக்கு மேலும் நெருக்கமானது.
எப்போதெல்லாம் வகுப்பறையை விட்டு வெளியேற முடியுமோ அப்போதெல்லாம் வகுப்பும்,
சுதந்திர வெளியில் உயிர்ப்புள்ளதாகிறது.
மரங்கள் நிறைந்த பள்ளியில் இருப்பவர்கள் பாக்கியசாலிகள்.
பள்ளிக்குள் இருக்கும் மரங்களே, போதி மரங்கள்.

பயிற்சியாசிரியைகள் இருவருமே ' ஆயிஷா' வாசித்துவிட்டனர்.
நல்லா இருக்கு, சார்.
இன்னும் கொஞ்சப்பேர் வாசிக்கிறாங்க.
' ஆயிஷா' நல்ல தொடக்கம் தரும்.
கல்விகுறித்து மேலும் வாசிக்க ஆர்வத்தைத்தூண்டும். என்றேன்.
தொடர்ந்து சில புத்தகங்கள் தருவேன்.
இருவருமே வாசித்துவிட்டு திருப்பித்தந்துவிட வேண்டும்.
வாசிக்க வாசிக்க, புதுப்புத்தகங்கள் தருவேன். என்றேன்.
மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர்.
இரா.நடராசன், பேரா.மாடசாமி, ஜான் ஹோல்ட், என்று பல்வேறு அற்புத ஆளுமைகளின் புத்தகங்கள்,மற்றும் பல்வேறு புத்தகங்கள் இருக்கின்றன.
எதைக்கொடுக்கலாம்?
எல்லாமே அற்புதமானவை.
டோட்டோ சான், கனவு ஆசிரியர் - இரு நூல்களையும் கொடுத்தேன்.
சனி,ஞாயிறு இரு நாட்களில் வாசித்துவிடலாம்.
அவசரமில்லாமல் ரசித்துப்படியுங்கள்.
எடுத்துச்சென்றிருக்கிறார்கள்.

ஆயிஷா- நூலை வாசிக்கக்கொடுத்தேன்.என்ற முந்தைய பதிவைக்கண்ட நண்பர்களில் சிலர் எங்கு கிடைக்கும்?எனக்கும் வேண்டும்! என்று ஆர்வமுடன் கேட்டிருந்தனர்.
ஆசிரியர்,பள்ளி, கல்விமுறைகள் குறித்து வாசிக்கச்சுவையான நூல்கள் பல உள்ளன.
புத்தகக்கடைகளில் இல்லாத ஊர்களில் இருப்பவர்கள் நகரங்களுக்கு செல்லும்போது வாங்கிக்கொள்ளலாம்.

டோட்டோ சான்
ஜப்பானின் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளர்.
தனது குழந்தைப்பருவத்தில் படித்த 'டோமோயி'பள்ளியைப்பற்றிய நினைவுத்தொகுப்பே டோட்டோ சான்- அவரின் செல்லப்பெயர்.
டோட்டோ சான், பல்வேறு பள்ளிகளில் இருந்து நீக்கப்படுகிறாள். சேட்டைக்காரி என்று அவளை ஏற்க எந்தப்பள்ளியும் முன்வரவில்லை.
'டோமோயி' பள்ளி அவளை ஈர்க்கிறது.மகிழ்வுடன் பள்ளி செல்கிறாள்.
பழைய ரயில் பெட்டிகளே வகுப்பறைகள்.செயல்முறைகள் மிக்க பாடங்கள்.
தன வாழ்வில் பள்ளி ஏற்படுத்திய மாற்றங்களை டோட்டோசான் அற்புதமாக எழுதியிருக்கிறார்.
குறுகிய காலமே இயங்கிய அப்பள்ளியில் பயின்ற பலரும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.
இந்நூலை நேஷனல் புக் டிரஸ்ட் - வெளியிட்டிருக்கிறது.


கனவு ஆசிரியர்.
பல்வேறு துறைகளில் புகழ்பெற்றவர்கள், தங்களது பள்ளிக்காலம் , கல்வி குறித்த சிந்தனைகள் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு
கனவு ஆசிரியர்.
வாசிக்க வாசிக்க, நாம் ஆசிரியர் என்பதில் பெருமிதமும் இன்னும் அதிகம் செயல்படவேண்டும் என்ற ஆர்வமும் ஏற்படும்.
க.துளசிதாசன் தொகுப்பாசிரியர்.
பாரதி புத்தகாலயம் வெளியீடு.
நேற்று பிற்பகலில் 9 ஆம் வகுப்பு மாணவனின் தந்தை வந்திருந்தார். ஆட்டோ ஓட்டுநர்.
காலையில்தான் அவர் மகனை சற்றே கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியிருந்தேன். காதல்,காதலி, ரவுடியாவது, என்று பல இன்பங்களை பட்டியலிட்டிருந்தான்.
பையன் எப்படிசார் படிக்கிறான்?
ம்..நல்லா படிக்கிறான். பார்ப்போம். கொஞ்சம் பேச்சு அதிகமாயிருக்கு, வயசு அப்படி...படிச்சிடுவான்!
சார்...பெரியவனப்பத்திக்கூட எனக்கு எந்தக்கவலையும் இல்லை.சின்னவன் ரெம்ப சேட்டை பண்றான். என்ன செய்றதுன்னே தெரியல?
சின்னவன் எங்கள் பள்ளியில் 7 ஆம் வகுப்பில் படிக்கிறான்.
அவ்வப்போது பார்த்திருக்கிறேன். சேட்டைக்காரன்.

 சின்னப்பையன்தானே சரியாயிடுவான்.
இல்லசார்...இப்பவே சிகரெட் குடிக்குறான்...அடிச்சும் பாத்துட்டேன், திருந்த மாட்டேங்குறான்.


பார்க்கிறேன்.
ஒற்றைச்சொல்லோடு அதிர்ந்து நின்றுவிட்டேன்.

பல்வேறு எண்ணங்கள்.
நானும் சிறுவயதில், பீடி குடித்துப்பார்த்ததுண்டு. அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
என்ன இருக்கிறது?
என்ற ஆர்வத்தில் ஊரின் வேறு பகுதில் நண்பன்மூலம் வாங்கி,மறைத்து எடுத்து வந்து வீடு மாடியில் யாருமில்லாத வேளையில் பற்றவைத்தேன். கையில் பீடியை வைத்து தீக்குச்சியில் காட்டி,வாயில் வைத்து தீக்குச்சியைக்காட்டி ஒருவழியாக நெருப்பு பற்றியபின்
ஒரே உறி.....இருமல்...தொடர்ந்த இருமல்.
அன்றோடு முடிந்த ஆசை, இளமைப்பருவத்தில் சிறிது வந்து, முடிந்துபோனது.
எத்தனை பேர் பழக்கத்தை கைவிட இயலாமல் தவிக்கின்றனர்?
ஆர்வக்கோளாறு...தவறுகளை செய்யத்தூண்டுகிறது. பின் விளைவுகளை யார் சொல்வது?
பள்ளிக்கு முக்கிய பொறுப்பு உள்ளது.
அவ்வப்போது கண்காட்சிகள் நடத்தலாம்.
அறிவியல் கண்காட்சிபோல.

இப்போது கணேஷ்,சைனி கைனி என்றெல்லாம் பல்வேறு வகையான புகையிலைகளை வாயில் ஒதுக்கிவைத்துக்கொள்ளும் பழக்கம் மாணவரிடையே பரவிவருகிறது.
வாய்ப்புற்றுநோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.
இவற்றின் தீமைகள் குறித்த படவிளக்கங்களுடன் ஒரு கண்காட்சியை பள்ளியில் ஏற்பாடு செய்தால் மாணவர்கள் மனதில் மாற்றங்களை விதைக்கலாம் என நம்புகிறேன்.

கடிதம்


ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேரு மகளுக்கு எழுதிய கடிதம் குறித்த பாடம்.
கடிதம் எழுதுவதிலிருந்து பாடத்தைத்தொடங்கலாம் என்று எண்ணினேன். ஒவ்வோராண்டும் புதிய மாணவர்களை வீட்டிற்கு கடிதம் எழுத வைப்பது வழக்கம்.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் கடிதம் எழுதி அனுப்பும் பழக்கம் இல்லாமலே ஆகிவிட்டது.

