Wednesday 4 March 2015

14.11.2014
12 ஆம்தேதி எனது மாணவனுக்கு திருமணம்.
என்னிடம் படித்த மாணவர்கள் பலருக்கு திருமணம் ஆகிவிட்டது. சிலர் தேடிவந்து அழைப்பிதழ் தருவார்கள்.செல்வேன்.
தொடர்ந்து பழகிவரும் மாணவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி திருமணம் செய்துகொள்வது மனதுக்கு அதிக மகிழ்ச்சியை தருவது.
எனது பிள்ளக்குத்திருமணம் போன்றே மகிழ்வேன்.
பெற்றவர்களுக்கு ஓரிரு பிள்ளைகள். ஆசிரியருக்கு ஆயிரமாயிரம் பிள்ளைகள்.
சேதுபதி மேனிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியில் சேர்ந்தபோது செந்தில்குமார் 7 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிந்தான்.
அவன் தம்பியும் அதே வகுப்பு.
செந்தில் தேர்ந்த ஓவியன். படிப்பு மிகவும் சுமார்.
எங்கு போட்டி நடந்தாலும் வெற்றி அவனுக்கே.
பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெற்றால் கும்பகோணம் அரசு நுண்கலைக்கல்லூரியில் படிக்கலாம் என சொல்லியிருந்தோம்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை அவனைவிட அதிக பதட்டத்துடன் இணையத்தில் பார்த்தேன்.
மூன்று பாடங்களில் 35 மதிப்பெண்கள், மற்றதில் சற்றே அதிகம்.
தேறிவிட்டான்.
அனைவருக்கும் மகிழ்ச்சி.
ஓவியக்கல்லூரியில் படித்தால் எதிர்காலம் எப்படி இருக்கும்?
என அவன் தந்தை விசாரித்தார்.
கவலைப்படாதீங்க,உங்க உதவி இல்லாமலேயே அவனே சம்பாதித்து படித்துக்கொள்வான்.என்றேன்.
கும்பகோணம் கல்லூரியில் சிற்பக்கலை பிரிவில் சேர்ந்தான் செந்தில்.
கொஞ்ச காலத்திலேயே அவன் தந்தை காலமானார்.
தாய், பால்மாடு மூலம்தம்பியை வளர்த்தார்.
செந்தில்,அவனேசம்பாதித்து படித்துத்தேறினான்.
அதோடு பத்தாம் வகுப்பை அடிப்படையாகக்கொண்ட 5 ஆண்டு பட்டப்படிப்பு இல்லாமல் ஆனது.
தொடர்ந்து பல்வேறு வேலைகள்.
அம்மாவையும் சென்னைக்கே அழைத்துச்சென்றுவிட்டான்.
வயது 30 ஐதாண்டியபின்னும் தன் மனதுக்கு நம்பிக்கை வந்தபின்பே திருமணம் செய்துகொள்வேன் என்று சொல்லிக்கொண்டிருந்தான்.
கடின உழைப்பு.
இப்போது Interior Designer ஆக இருக்கிறான்.
வீட்டிற்கு வரும்போதெல்லாம் என்னிடம் வேலைகள்,அதிலுள்ள பிரச்சினைகள் பற்றிப்பேசுவான்.
குடும்பம், எதிர்காலம் குறித்து என் மனைவிடம் சொல்லிச்செல்வான்.
காதலிக்கிறேன் என்று சென்ற ஆண்டு என் மனைவிடம் சொல்லியிருக்கிறான்.
விடுமுறையில் சென்னை சென்றபோது அவன் வீட்டில் அந்தப்பெண்ணையும் பார்த்தோம்.
செந்திலின் அம்மாவிடமும் பேசினோம்.
அவருக்கும் மகிழ்ச்சி.
நல்ல நிலைக்கு வந்தபின் திருமணம் என்றான். பெண் வீட்டில் அவனே பேசி முடிவு செய்துவிட்டான்.
12 ஆம் தேதி மதுரையில் திருமணம்.
எனக்கு புத்தாடைகள் எடுத்து வந்திருந்தான்.
எங்கள் பிள்ளை திருமணம் போல் மகிழ்ந்தோம்.
வரும் ஞாயிறு சென்னையில் நடைபெறும் வரவேற்பிற்கும் கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்திருக்கிறான்.
செல்லவேண்டும்.
அவன் மண நாளில் சில முன்னாள் மாணவர்களைப்பார்த்தேன்.
மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
குழந்தைகளுடன் பெரியவர்களாக மாணவர்களை பார்ப்பது அற்புத அனுபவம்.
கண்ணும் மனமும் நிறைந்திருந்தது.



ஒளிப்படத்தில்,
செந்தில் தம்பதியர்.
மாணவன் தந்த ஆடைகளுடன் மகிழ்ச்சியில் நான்.

No comments:

Post a Comment