Saturday 7 March 2015

04.12.2014
நேற்று காலைமுதலே பரபரப்பு.
12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனைத்தேடி காவல்துறையினர்.
காரணம்,
நண்பர்களுடன் சேர்ந்து மற்றொரு மாணவனைத்தாக்கியது.
முந்தியநாள் மாலையில் வெளியே நடந்த நிகழ்வு.
காரணம்,
பள்ளியில் அவர்கள் ஒரு குழுவாக அடித்ததற்கு பழிக்குப்பழி.

அடிக்கடி மாணவர்களின் சண்டைகள் பற்றிய செய்திகள்.
சண்டையிட்டுக்கொள்வது சாதாரணம்.
ஆனால், இப்போது வன்முறை,வெறி அதிகரித்துள்ளன.
மாணவர்களுக்கான கூட்டம் கூட்டப்பட்டது.
ஏறத்தாழ இரண்டுமணிநேரம் அறிவுரைகள்.
ஆசிரியர்கள் கோபமாக இருக்கிறார்கள்.
இயலாமையும் வெறுப்பும் பேச்சில்.
என்ன செய்வது?
மதிப்பெண்களை நோக்கிய ஓட்டத்தில்
மனப்பண்புகளை வளர்க்கத்தவறுகிறோமோ?
03.12.2014
பயிற்சியாசிரியைகளுக்கு பயிற்சிக்காலம் நிறைவடையப்போகின்றது.
முக்கிய சடங்காக அடைவுத்தேர்வு.
எல்லா பயிற்சியாசிரியைகளும் தேர்வுக்கான வினாக்களுடன் விடைகளையும் முன்னரே எழுதிப்போட்டுவிட்டு ஓரிரு நாட்கள் கழித்து தேர்வு வைக்கின்றனர்.
ஒன்பதாம் வகுப்பில், கேள்வியை மட்டும் சொல்லுங்கள், பதிலை மாணவர்களே தேடிப்படிக்கட்டும். என்று சொன்னேன்.
பயிற்சியாசிரியையும் ஒப்புக்கொண்டார். அவரின் முக்கிய பாடமான அறிவியலுக்கும் அப்படியே செய்யப்போவதாகவும் கூறினார்.
நேற்று அறிவியல் தேர்வு.
ஒரு சிலரைத்தவிர யாருமே சரியாக எழுதவில்லை.
அனைத்து கேள்விகளுக்கும் ஒருவர்கூட பதிலளிக்கவில்லை.

மாணவர்கள் எழுதுவதை பெரும் சுமையாக எண்ணுகின்றனர்.
பார்த்து எழுதுவதை தவறாக நினைப்பதில்லை.
இன்று கேள்விகளுடன் பதில்களும் தரப்பட்டு அந்தத்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
நாளை தமிழ்தேர்வு. விடைகளை அவர்களே தேடிப்படிக்கவேண்டும்.
என்று சொல்லியிருக்கிறேன்.
03.12.2014
9 ஆம் வகுப்பில் பயிற்சியாசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர்.ஆங்கிலப்பாடம்.
ஜன்னல் வழியாக கவனித்தேன்.
ஆங்கில இலக்கணம் நடத்திக்கொண்டிருந்தார்.
கையிலிருந்த பிரெய்லி குறிப்புகளை வாசித்தபடியே வாக்கிய வகைகளுக்கு எடுத்துக்காட்டுகள் சொல்லிக்கொண்டிருந்தார்.
ஒரு எளிய வாக்கியம் சொன்னதும் அதன் அர்த்தம் யாருக்குதெரியும்?என்று மாணவர்களிடம் கேட்டார்.
கூட்டத்தில் ஒருவன் பதில் சொன்னான்.
அவர், அவன் பெயரைச்சொல்லி,
சரியா சொன்னே, எழுந்திரிச்சு திரும்ப சொல்லு!
மாணவன் எழவில்லை.
அவர் மீண்டும் சொல்லச்சொன்னார்.
அவன் எழுந்து சொன்னான்,
மறந்திருச்சு!
இப்ப தானப்பா சொன்னே?
மறந்திருச்சு.
ம்.ம்.சரி. உட்காரு.
மாணவர்களில் பலர் மேசையில் கவிழ்ந்தபடியே பாடம் கேட்டுக்கொண்டிருந்தனர்.