கடிதம் குறித்த பல்வேறு சுவையான செய்திகளைச்சொன்னேன்.
நீங்கள் யாருக்காவது கடிதம் எழுதி அனுப்பியதுண்டா? என்று கேட்டேன்.
யாரும் இதுவரை அனுப்பியதில்லை என்றனர்.
என்னிடம் இருந்த அஞ்சலட்டைகளை ஆளுக்கொன்று கொடுத்தேன்.
அவரவர் வீட்டு முகவரியை எழுதச்சொன்னேன்.


அப்பாவுக்குக்கடிதம்.
வேண்டியதை எழுதிக்கொள்ளலாம்.
ஆர்வமுடன் எழுதினார்கள்.
அனைவரின் கடிதங்களும் அஞ்சல் பெட்டியில் போடப்பட்டன.
ஓரிரு நாட்களில் வீடுகளுக்குச்செல்லும் கடிதங்களால் பெற்றோர் மகிழ்வர்.
சில கடிதங்கள் முகவரி தெரியாமல் பள்ளிக்கே திரும்புவதும் உண்டு.

இன்பம்


9 ஆம் வகுப்பில் தமிழ்ப்பாடம்.
உவமைக்கவிஞர் சுரதா எழுதிய 'இன்பம்' என்ற பாடலை நடத்தவேண்டும்.
ஏற்கனவே நான் இல்லாதபோது பயிற்சியாசிரியை நடத்திமுடித்திருந்தார்.
இருந்தாலும் மறுபடியும் நடத்தலாம் என்று நான் தொடங்கினேன்.
இன்பம் என்றால் என்ன?
என்ற கேள்வியோடு உரையாடலைத்தொடங்கினேன்.
மகிழ்ச்சி, ஆசை, விருப்பம் என்று ஆளுக்கொன்றாகச்சொன்னார்கள்.
எனக்கொரு யோசனை தோன்றியது.
ஆளுக்கொரு தாளை எடுத்து,
அவரவருக்கு இன்பம் தருபவற்றை எழுதச்சொன்னேன்.
நிறைய எழுதினார்கள்.
பயிற்சியாசிரியையிடம் அனைவரும் எழுதியதை கொடுத்து
வாசித்தபின் என்னிடம் தரச்சொன்னேன்.
மதியவேளையில் என்னிடம் அனைத்து தாள்களும் வந்துசேர்ந்தன. வாசித்துப்பார்த்தேன்.
கூட்டுக்குடும்பம்,பணம், நடிகர்,உணவு,விடுமுறை, என்று பலப்பல இன்பங்களுக்கு இடையே ஒரு சிலர்,
காதலியுடன் சினிமா செல்லுதல் இன்பம் , உணவகம் போவது இன்பம் என்றெல்லாம் எழுதியிருந்தனர்.

இவற்றையெல்லாம் வாசித்த பயிற்சியாசிரியை என்ன அதிர்ச்சியை சந்தித்திருப்பார்? என்று எண்ணிப்பார்த்தேன். நாளை கேட்கவேண்டும்.
இப்படி, மாணவர்களை எழுதத்தூண்டியது எது?
எனது வகுப்புகள் பல்வேறு உரையாடல்களின் களமாக இருந்திருக்கின்றன. நான் கொடுத்த சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருகிறதா?
மாணவர்களின் குடும்பச்சூழல் என்ன? விடலைப்பருவத்தில் இருக்கும் இவர்களுக்கு என்ன செய்திகளை சொல்லவேண்டும்?
என்று பலவாறு யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

எது இன்பம்?
மாணவர்கள் இன்பம் குறித்து எழுதிக்கொடுத்திருந்த தாள்களுடன் இன்றைய வகுப்பிற்குச்சென்றேன்.
காதல் குறித்து எழுதியிருந்தவர்களின் பெயர்களை மட்டும் சொல்லி யார் என்று பார்த்துக்கொண்டேன்.
பேசத்தொடங்கினேன்.
" நீங்கள் அனைவரும் பல்வேறு இன்பங்களை பட்டியலிட்டிருக்கின்றீர்கள். மகிழ்ச்சி. இப்போது நான் சொன்ன பெயர்கள் நன்றாக எழுதியவர்கள் என்று அர்த்தமில்லை.
சிலர் காதலியுடன் செல்வது பற்றியும் எழுதியிருக்கிறீர்கள்."
மாணவரிடையே சலசலப்பு.மகிழ்ச்சி.
" உங்கள் வயதும்,சுற்றுப்புறமும் அப்படி. சினிமாவும் அப்படித்தான் இருக்கிறது. உங்களுக்கு முன்னாள் இந்த வயதைக்கடந்து வந்தவர்கள் உங்கள் பெற்றோர்கள். அவர்களிடம் இதுபற்றிக்கேட்டால் சரியான விளக்கங்கள் சொல்லக்கூடும். பள்ளியில் ஆசிரியர்களும் சொல்லலாம். இது குறித்து அறிவுப்பூர்வமாக ஒருநாள் விவாதிப்போம்."
" ஏற்கனவே, படித்து முன்னேறியவர்கள் பலரின் கதைகளை உங்களுக்குச்சொல்லியிருக்கிறேன். நினைவில் கொள்ளுங்கள். நன்கு படித்து அறிவால் முன்னேறியவன், அவனுக்குப்பின் வரும் தலைமுறையை அறிவுடையதாக மாற்றுகிறான். உங்கள் தந்தையை விட நீங்கள் முன்னேறும்போது உங்கள் தலைமுறையே மாறும்."

உங்கள் பட்டியலில் பெரும்பாலும் ஆசையே அதிகம் இருக்கிறது.
ஆசை வேறு, இன்பம் வேறு.
ஆசை, அளவுக்கு மீறும்போது துன்பம் தரும்.
இன்பம், அளவுகடந்தாலும் இன்பமே தரும்.
லட்டு வேண்டும்.என்பது ஆசை. அளவுக்கு மீறினால் துன்பம்.
தாயின் முத்தம் இன்பம். எவ்வளவு கிடைத்தாலும் இன்பம்.
கவிஞர் சுரதா பட்டியலிடும் இன்பங்களை இப்போது பார்ப்போம்.
பாடம் தொடர்ந்தது.
மாணவர்கள் பல்வேறு சூழல்களில் இருந்து வருகிறார்கள்.
சொல்லிக்கொண்டே இருப்பது நம் கடமை. யாராவது கேட்பார்கள்.
ஒருநாள் அவர்கள் புத்திக்கு எட்டும்- என்று பயிற்சியாசிரியையிடம் சொன்னேன்.

கேள்வி



காலாண்டுத்தேர்வு விடுமுறை, NCC முகாம் எல்லாம் முடிந்து ஏறத்தாழ 20 நாட்கள் கழித்து பள்ளிக்கு சென்ற திங்களன்று சென்றேன்.
கடந்த ஒரு வாரகாலமாக பயிற்சி ஆசிரியைகள் எனது வகுப்பை நன்றாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று உதவித்தலைமையாசிரியர் கூறினார்.
9 ஆம் வகுப்பிற்குச்சென்றேன்.
இரு பயிற்சியாசிரியைகள் இருந்தார்கள்.
ஒருவர் 9 ஆம் வகுப்பு, மற்றவர் 6 ஆம் வகுப்பு - தமிழ்.
இருவரின் முதன்மைப்பாடங்களும் வேறு.
ஆசிரியை நன்றாகப்பாடம் நடத்தியதாகவும் தெளிவாக விளக்கம் சொல்லி முதல் இயலில் செய்யுள் பகுதியை முடித்து எழுதிப்போட்டாகிவிட்டது என்றனர், மாணவர்கள்.
குறளில் ' கேள்வி' அதிகாரம்.
முடித்து மனப்பாடப்பாடல்கள் படித்து, இன்று தேர்வு.
வினாவிடைகளைக்காட்டினர்.

