Wednesday 4 March 2015

18.11.2014
செந்தில் திருமணம்-2
சென்னையில் செந்திலின் திருமண வரவேற்பு.
நான் குடும்பத்துடன் அவசியம் வரவேண்டும் என்பது அன்புக்கட்டளை.
அனைவரும் செல்ல இயலவில்லை.நான் மட்டும்.
கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் எங்கள் பள்ளி மாணவன் கருணாகரன் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது செந்தில் அங்கே படிக்கச்சென்றான். கல்லூரியில் கற்றதைவிட மூத்தவர்களான கருணாகரன் மற்றும் அவரின் அறைத்தோழர்களிடம் கற்றதே அதிகம்.
அனைவருமே இப்போது சிறந்த ஓவியர்களாக உள்ளனர். அவர்களுள்,தமிழகம் அறிந்த இளையராஜாவும் ஒருவர். விகடனில் இவரது தத்ரூபமான ஓவியங்களை ரசிக்காதோர் இல்லை.
அனைவரும் திருமண வரவேற்பிற்கு வந்திருந்தனர்.
எங்கள் பள்ளியிலிருந்து சென்னை ஓவியக்கல்லூரியில் பயின்ற, படித்துக்கொண்டிருக்கிற அனைவரும் வந்திருந்தனர்.

அன்றைய இரவில் இளையராஜாவுக்கு ஓவியர் ரவிவர்மா பற்றிய திரைப்படத்தின் கதையைச்சொன்னேன்.
மறுநாள் அவர் வீடு சென்று ஓவியங்களை பார்த்ததும் உரையாடியதும் இனிய அனுபவம்.
அங்கிருந்து செந்தில் வீட்டிற்கு என்னை அழைத்துச்செல்ல நாசர் வந்திருந்தான். எங்கள் பள்ளியில் பயின்ற மாணவன். இப்போது சென்னை ஓவியக்கல்லூரியில் MFA படித்துக்கொண்டிருக்கிறான்.
மதிய உணவு செந்திலின் வீட்டில்.
அவனே வடிவமைத்த பொருள்களை காட்டினான்.
பள்ளி நினைவுகள் குறித்து மனைவியிடம் பகிர்ந்துகொண்டான்.
அவனே கேள்வி கேட்டு பதிலும்சொல்லிக்கொண்டான்.
சார்,எனக்கு எவ்வளவு நெருக்கம் தெரியுமா?
சார் இல்ல, Friend.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே செந்திலின் மனைவி அவன் காதில் ஏதோ கிசுகிசுக்க, சார்!......என்றான்.
என்ன?
உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கணுமாம்.
திருமணத்தன்றே காலில் விழ வேண்டாம் என்று மறுத்துவிட்டேன்.
காரணம்,எனக்கு கூச்சமாக இருந்தது.
முக்கிய காரணம் அவ்வப்போது நெகிழ்ந்துகொண்டிருந்த நிலையில் கண்டிப்பாக அழுதேவிடுவேன்.
அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு.
இப்போது என்ன செய்வது, சரி என்றேன்.
சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தபின் கிளம்பினேன்.
அவர்கள் விடுவதாக இல்லை.
கையில் குங்குமத்தை கொடுத்துவிட்டு இருவரும் ஆசிபெற, வார்த்தைகள் எல்லாம் என்னைவிட்டுச்சென்றுவிட்டன.
அமைதியாய் அப்படியே நின்றுகொண்டிருந்தேன்.
கண்ணீர் தளும்பி இருந்தது.
சிறிதுநேரத்தில் நினைவுக்கு வந்த வார்த்தைகள் சொல்லின,
ஒரு மகளும் கிடைத்துவிட்டாள்.
தொடர்வண்டியில் தூங்கும் வரை என்னை மிகவும் கட்டுப்படுத்திக்கொண்டேன்.
படுத்தவுடன் செந்திலை நினைத்தேன்.
அளவற்ற ஆனந்தத்தை தடைசெய்யவில்லை.
இமையணைகள் திறந்தன.
எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை.
அப்படியே தூங்கிப்போனேன்.

No comments:

Post a Comment