அதே வகுப்பில் என் பாடவேளை.
சில குறள்களைக்கூறினேன்.
கல்வியில்லாதவரே கண்ணில்லாதவர், ஆங்கில வகுப்பில் கவனித்தேன்.
உங்களில் பலர் கண் இருந்தும் இல்லாதவர்.
ஒரு ஆசிரியர், கண் இல்லாவிட்டாலும் கல்வியால் அதைப்பெற்று உங்களுக்கும் கொடுக்க முயன்றுகொண்டிருக்கிறார்.
' தெரியாது' என்று விளையாட்டாய் பதில் சொன்ன மாணவனிடம்
எப்போதும் வகுப்பில் சொல்லும் வாசகங்களையே அழுத்தமாகச்சொன்னேன்.
"உனது செயல் எனக்கு வருத்தத்தைத்தந்தது,
இன்னமும் உன்னை மனிதனாக மதிக்கிறேன்."
30.11.2014
வெள்ளிக்கிழமை நள்ளிரவிலிருந்தே மழை.
காலையிலும் நசநச.
பையன்கள் இருவருமே பள்ளிக்கு செல்லவில்லை என்றனர்.
மூத்தவன் 12 ஆம் வகுப்பு.
பாடங்கள் நடத்துவார்களே! என்றேன்.
எல்லாம் முடித்துவிட்டார்கள். பரவாயில்லை என்றான்.
சின்னவன் 7 ஆம் வகுப்பு. மகிழ்ச்சி.
எனக்கு ஒரு யோசனை.
சரி,வீட்டில் இருங்கள். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் நான் பள்ளிக்கு கிளம்பிவிடுவேன். எனக்கு ஒரு உதவி செய்துதர முடியுமா?
ஒத்துக்கொண்டனர்.
ஒன்பதாம் வகுப்பில் உணவே மருந்து என்ற பாடம் நடத்த வேண்டும்.
அதற்கு முன்னால் புகையிலையின் கேடுகள் குறித்த Power point காட்டினால் பயனுள்ளதாக இருக்கும்.
மிக விரிவாக வேண்டாம்.
சிகரெட், பாக்குவகைகள், சைனி கைனி போன்றவை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், குறிப்பாக வாய்ப்புற்று நோய் குறித்த படங்கள் வேண்டும். என்றேன்.
இருவரும் சேர்ந்து உருவாக்கித்தந்தனர்.
ஆங்கிலத்தில் நோய் குறித்து இருந்த குறிப்புகளுக்கு தமிழில் விளக்கம், பெரியவன் சொல்லிக்கொடுத்தான்.

பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர்களிடம் செய்தித்தொகுப்பை காட்டினேன்.
பயனுள்ளதாக இருந்திருக்கும்.
29.11.2014
வகுப்பறைக்குள் ஒரு மாணவன் கொல்லப்பட்டான்.
இதுவரை பள்ளிகளில் நடைபெற்ற அனைத்து வன்முறைகளும் மீண்டும் விவாதத்தில்.
வழக்கம் போல,
கல்வியாளர்கள், பத்திரிக்கைகளில் தொலைக்காட்சிகளில் விவாதிப்பார்கள். ஆசிரியர்கள்...மாணவர்கள்...பெற்றோர்கள்...சினிமா என்று பல்வேறு தரப்பையும் குறைகூறி.....
நீதி போதனை வகுப்புகள் இல்லை என்பது முக்கிய பொருளாக இருக்கும்.
துறைசார்ந்து பல மட்டங்களில் கூட்டங்கள் நடைபெறும்.

நீதிபோதனை வகுப்புகள் தேவைதான்.
ஒரு பாடவேளை மட்டும் நீதிக்கதைகள் சொல்வதால் பயன் கிடைத்துவிடுமா?
பள்ளி,வீடு,சமூகம் என சுற்றுப்புறம் அத்தனையும் ஒரு குழந்தைக்குப்பாடங்களாக அமைய வேண்டாமா?
பள்ளியில் எல்லா பாடவேளைகளும் வெறும் பாடம் நடத்துவதாக மட்டுமே இல்லாமல் ஆசிரியர் மாணவர் உரையாடல்கள் நடைபெறும் களமாக மாறவேண்டும்.
வீடுகளுக்கிடையே சுவர்களை இடிக்கவேண்டும் என்று பாரதிதாசன் சொன்னதுபோல,
வகுப்பறைச்சுவர்களை இடித்து ஆசிரியர்களும் மாணவர்களும் சுதந்திரமாய் வெளிப்படும்போது மாற்றங்கள் தோன்ற ஆரம்பிக்கலாம்.
28.11.2014
நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் சில மாணவர்கள் பரபரப்பாக பள்ளிக்குத்திரும்பி வந்தார்கள்.
சில ஆசிரியர்கள் என்னவென்று விசாரித்தோம்.
தெரு முனையில் மூன்றுபேர் +2 மாணவர் ஒருவரைப்பற்றி விசாரித்தனர். ஏதோ பிரச்சினை. அவனை அடிப்பதற்காக காத்திருக்கின்றனர். என்றனர்.
மேல்நிலை மாணவர்களிடம் விசாரித்தோம்.
காலையிலேயே சிலமாணவர்களிடையே சண்டை என்று முதுகலையாசிரியர்கள் சொன்னார்கள்.
இரண்டு மாணவர்களுக்கிடையே சில நாட்களாகவே சண்டை.
நண்பர்களும் குழுவாக சேர்ந்துகொண்டனர்.
காலையில் ஒருவனை மற்றவர்கள் அடித்துவிட்டனர்.
அவன் எப்படியோ தனது ஊரில் உள்ள நண்பர்களுக்கு தகவல் சொல்லிவிட்டான்.
அவர்களே காத்திருந்தவர்கள்.
சண்டையிட்டுக்கொண்ட இருவரும் பள்ளிக்குள்ளேயே சிறப்பு வகுப்பில் இருந்தனர்.
முதுகலை ஆசிரியர்கள் இருவரையும் விசாரித்தனர்.
அடிபட்டதால் ஊரிலிருந்து ஆட்களை வரவைத்த மாணவன், ஆசிரியர்கள் பேசியபின் வருத்தப்பட்டான். அப்பாவிடம் சொல்லிவிடாதீர்கள், என் படிப்பை நிறுத்திவிடுவார். என்றான்.