நான் இவ்வளவு விரைவாக நடத்துவதில்லையே? என்றேன்.
"மாணவர்கள் சொன்னார்கள். இருந்தாலும் வகுப்பிற்கு தினமும் வந்ததால் இரு செய்யுள் பகுதியையும் நடத்தி முடித்துவிட்டேன்." என்று பயிற்சியாசிரியை சொன்னார்.
பரவாயில்லையம்மா! மீண்டும் பார்ப்போம்.
வழக்கம்போல புத்தகங்களை மூடி வைத்துவிட்டு மாணவர்களிடம் கேட்டேன்.
'கேள்வி' என்றால் என்ன?
பெரும்பாலானோர் 'செவி' என்று பதில் சொன்னார்கள்.
புத்தகத்தை எடுத்துப்பார்க்கச்சொன்னேன்.
சான்றோர் உரைகளைக்கேட்டல் - என்று பொருள் இருந்தது.
பயிற்சியாசிரியையை அருகில் அழைத்தேன். வெறுமனே பாடத்தை நடத்தி எழுதிப்போட்டு படிக்கச்செய்வது மட்டுமே மொழிப்பாட ஆசிரியரின் பணியல்ல.
வகுப்பறை ஆசிரியர் மையத்திலிருந்து மாணவர் மையப்பட்டதாக மாறிக்கொண்டிருக்கிறது.
கற்றல் கற்பித்தல் முறைகள் புதிது புதிதாக வந்துகொண்டிருந்தாலும் பாடங்களை வாசித்து நடத்துதலையே ஆசிரியர்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள்.
புதிதாக என்ன முறைகளைப்பின்பற்றலாம்?
யோசிக்கவேண்டும். பார்ப்போம்.

தோடுடைய செவியன்


சக ஆசிரிய நண்பர் கடுமையான கோபமாகப்பேசிக்கொண்டிருந்தார். ஓர் மாணவன் தலை குனிந்து நின்றுகொண்டிருந்தான்.
"இதென்ன, ரவுடி மாதிரி !,
உன் தலையும் ஆளும்.....!"
நண்பரின் கோபம் அதிகமானது.
மாணவன் பதிலேதும் சொல்லாமல் நின்றிருந்தான்.
என்னவென்று கேட்டேன்.
ஒரு காதில் தோடு போட்டுக்கொண்டு பள்ளிக்குள் வந்ததாக கூறினார்.
பெரும்பாலும் இளம்பருவத்தில் இதுபோல் 'அடையாளச்சிக்கலில்'
தவிக்கிறார்கள்.
என்ன செய்யலாம்?



வளரிளம்பருவத்து அடையாளச்சிக்கலை கடந்துதான் நாமும் வந்திருப்போம்.
'நான் பெரியவனாகிவிட்டேன் மற்றவர்களிலிருந்து நான் வித்தியாசமானவன் ' என்பதை உலகுக்குச்சொல்ல ஒரு சிறுவனுக்கு வழிகள் எப்படித்தெரியும்?
பெரும்பாலும் சினிமா காட்டும் பாதையில் தான் இன்றைய இளைஞன் நடக்கிறான்.
நடை,உடை,பேச்சு,முடி என மாற்ற முடிந்ததையெல்லாம் மாற்றுகிறான்.
வீட்டிலிருந்தும் அந்நியனாகிவிடுகிறான்.
சரியான வழியை ,சொல்லிலும் செயலிலும் காட்டுவது யார் ?எப்படி?

எனது மாணவர்களிடம் பேசும்போது சினிமாவில் இருந்தே உதாரணங்கள் சொல்லுவேன்.
சிவப்பா அழகா இருப்பவர்கள் மட்டுமே கதாநாயகனாக நடிக்க முடியும்.
ஆனா, கறுப்பா சரியா தமிழ் பேசத்தெரியாமல் கதாநாயகனாக ரஜினிகாந்த் வரக்காரணம் அவரோட 'நடை'-style- அது யாரையும் போலச்செய்வது அல்ல, தனித்தன்மையானது. அவர் பெரிய நடிகராயிட்டார் அப்படின்னு அவர் மாதிரியே நாம் எவ்வளவு நல்லா செய்தாலும்,
'அப்படியே ரஜினி மாதிரியே இருக்கு!'
என்று அந்தப்புகழும் அவருக்கே போகும்.
ரஜினியைப்போன்ற முக ஒப்புமை கொண்டவர்கள் நடிக்க வந்தார்கள், காணாமல் போணார்கள்.
ஆனால், கறுப்பாகவும் அழகில்லை என்றாலும் திறமைமிக்க பலர் இப்போது திரைத்துறையில் உள்ளனர்.

அறிவுரை.


கேட்க, யாருக்கும்பிடிக்கது.
சொல்ல, எல்லோருக்கும் பிடிக்கும்.
அறிவுரை சொல்லும்போது, அது நம்மை ஒரு படி மேலே வைக்கிறது.
நம் கர்வம் - முனைப்பு, திருப்தியடைந்துகொள்கிறது.
நான் உயர்ந்தவன்.
அதிலும் ஆசிரியர்களாகிய நாம் அறிவுரை சொல்வதில் அப்பாக்களை மிஞ்சிவிடுவோம்.
வகுப்பறையும் மாணவர்களும் கிடைத்துவிட்டால் நம்மில் பலருக்கு மகிழ்ச்சி பொங்கும்.
நாம் சொன்னவுடன் அவர்கள் மாறிவிடவேண்டும்,
என்றும் எதிர்பார்ப்போம். நம்புவோம்.
நாம் மாறுவோமா? முடியுமா? ஒரே அறிவுரையில்!
சொல்வதைவிட செயல்,
சொற்களைக்கடந்த உரையாடல் மாணவர்களுடன் சாத்தியமாகும்போது மாற்றங்கள் சாத்தியமாகும்.
அறிவுரை சொல்லுதல்-
என்பதே ஒரு போதைதானே!
நானும் முகநூலில் எழுதுவதை அறிவுரை என நினைத்துக்கொள்ள மாட்டேன்.
எண்ணங்களின் பகிர்வு. அவ்வளவுதான்.

நவரச நாயகன் / நாயகி.

05.10.2014

இன்று உலக ஆசிரியர் தினம்.
வாழ்த்துக்கள்.
வகுப்பறை.
ஆசிரியர். எதிரே மாணவர்கள்.
மாணவர்கள் ஒவ்வொருவராக வாசிக்கிறார்கள்.
ஆசிரியர் அவ்வப்போது விளக்கம் சொல்கிறார்.
வாசிக்கும்போது புத்தகத்தையும்,பேசும்போது ஆசிரியரையும் மாணவர்கள் பார்க்கிறார்கள்.
# இரவு நேரம் தூக்கம் வரவில்லை என்றால் ஏதேனும் புத்தகத்தை வாசியுங்கள். விரைவில் தூக்கம் வந்துவிடும்.
# நமக்கு செய்தி பிடிக்கும் என்றாலும் விளக்கப்படங்கள் இல்லாமல் 45 நிமிடங்கள் வெறுமனே செய்தி வாசிப்பவர் மட்டுமே வாசித்துக்கொண்டிருந்தால் பொறுமையாகக்கேட்க முடியுமா?
பெரும்பாலும் வகுப்பறைகள் மட்டும் ஏன் இப்படி நடைபெற வேண்டும்?
ஆசிரியர் மாணவர்கள் அனைவரையும் பார்த்துக்கொண்டே பேசலாம். மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் ஒருவரையே பார்க்கிறார்கள். கவனிக்க முயல்கிறார்கள்.
அவர்களின் கவனம் நம்மீது நிலைக்க என்ன செய்யலாம்?
ஆசிரியர் நவரச நாயகன் / நாயகி ஆக வேண்டும்.
சொல்லும் செய்திக்கேற்ற முகபாவங்களை வெளிப்படுத்தவேண்டும்.
குரலில் ஏற்ற இறக்கங்கள், உணர்ச்சி வேண்டும்.
ஒரே இடத்தில் நிற்காமல் வகுப்பறை முழுதும் இயங்கவேண்டும்.
ஆசிரியர் சிறந்த நடிகராக இருக்க முயலவேண்டும்.
மாணவர்கள் அமரும் முறையை மாற்றியமைக்கவும் முயற்சிக்கலாம்.
அவ்வப்போது வகுப்பைவிட்டு வெளியே மாணவர்களை அழைத்துச்சென்று வட்டமாக அமரவைத்து பாடம் நடத்தலாம்.
வகுப்பறை என்னும் நாடக மேடையில் நாமும் மாணவர்களும் நடிகர்களே.
நாமே செயல்பட்டுக்கொண்டிராமல் மாணவர்களையும் ஈடுபடவைப்பதிலேயே கற்றல் கற்பித்தல் நிகழ்கிறது.

ஆசிரியர் நவராத்திரி - 9 - அமைதி.


நவராத்திரியை முன்னிட்டு நவரசங்கள்- ஒன்பது உணர்ச்சிகள், ஆசிரியருக்குப்பயன்படுபவை என்று மனதில் தோன்றியதை எழுதலாம் என இத்தொடரைத்தொடங்கினேன்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப
(தொல்காப்பியம், மெய் 3)
என்று எட்டு மெய்ப்பாடுகளுடன் தொல்காப்பியர் நின்றுவிட்டார். நவரசம் என்று பலரும் பல்வேறு சுவைகளைச்சொல்கின்றனர். குழப்பம் வேண்டாம் என்று நான் தொல்காப்பியரைப்பின்பற்றினேன்.
ஒன்பதாவது சுவையாக பெரும்பாலானோர் சொல்வது ' அமைதி'.
எண்வகை மெய்ப்பாடுகளும் இல்லாநிலை என்பதால் தனியே தொல்காப்பியர் கூறாது விடுத்தார் என்றும் கொள்ளலாம்.
அமைதி.
பிறரின் கவனத்தை தன்மீது திருப்ப வேண்டும் என்பதற்காக நாம் பல்வேறு விளையாட்டுகளை விளையாடுகிறோம் என்று மனோதத்துவம் கூறும். அதில் முக்கியமான ஒன்று ' Kiss me or Kick me'
எனும் விளையாட்டு. குழந்தைகள் நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காவே சேட்டைகளைச்செய்கின்றார்கள்.
ஆசிரியர், கோபப்படாமல் முகத்தில் அமைதியைக்காட்டி அன்பாக எடுத்துக்கூறும்போது மனமாற்றம் மாணவரிடையே சாத்தியமாகும்.
உணர்வுகளைக்கடந்த அமைதி புத்தநிலை.
அன்பின் முழுமை.

ஆசிரியர் நவராத்திரி - 8 - உவகை.


மகிழ்ச்சி.
அனைவரும் விரும்பும் சுவை.
பாராட்டுக்கள் மகிழ்ச்சியைத்தரும்.
ஆசிரியர்களாகிய நாம் பாராட்டப்பட்டிருக்கிறோமா?
நமது புதிய முயற்சிகளுக்காக,
வெளிப்படையாக நாம் பாராட்டப்படுவதுபோல் தோன்றினாலும் அதிகமாக விமர்சிக்கப்படுகிறோம்.
குறை சொல்லப்படுகிறோம்.
மகிழ்ச்சியில் முழுமையாகப்பங்கு பெறுபவர்களும் பகிர்ந்து கொள்பவர்களும் குறைவு.
குழந்தைகள்,
பாராட்டைப்பெரிதும் விரும்புகின்றனர்.
முதலிடம் பெறுபவர்களை மட்டுமல்ல,
வகுப்பறையில் ஒவ்வொரு குழந்தையையும் பாராட்ட வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் பாராட்டிப்பாருங்கள்.
வகுப்பறை மாற்றங்களின் விளைநிலமாகும்.

ஆசிரியர் நவராத்திரி - 7 - பெருமிதம்.


என தந்தையார் சொல்லுவார்,
" இந்த வருஷமாவது நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பம் குடுடா!"
அவருக்கு என்னவோ அந்த விருதின்மேல்
அவ்வளவு ஆசை.( அவர் ஆசிரியரல்ல).
நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் அதிக கேலிக்குரியதாகவே மாறி வருகிறது.
நியாயமாக சிலருக்குக்கிடைத்தாலும் " நான் நேர்மையாக வாங்கினேன்" மற்றவர் போல் 'வாங்கவில்லை' என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.
எங்கேனும் நமது மாணவர்கள் நம்மிடமோ பிறரிடமோ,
" என் ஆசிரியரால் நான் நன்றாக இருக்கிறேன்"
என்று சொல்லக்கேட்கும்போது நினைத்தாலும் மறைக்கமுடியாதபடி
ஆசிரியரின் முகத்தில் தோன்றும் பெருமிதமே,
அவர் வாழ்நாளில் பெரும் உயரிய விருது.

இன்றைய நிலையில் ஆசிரியர்கள் பல்வேறு விமர்சனங்களை எதிர்நோக்கிச்செயல்பட வேண்டியுள்ளது.
எல்லாவிதமான உணர்வுகளின் எதிர்மறையான தாக்குதல்களிலிருந்து ஆசிரியரைக்காக்கும் ஒரே மெய்ப்பாடு ' பெருமிதம்'.
ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.
நான் ஆசிரியர்.
நாளைய தலைமுறை என் கையில்.
நானே,
வருங்காலத்தலைமுறையை வடிக்கும் சிற்பி.

ஆசிரியர் நவராத்திரியில் 'அச்சம்' குறித்த பதிவின் கருத்துக்களில் CCE குறித்த செய்திகள் மகிழ்ச்சியைத்தந்தன. அது குறித்து......
Muthukrishnan Ellappan நீங்கள் சொல்வது உண்மையே. ஆனால், பல்வேறு செயல்பாடுகள் இருப்பதால் புதிய கல்விமுறை போன்ற தோற்றமும் CCE முறை தருகிறது.
CCE முறையை பல ஆசிரியர்கள் விரும்பவில்லை.ஏன் ?
நீண்டகாலமாக பின்பற்றிவந்த நடைமுறைகள் மாறும்போது அனைத்து ஆசிரியர்களுக்கும் தெளிவாக எடுத்துச்சொல்லப்பட்டிருக்கவேண்டும்.
ஓரிரு நாட்களில் சட்டம்போல சில செய்திகள் சொல்லப்பட்டன.
ஆசிரியர்கள் செயலில் இறங்கியபின் என்னென்ன சந்தேகங்கள் ஏற்படுகின்றன? என்று பார்த்து சரி செய்யப்படவில்லை.
SSA பயிற்சிகளும் "இப்படிச்செய்" என்று சொல்வது போலவே அமைந்தன.
மாணவர்களுடன் நேரடியாக செயல்படுபவர்கள் ஆசிரியர்களே.
அவர்களின் சந்தேகங்கள் முறையாகத்தீர்த்துவைக்கப்படவே இல்லை.

விளைவு.....
செயல்பாடுகள் இயந்திரத்தனமாக மாறியிருக்கின்றன.
அரசுத்தேர்வுகள் மதிப்பெண்ணை நோக்கியே ஓடும்போது பெற்றோர்கள் எல்லா வகுப்புகளிலும் அதையே விரும்பினர்.
( CCE பற்றிய செய்திகள் பெற்றோரை அடையவே இல்லை)
மேல்வகுப்பு ஆசிரியர்களும் RTE குறித்த சரியான புரிதல் இன்றி
"தர்ம பாஸ்" என்று கேலிபேசும் நிலையை CCE அடைந்துகொண்டிருக்கிறது.
ஆங்காங்கே சில ஆசிரியர்களே CCE குறித்த புரிதலோடு இயங்கிவருகிறார்கள்.
ஆங்கில மருத்துவம்போல உடனடி விளைவுகள் எதிர்பார்க்க இயலாது எனினும் செயல்பாடுகள் முறையாகக்கவனிக்கப்பட வேண்டும்.
9 ஆம் வகுப்புகளில் CCE செயல்பாடுகள் இன்னும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை.
புதிய முறைகள் அறிமுகம் ஆகும்போது ஆசிரியர்களும் ஆர்வமுடன் தேடவேண்டும். CCE ஆசிரியரின் புதுமைச்சிந்தனைகளுக்கு இடம் தரக்கூடியது.
வகுப்பறைக்கு வெளியே வர ஆசிரியர்கள் முயன்றால் புதிய தலைமுறை உருவாகும்.
30.09.2014
ஆசிரியர் நவராத்திரியில் 'அச்சம்' குறித்த பதிவின் கருத்துக்களில் CCE குறித்த செய்திகள் மகிழ்ச்சியைத்தந்தன. அது குறித்து......