அடித்த மாணவனோ தான் செய்தது சரி என்றே சொன்னான்.
அவன் என்னைப்பார்த்து முறைத்தான்.என்று ஏதேதோ காரணங்கள் சொன்னான். பேச்சில் ஓர் அலட்சியம்.
ஆசிரியர்கள் உணர்ச்சிவசப்பட்டார்கள்.
அடி வெளுக்கணுங்க!
ஏதாவது காதல் விவகாரமா இருக்கும்!
ட்ரெய்னிங் டீச்சருங்க முன்னாடி ஹீரோ ஆகணும்னு இப்படி!
இதுக்குதான் சொல்றேன், ட்ரெய்னிங்க்கு பொண்ணுகளை அனுமதிக்க வேண்டாம்ன்னு!
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
பெண்களே வேண்டாம் என்றவரிடம் கேட்டேன்,
நம் பள்ளியில் ஆசிரியைகளே இல்லையா?
பதிலேதும் சொல்லவில்லை.
மாணவர்கள் விடலைப்பருவத்தில் முன் மாதிரிகள், வழிகாட்டிகள் இல்லாமல் இருக்கிறார்கள்.
பெரும்பாலும் திரைக்கதாநாயகர்களே முன்மாதிரிகள்.
இன்றைய படங்கள் வன்முறையையே காட்டுகின்றன.
பள்ளிகளில் மதிப்பெண்கள், கோர்ஸ்,வேலை, சம்பளம் என்பன பற்றியே அதிகம் பேசுகிறோம்.
மனிதம் பேசவும் வாழ்ந்துகாட்டவும் மாதிரிகள் தேவை.
இல்லையெனில் எதிர்வரும் தலைமுறை மனிதத்தன்மையே இல்லாததாக இருக்கும்.

Wednesday 4 March 2015

28.11.2014
ஒன்பதாம் வகுப்பில் அந்த மாணவனைப்பார்த்தேன்.
ஏன் நீ ஆடல?
கட்டு அவுந்துருச்சு.
நல்லா கட்டிருக்கலாம்ல.
ஆட ஆரம்பிக்கும்போது....
ஆட்டக்காரனுக்கு அதுகூடத்தெரியல.!
ஒருவாரம் ஹிந்திப்பாட்டு கூட்டத்தோட ஆடுறேன் என்று வகுப்பை கட்டடிச்சாச்சு.
வேணாம்னு சொன்னப்போ பாவம்னு நான் ஆடச்சொன்னேன்.
வாடகை யார் தந்தாங்கன்னு விசாரணை வேறு.
உன்னை ஆரம்பத்திலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொருமுறையும் திருந்திவிடுவாய் என்று பல வாய்ப்புகள் தந்தாகிவிட்டது.
திருந்தவே இல்லை.
ஒரு ஆளுக்கு 50 ரூபாய் வாடகை பேசி கட்டைக்கால் எடுத்திருக்கிறேன்.
பள்ளியில் கொடுத்தது கொஞ்சம்.
உன் அலட்சியப்போக்கால் நீ எத்தனை வாய்ப்புகளை தவறவிட்டிருக்கிறாய் தெரியுமா?
வாசிக்கவும் எழுதவும் தந்த அனைத்து விதமான பயிற்சிகளையும் பட்டியலிட்டேன்.
உன் தந்தையும் அவ்வப்போது இதுவேற,
"சார்,என் பையன் சொல்லிட்டான் அடுத்த வருஷம் வேற ஸ்கூல்ல சேர்த்து விட்டா நல்லா படிச்சிருவானாம்."
எப்படி இதெல்லாம்.
தம்பி, எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்கோம்னா ஒரே காரணம்தான்.
வகுப்புல சொல்ற செய்திகள் ஒருநாளாவது அறிவுக்கு எட்டி சிந்திக்க ஆரம்பிப்ப என்கிற நம்பிக்கை.
பார்ப்போம்.
ஆனா,ஆண்டுவிழாவில் நீ ஆடாமல் போனது எனக்கு மிகப்பெரிய அவமானம்.
வழக்கம்போல் அமைதியாக இருந்தான்.
பார்க்கலாம்.
இளம் வயதில் நாட்டிற்காக தூக்குக்கயிற்றில் உயிர்த்தியாகம் செய்த மாவீரனின் பெயரை வைத்திருக்கிறான் என்பதற்காகவே சேட்டைகளை எல்லாம் பொறுத்துக்கொள்கிறேன் என்பது அவனுக்கும் தெரியும்.