 Muthukrishnan Ellappan   நீங்கள் சொல்வது உண்மையே. ஆனால், பல்வேறு செயல்பாடுகள் இருப்பதால் புதிய கல்விமுறை போன்ற தோற்றமும் CCE முறை தருகிறது.
CCE முறையை பல ஆசிரியர்கள் விரும்பவில்லை.ஏன் ?
நீண்டகாலமாக பின்பற்றிவந்த நடைமுறைகள் மாறும்போது அனைத்து ஆசிரியர்களுக்கும் தெளிவாக எடுத்துச்சொல்லப்பட்டிருக்கவேண்டும்.
ஓரிரு நாட்களில் சட்டம்போல சில செய்திகள் சொல்லப்பட்டன.
ஆசிரியர்கள் செயலில் இறங்கியபின் என்னென்ன சந்தேகங்கள் ஏற்படுகின்றன? என்று பார்த்து சரி செய்யப்படவில்லை.
SSA பயிற்சிகளும் "இப்படிச்செய்" என்று சொல்வது போலவே அமைந்தன.
மாணவர்களுடன் நேரடியாக செயல்படுபவர்கள் ஆசிரியர்களே.
அவர்களின் சந்தேகங்கள் முறையாகத்தீர்த்துவைக்கப்படவே இல்லை.

விளைவு.....
செயல்பாடுகள் இயந்திரத்தனமாக மாறியிருக்கின்றன.
அரசுத்தேர்வுகள் மதிப்பெண்ணை நோக்கியே ஓடும்போது பெற்றோர்கள் எல்லா வகுப்புகளிலும் அதையே விரும்பினர்.
( CCE பற்றிய செய்திகள் பெற்றோரை அடையவே இல்லை)
மேல்வகுப்பு ஆசிரியர்களும் RTE குறித்த சரியான புரிதல் இன்றி
"தர்ம பாஸ்" என்று கேலிபேசும் நிலையை CCE அடைந்துகொண்டிருக்கிறது.

ஆங்காங்கே சில ஆசிரியர்களே CCE  குறித்த புரிதலோடு இயங்கிவருகிறார்கள்.
ஆங்கில மருத்துவம்போல உடனடி விளைவுகள் எதிர்பார்க்க இயலாது எனினும் செயல்பாடுகள் முறையாகக்கவனிக்கப்பட வேண்டும்.
9 ஆம் வகுப்புகளில் CCE  செயல்பாடுகள் இன்னும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியவை.
புதிய முறைகள் அறிமுகம் ஆகும்போது ஆசிரியர்களும் ஆர்வமுடன் தேடவேண்டும். CCE ஆசிரியரின் புதுமைச்சிந்தனைகளுக்கு இடம் தரக்கூடியது. 
வகுப்பறைக்கு வெளியே வர ஆசிரியர்கள் முயன்றால் புதிய தலைமுறை உருவாகும்.

Saturday 1 November 2014

ஆசிரியர் நவராத்திரி - 6 - வெகுளி.


ஆசிரியர் வெகுளியுடன் இருக்கவேண்டும்.
மனிதன், சிந்திக்கத்தெரிந்தவன், ஆறாம் அறிவு உண்டு.
நல்லது கெட்டது எனப்பகுத்தறியும் பண்புடையவன்.
நம்மைவிடக்குறைவான அறிவு படைத்த உயிரினங்கள் எல்லாமே தக்க நேரம் வரும்போது வெகுளி பெருக்குகின்றன.
ஆசிரியர்கள்?
கற்ற கல்வி, சிந்தனையைத்தூண்டியதால் அமைதி காக்கிறோமா?
சமூகத்தில் அன்றாடம் சாதாரணமாக நிகழும் கேடுகள் குறித்து தார்மீக வெகுளி கொண்டு எதிர்வினையாற்றியிருக்கிறோமா?
சமூகக்கேடுகள் குறித்து நாம் வெகுளி பெருக்கி,
மாணவருக்கும் சொல்லித்தரவேண்டும்.
கதைகள், உணர்வுப்பூர்வமான கதைகள் பிஞ்சு மனங்களில் பதிக்கப்படவேண்டும்.
சமூகத்தின் தவறுகள் மேல் எழும் நமது வெகுளி மாணவருக்கும் மாற்றப்படும்போது புதிய தலைமுறை உதயமாகும்.

"அந்தப்பையன் கள்ளங்கபடம் இல்லாதவன்,வெகுளி!"
என்ற ஒரே பொருளிலேயே 'வெகுளி' என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.
வெகுளியின் நேரடியான பொருள் -கோபம்.
ரௌத்திரம் பழகு.

ஆசிரியர் நவராத்திரி - 5 - அச்சம்.


'வாத்தியார்ன்னு சொன்னாலே வயித்துல புளியக்கரைக்கும்'
போன தலைமுறை மாணவர்கள்.
'வகுப்புக்குள்ள போறதே, காட்டுக்குள்ள போறமாதிரி'
இன்றைய ஆசிரியர்கள்.
மொத்தத்தில் ' பள்ளி ' அச்சத்தின் உறைவிடம்.

மாணவர்களுக்கு கல்வி மேல் ஏற்படும் அச்சம், ஆசிரியரின் மேலுள்ள அச்சம் போலத்தோன்றுகிறது.
அதிகாரிகள், விளக்கப்படாத கல்விமுறைகள், விவாதிக்கும் ஊடகங்கள்,கேலி பேசும் பொதுமக்கள், பணிச்சுமை, புரிந்துகொள்ள இயலாத மாணவர்கள், என்று பலமுனைத்தாக்குதலில்
பகிர்தலுக்கு வழியின்றி மன அழுத்தத்தில் ஆசிரியர்கள்.
பயம்..அச்சம்.
அச்சம், கண்களை மூடிக்கொள்ளச்செய்யும்.
அச்சம் தவிர்த்து விழி திறந்தால் வழி கிடைக்கும்.
ஆசிரியர்கள் தன்னையும் உணர்ந்துகொண்டு புதிய தலைமுறையை உருவாக்கும் உன்னத பணியில் இருப்பவர்கள்.
பள்ளி எனும் வயலில் முக்கிய களை- அச்சம்.
அச்சம் தவிர்.

ஆசிரியர் நவராத்திரி - 4 - மருட்கை.


உறவினர் வீடுகளுக்குச்செல்கிறோம். குழந்தைகள் இருந்தால் என்ன செய்வார்கள்?
நன்கு பழகவில்லை என்றாலும் நாம் சிரித்த முகத்துடன் அணுகினால்
நெருங்குவார்கள்.
அடுத்து....
அவர்களின் பொக்கிஷங்களை எடுத்துவந்து காட்டத்தொடங்குவார்கள்.
பொம்மை, சிறு பொருட்கள்,வரைந்த படங்கள்....
முதல் பொருளைக்காட்டும்போதே நம் சிரிப்புடன் சிறிது வியப்பையும் கலந்து ஆச்சரியத்துடன் பார்த்தோம் என்றால் அடுத்த பொருட்கள் தொடரும்.
இன்னும் ரகசியமாக அவர்கள் சேர்த்துவைத்திருக்கும் மூடிகள்,ரப்பர்,
மயிலிறகு என்று குழந்தைகளின் உண்மையான பொக்கிஷ உலகுக்குள் நாமும் நுழைத்து வியந்து, குழந்தையாகலாம்.
பள்ளியிலும் மாணவர்கள் தமது படைப்புகளுக்கு இதைத்தான் ஆசிரியரிடம் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால், சிலர் திருத்தத்தொடங்கிவிடுகிறோம்.

புன்னகையுடன் அவ்வப்போது சேரும் ஆச்சரியமே அதை பொன்னகை ஆக்கும்.
சிரிப்பின்மேல் சிறிது மருட்கை தூவி மாணவரின்
படைப்புகளை அணுகுவோம்.
உள்ளத்தில் இடம் பிடிப்போம்.

ஆசிரியர் நவராத்திரி - 3 - இளிவரல்.


மூன்றாம் சுவை இளிவரல்- இழிப்பு.
மதிய உணவு இடைவேளைகளில் எனக்கு மைதானத்தில் மாணவர்களை கவனிக்கும் பொறுப்பு.
சுற்றிக்கொண்டே இருப்பேன்.
மாணவர்கள் சாப்பிடும்போது
ஆசிரியரைப்பார்த்தால் அன்போடு கேட்பார்கள்,
சாப்பிடுங்க,
பெரும்பாலும் பழையசோறு அல்லது மோரும் ஊறுகாயும்.பலவகையான உணவுகளும் இருக்கும்.
சாப்பிடுங்க' என்று நீட்டும் மாணவரிடமிருந்து சிறிது எடுத்துச்சாப்பிடாமல் இருந்ததேயில்லை.
எனக்குப்பிடிக்காத காய்கறியாக இருந்தால், இது பிடிக்காது என சிரித்தபடி மறுப்பேன்.
எனக்குக்கொடுத்தபின்பே சாப்பிடும் மாணவர்களும் உண்டு.
சிறிதளவு உணவு-சிரித்தமுகம்
அன்பைப்பரிமாற இதுவும் ஒரு வழி.
சிலர்,
மாணவர் ஏதேனும் நீட்டியவுடன் முகம் சுழிப்பார்கள்.
மோப்பக்குழையும் அனிச்சம்.......என்று சொல்லித்தருவதை விட செயலில் காட்டுவதே அழகு.
ஒருவகையில் மாணவரும் விருந்தினரே.

இளிவரல் - அருவருப்பு, ஆசிரியர் விலக்கவேண்டிய சுவைகளுள் முக்கியமானது.

ஆசிரியர் நவராத்திரி - 2- அழுகை.


இரண்டாம் நாளான இன்று ஆசிரியருக்கு அலங்காரம், அழுகை.
ஒன்பது சுவைகள்- ரசங்கள்- ஆசிரியரின் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்று எழுதத்தொடங்கினேன்.
இரண்டாவது சுவையே அழுகை.
ஆசிரியருக்கு அழுகை எவ்வாறு முக்கியமாகும்?
யார்தான் அழுகையை விரும்புவார்?
கதையே இல்லாவிட்டாலும் நகைச்சுவைத்தோரணங்களால் ஆன திரைப்படங்கள் ஓடிவிடுகின்றன.
அழுகை அதிகம் என்று நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வசூலில் தோல்வியடைந்து விருதுகளை மட்டுமே பெறுகின்றன.
ஆனால், வீடுகள் தோறும் தொலைக்காட்சித்தொடர்கள் பெரும்பாலும் சோகம் பிழிகின்றன.
வாழ்வில் மகிழ்ந்த தருணங்களை விட சோகமான நிகழ்வுகளே மனதைவிட்டு அகலாமல் தங்கிவிடுகின்றன.
சில வேளைகளில், கருத்துக்களைச்சொல்லும்போது இடையே சிறிது சோகம், அழுகை கலக்கும்போது மாணவரின் மனதில் நன்கு பதியும்.
வெறுமனே செய்தியாகவோ, உணர்வுக்கலப்பின்றி தட்டையாகவோ சொல்லாமல் உணர்வின் உன்னத வெளிப்பாடாக அமையும்போது
வாழ்நாள் முழுதும் மாணவர் மனதில் நீங்காமல் நிலைக்கும்.

பகத்சிங் நாட்டுக்காக செய்த தியாகத்தை சொல்லும்போதே வீரமும் அழுகையும் மாறிமாறி சொற்களில் கலந்து உணர்வுப்பூர்வமாக வெளிப்படும்போது நாட்டின் விடுதலைக்கு முன்னோர் செய்த தியாகங்கள் பசுமரத்தாணியாகும்.
இதுவே இன்றைய அத்தியாவசியத்தேவை.

ஆசிரியர் நவராத்திரி - 1 - நகை.


நவராத்திரி தொடங்கிவிட்டது.
கோவில்களில் கொலு, கோலாகலம்.
பள்ளிகளில் தேர்வு.
நவராத்திரி கொண்டாட காரணங்கள் சொல்லப்படுகின்றன.
இந்த ஒன்பது நாளும் ஆசிரியருக்கு ஏற்ற ஒன்பது செய்திகளைப்பற்றி சிந்தித்தால் என்ன?
என்று தோன்றியது.
நவரசங்களை எடுத்துக்கொண்டேன்.
ஆசிரியர், தேர்ந்த நடிகராக இருக்கவேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குணத்தைப்பற்றி என் சிற்றறிவுக்கு எட்டிய எண்ணங்களை எழுதுகிறேன்.

ஆசிரியர் நவராத்திரி - 1 - நகை.
நவரசங்களில் இது ஒன்றே மற்றவர்களை எளிதில் கவர்வது.
சிரிப்பு. நகை. புன்னகை.
ஆசிரியராக பணியேற்றவுடன் பள்ளி சென்ற முதல் நாள்.
மனம் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது.
சக ஆசிரியர்கள் அன்பைத்தெரிவிக்க, யாரைப்பார்த்தாலும் முகம் நிறைய ஆர்வமும் சிரிப்புமாக என் உணர்வை வெளிப்படுத்திக்கொண்டிருந்தேன்.
வகுப்பறைக்குச்செல்ல வேண்டிய நேரம்.
தலைமையாசிரியரின் சொல்லுக்கேற்ப ஒரு ஆசிரியர் என்னை அழைத்துச்சென்றார்.
வழியில்,
தம்பி,
இப்படியே சிரிச்சுக்கிட்டே இருக்காதீங்க. பசங்க,ரவுடிப்பசங்க.
கொஞ்சம் சிரிச்சாலும் தலைல ஏறி உக்காந்துடுவாங்க.
கொஞ்சம் கடுமையா,குரலை சத்தமா உயர்த்தி பேசுங்க.
எதாவது கிண்டலா பேசுனா யோசிக்காம பட்டுன்னு அடிச்சிடுங்க. அதுவும் பெரிய பையனா இருந்தா பயப்படாம அடிச்சிடுங்க. எல்லோரும் பயந்துருவானுக. அப்புறம் கவலையே இல்ல.
எனக்கு பயம் ஆரம்பமாகிவிட்டது.
நான் எப்போதுமே சிரித்த முகத்துடன் இருந்தே பழக்கப்பட்டவன்.
வகுப்பில் மாணவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவைத்து நீண்ட எச்சரிக்கையும் செய்துவிட்டு கிளம்பினார்.
மாணவர்கள் அமைதியாக என்னைப்பார்த்தனர்.நானும்.
ஒருவன் பேச்சைத்தொடங்கினான்.
சார், உங்க பேரு?
சொன்னேன்.
எங்க பேர கேளுங்க.
பேச ஆரம்பித்தேன்.
தம்பிகளா, வழக்கமான இதுமாதிரி சடங்குகளெல்லாம் எனக்குப்பிடிக்காது.
உங்களுக்கு நான் பாடம் சொல்லித்தர வந்திருக்கேன்.
என்னோட வாத்தியார் எப்படி இருக்கணும்னு நான் ஆசைப்பட்டேனோ அப்படி நான் உங்ககிட்ட நடந்துக்கணும்னு ஆசைப்படுறேன்.
நான் எப்படி நடந்துக்கணும்னு நீங்க விரும்புறீங்க?
ஆளுக்கொரு தாளெடுத்து எழுதுங்க.
இன்றுவரை என் முதல் வகுப்புகள் இப்படியே தொடங்குகின்றன.
மாணவரிடம் சிரித்த முகம் காட்டுகிறேன்.
அதையே என்னிடமும் காட்டுகிறார்கள்.
சிலர் சேட்டைகள் செய்யலாம்.
சிலர் ஏமாற்றலாம்.
வேறு ஒரு நேரத்தில் சிரித்தபடி மறைமுகமாகச்சொல்வேன்,
நீ,அப்படி ஏமாற்றியது எனக்குத்தெரியும்.
மாறிவிடுவார்கள்.
வீட்டில் பிள்ளைகள் செய்வதில்லையா?
ஒற்றைச்சிரிப்பு மாற்றங்கள் தரும்.
நம்புகிறேன். இன்றுவரை பொய்க்கவில்லை.

கனவுகளை விதைக்கும் மந்திரவாதி



பகலில் நெடுநேரம் தூங்கினேன்.
இரவு முழுதும் பல்வேறு சிந்தனைகள்.
இணையத்திலும் பல்வேறு விவாதங்கள்.
அன்றாடம் எத்தனையோ சாமானியர்கள் எவ்வளவோ துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.
ஊடகங்கள், VIP என்று வெளிச்சம் பாய்ச்சுகின்றன.
புலியால் கொல்லப்பட்டவன் சாமானியன் என்பதால் மனநலம் இல்லாதவனாகி, குடும்பமே குழப்பத்தில் இருக்கிறது.
அடிப்படையான மனிதம் காணாமல் போயிருக்கிறது.
அங்கொன்றும் இங்கொன்றும் நம்பிக்கை தரும் மனிதர்கள் இயங்கினாலும் பேராசை,சுயநலமே அதிகம்.
கடினமாய் உழைத்து கனவுகளில் வாழப்பழகிவிட்டது சமூகம்.
வளர்ந்துவிட்டவர்களை ஏதும் செய்துவிட முடியாது.
'மயானத்தத்துவம்' பேசி மறப்பவர்கள்.
எதிர்காலம் மட்டுமே ஒரே நம்பிக்கை.
குழந்தைகள், வாழும் சூழல் எவ்வளவு வேறுபட்டதாக இருந்தாலும்
பள்ளிச்சூழல் சரியாக அமைந்துவிட்டால் மனங்களில் மாற்றங்களை விதைத்துவிடலாம் என நம்புகிறேன்.
வகுப்பறைகள் மாற்றங்களை காண வேண்டும்.
கதைகள்,செயல்பாடுகள், உரையாடல்கள் போன்று பகிர்தல் அதிகமுள்ள சிந்தனைக்களமாக வகுப்பறைகள் மாறவேண்டும்.
கனவுகளை விதைக்கும் மந்திரவாதி ஆசிரியரே.

'கற்க கசடற'


தேர்வு முடிந்ததும் மாணவர்களை அனுப்பிக்கொண்டிருந்தோம்.
எங்கள், இடைநிலை உதவித்தலைமையாசிரியர் அருகே நின்றுகொண்டிருந்தார். மெதுவாக பேச்சுக்கொடுத்தேன்.
என்ன,அன்னைக்கு ஒரே சத்தமா இருந்துச்சு!
நான் பதிலுக்கு சத்தமிட்டது நினைவுக்கு வந்திருக்கலாம். இருந்தாலும் கேட்டதால் மெதுவாக பதில் சொல்ல ஆரம்பித்தார்.
ஆமா, இந்த விகடன்ல ஆசிரியரபத்தி தப்பா எழுதிக்கிட்டே இருக்குறான்....
அப்புடியா....எப்போ, நீங்க வாசிச்சீங்களா?
இல்ல, சொன்னாங்க....
அதான பாத்தேன், போன ரெண்டு வாரம் மட்டும்தான் நேரடியா ஆசிரியர்களை எழுதிருக்காங்க,
கொஞ்சம் தப்பு கொஞ்சம் சரி மாதிரி தெரியுது.....
அந்த வேலைநாள் பத்தி ஏதோ ....
அட, ஆமா, அத சொன்னது நம்ம நண்பர்தான்,நான் கொஞ்சம் திருத்தித்தர்றேன்னு சொன்னேன், அவசரப்பட்டு எழுதிட்டாங்க.(சும்மா ரீல்)..மேலும் தொடர்ந்தேன்.
ஆசிரியர்களின் விடுமுறைகள் பற்றிய புலம்பல்கள் அதிகப்பிரசங்கம். ஆனா, கற்றல் கற்பித்தல் நாட்கள் பற்றிய கணக்கு.......
ஒவ்வொரு பள்ளிக்கும் வேலை நாள் மாறுது சார்,
அவன் எழுதுனது தப்பு.
9 ஆம் வகுப்பு வரைக்கும் நிறைய நாட்கள் கற்றல் கற்பித்தல் நாள்.
10 ஆம் வகுப்புக்கு அவுங்க சில தேர்வுகள் நடக்குற நாட்களை கழிச்சிருக்காங்க.ஆனா இடைப்பருவத்தேர்வுகள் ,மூன்று திருப்புதல் தேர்வுகள் நடக்குற நாளெல்லாம் கழிச்சா இன்னும் குறையும்.
12 ஆம் வகுப்புக்கு செய்முறைத்தேர்வு நாட்களையும் சேத்துக்கலாம்.அதுக்கு அப்புறம் அவன் பள்ளிக்கே வரமாட்டான்.....
11 ஆம் வகுப்பு தாமதமா தொடங்கி சீக்கிரமா முடிஞ்சிடும்.
இப்போ சொல்லுங்க....கூட்டிக்கழிச்சுப்பாத்தா
கணக்கு எப்புடி!
நீங்க,விகடனுக்கு என்ன பதில் எழுதப்போறீங்க?
டேய்...ஒழுங்கா வரிசையா போ......
உதவித்தலைமையாசிரியர் மெதுவாக நகர்ந்தார்.
எங்கள் இடைநிலை உதவித்தலைமையாசிரியர் விளையாட்டாய் பேசினாலும் விகடனின் 'கற்க கசடற' நமக்கு சிலவற்றை முன்னெச்சரிக்கை செய்கிறது.
அரசுக்கும் மக்களுக்கும் முன்னெச்சரிக்கை செய்யவேண்டியதும்
விகடனின் கடமை.

தேர்வுகள்


தேர்வுகள் தொடங்கிவிட்டன.
பணிகளிலேயே கடினமானதாக நான் உணர்வது தேர்வறைக்கண்காணிப்பாளர் பணியையே.
காலையும் மாலையும் மூன்று மணிநேரம்.
தேர்வறையில் உட்காரும் பழக்கமும் எனக்கு இல்லை.
அதிகம் கேள்வி கேட்பவன் என்பதால் எனக்குப்பணியும் அதிகமாக இருக்கும். பணியில் என்றும் சோம்பேறித்தனம் காட்டியதில்லை. எனினும் மனம் சற்றே வெறுப்படையும்.
அதை மாணவரிடம் காட்டிக்கொள்ள மாட்டேன்.
மாணவர்களில் பலரும் எழுத்துச்சோம்பேறிகளாக உள்ளனர்.
கொஞ்ச நேரமே எழுதிவிட்டு சும்மாவே இருக்கின்றனர். வேடிக்கை அல்லது தூக்கம்.
எதையாவது எழுது என்று சொன்னாலும் கேட்பதில்லை.
எழுத சோம்பேறித்தனப்படுவதாலேயே எழுத்துப்பிழைகள் அதிகமாக வருகின்றன.
பாடத்திட்டம், பயிற்று முறைகள் ஆகியன மாற்றம் கண்டு வருவதுபோல் தேர்வுமுறையும் மாறினால் என்ன?
எப்படி?

பெரியார்

வழக்கம் போல் பாடம் முடிந்தபின் கடைசி 15 நிமிடங்கள், இன்று யாருடைய பிறந்தநாள் என்று கேட்டேன். அதுவரை அமைதியாக இருந்த மாணவர்கள் மகிழ்ச்சியானார்கள்.
சிலர் கத்தினர்,"பெரியார்"
முழு பேரு?
ஒருவன் சொன்னான்,"பெரியார்.ஈ.வெ .ராமசாமி".
யாரு அவரு?
நீங்க சொல்லுங்க!
வழக்கம்போல் தொடங்கினேன்.
ஒரு தலைவர் என்ன செய்தார் என்று பார்க்கணும்னா, அவர் இல்லாம போயிருந்தா என்ன ஆயிருக்கும் அப்படின்னு பாத்தாலே போதும்.
பெரியார் இல்லேன்னா.... இப்படி நாம எல்லோரும் ஒன்றாக வகுப்புல இருந்திருக்க முடியாது.
சிலர் படிக்க, சிலர் ஆடு மாடு மேய்க்க,ஆளுக்கொரு வேலை பார்த்துக்கிட்டு இருந்திருப்போம்.
என்று தொடங்கி சில செய்திகளைச்சொன்னேன்.
சிறிது நேரம் கழிந்ததும் சிலர் பேச ஆரம்பித்தனர்.சிறு குசும்புகள்.
பின் வரிசையில் கவனம் சிதற ஆரம்பித்தது.
எனது பேச்சை நிறுத்திவிட்டேன்.
மீண்டும் சொன்னேன்,
"பெரியார் இல்லையென்றால் நீங்கள் இப்படி இருந்திருக்க முடியாது".
சிலர் கவனிக்காமல் சிரித்துக்கொண்டிருந்தனர்.
நான் சொல்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன்.
ஒரு சிலர், "ஐயா,சொல்லுங்கள்" என்றனர்.
"எல்லாம் சொல்லிவிட்டேன்". அமைதியானேன்.

அரசுப்பள்ளி

ஆசிரியர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் ஏன் சேர்க்கவில்லை? என்ற வினா எழுப்பப்படும்போதெல்லாம் என்னென்ன குறைபாடுகள் உள்ளன என்று நடுநிலையோடு விவாதம் செய்யாமல் ஏன் கோபப்படுகிறோம்?
அரசு மருத்துவர், தனது பிள்ளைகளை எங்கு காட்டுகிறார்?
ரேஷன் கடை, இன்ன பிற அரசுத்துறைகளை உதாரணம் காட்டுவதே ஒருவகையில் நம் அறியாமையைக்காட்டுகிறது.
அரசு மருத்துவர் தனியார் மருத்துவமனையை நாடக்காரணம்,
அரசு மருத்துவமனையில் தரம் இல்லை.
அதேபோல் அரசுப்பள்ளியில் தரம் இல்லை என நாம் ஒத்துக்கொள்ளத்தயாரா?
இரு மருத்துவமனைகளிலும் மருத்துவம் செய்வதென்னவோ ஒரே மருத்துவர்தான் என்பதும் முரண்.
சரி. நுகர்பொருளோடு கல்வியை ஒப்பிட முடியுமா?
கல்வி, அறிவு சார்ந்தது.
பிற துறையினரின் தவறுகள் சிறு பாதிப்பையே தரும்.
ஆசிரியரின் தவறுகள்,
வருங்காலத்தலைமுறையையே பாதிக்கும்.
ஆசிரியர் பற்றாக்குறை, கட்டமைப்பு, இடமாறுதல், பயிற்றுமுறை குழறுபடிகள் என்று சொல்லப்படும் காரணங்கள் ஆர்வமிக்க ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் சரிசெய்ய இயலும்.

யோசிக்கலாம்.


கல்வி, அதன் பயன் குறித்த தீர்க்கமான சிந்தனை பெரும்பாலான ஆசிரியர்களிடம் இல்லை.பணம் குறித்தே யோசிக்கிறார்கள்.கல்வியும் அதை நோக்கியே நகர்ந்துள்ளது.
விலை உயர்ந்த பள்ளியில் முதலீடு செய்தால் நல்ல வேலையில் அறுவடை செய்யலாம் என குழந்தைகளின் கண்ணைக்கட்டி ஓடவிடுகிறார்கள். அதற்காகவே அரசுப்பள்ளிகள் தரக்குறைவுடன் நடத்தப்படுகின்றன. வெளிப்படையாக ஆசிரியர் தெரிவதுபோல மறைமுகக்காரணிகளும் உண்டு. எனினும் ஆசிரியர்களுக்கே பெரும்பங்கு உண்டு.
அருகமைப்பள்ளி குறித்து யாரும் மூச்சு விடுவதில்லை. இன்னும் இலவசத்திட்டங்களை முறைப்படுத்தினாலே நல்ல பயன் கிடைக்கலாம். உதாரணமாக, இலவச பயண அட்டையின் பயண தூரத்தைக்குறைக்கலாம். +2 வகுப்பிற்கு படித்து முடித்தபின் மடிக்கணினி வழங்குவதை நிறுத்தலாம்.
ஆசிரியர் தனது குழந்தையை அரசுப்பள்ளியில் படிக்கவைத்தால் ஊக்க ஊதியம் அளிக்கலாம். ஆசிரியருக்கு ஆண்டுதோறும் அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு வைத்து சமகால அறிவை பரிசோதித்து தேறினால் மட்டுமே ஆண்டு ஊதிய உயர்வு வழங்கலாம்..........
யோசிக்கலாம்.

நம் வகுப்பறைக்குள் நாமே ராஜா.


புத்தகங்கள் மாறுகின்றன.
கல்விமுறைகள் மாற்றப்படுகின்றன.
என்ன செய்யவேண்டுமென தெளிவாகச்சொல்ல ஆளில்லை.
ஏன் செய்யவில்லை? என்று கேட்க ஆயிரம் பேர்.
ஒரு முறையை செய்து பார்த்து விளைவைக்காணும் முன்பே
மாற்று முறை.
மாணவரைவிடக்குழம்பிய நிலையில் ஆசிரியர்கள்.
காகிதத்தில் சதவீதம் கேட்கும் அதிகாரிகள்.

எல்லாம் சரி.
கோபமும் குழப்பமும் செல்லுமிடம் குழந்தைகள் தானே!

உயிர்த்துடிப்புடன் ஆர்வத்துடன் வலம் வரும் குழந்தைகளுக்கு நாம் என்ன சொல்லித்தருகிறோம்?
பாடப்புத்தகங்கள்,பாடத்திட்டங்கள் அவ்வப்போது குழப்புவதால் அவற்றின்மீது பழிபோட்டு சுலபமாக சிலர் தப்பிவிடலாம்.
ஒரு ரூபாய்க்கு வாங்கினாலும்
தரம் பார்த்துப்பொருள் வாங்கும் நான்,
வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ற அளவு பணி செய்கிறேனா?
என்ற சுய பரிசோதனையே அவசியம்.

மாநிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் அரசுப்பள்ளிகள்
சாதிக்கும்போது அனைத்து அரசுப்பள்ளிகளும் சாதிக்கத்தடையாக இருப்பவற்றை கண்டறிந்து நீக்க வேண்டும்.
தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் ஆசிரியை,
நம் பிள்ளைக்கு ஒழுங்காகச்சொல்லித்தருகிறாரா?
என்று எவ்வளவு கவனிக்கிறோம்.
நம்மை நாம்தான் சுயபரிசோதனை வேண்டும்.

காதிதத்தில் கேட்போருக்கு அதைக்கொடுப்போம்.
கனவுகளுடன் வரும் குழந்தைகளுக்கு
கனவுகள் வளர்ப்போம்.
நம் வகுப்பறைக்குள் நாமே ராஜா.

கவிவாக்கு


11ஆம் தேதி நள்ளிரவிற்குப்பின்பே மகாகவி புகழுடல் எய்தினான். எனவே 12 ஆம் தேதியே அவனது நினைவு நாளாகக்கொண்டாடப்படவேண்டும் என்றாலும் இன்றையதினத்தையே காலம் காலமாக கொண்டாடிப்பழகிவிட்டோம்.
நாளில் என்ன இருக்கிறது?
பாரதியை நினைத்தாலே போதும்.
'படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான் ஐயோவென்று போவான்'
பாரதியின் வரிகளிலேயே இவை மட்டுமே அதீத கோபத்துடன் வெளிப்பட்ட வரிகள் என்று நம்புகிறேன்.
இவ்வளவு வெறுப்பை அவன் எங்குமே உமிழ்ந்ததில்லை.வெள்ளையர் மீது கூட இப்படி ஒரு சாபமிட்டதாகத்தெரியவில்லை.
படித்தவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
கவிவாக்கு பொய்க்காது.