Monday 4 November 2013

டைட்டானிக்கில் நான்


          மனைவி வழிச் சொந்தமாக அவர் அறிமுகப்படுத்தப்பட்டபோது வழக்கமாகப் புன்னகைத்தேன்."சினிமாவில் இருக்கிறார்" என்ற வார்த்தைகள் என் மனதைப் புன்னகைக்க வைத்தன.வீட்டுக்கு வாருங்கள் என உரிமையுடன் அழைத்தேன்.அவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

எப்போதாவது நல்லபடம் தரும் தமிழ் சினிமா போலத் திடீரென ஒருநாள் வீட்டிற்கு  வந்தார்.

சினிமாவில நீங்க என்ன செய்ரீங்க?

அசிஷ்டன்ட் டைரக்டர்
யாருகிட்ட?

பலபேருகிட்ட.ஒருத்தனும் சரியில்ல.நல்ல படன் எடுக்கவே மாட்டேன்கிரானுக. மனசு ரொம்ப வலிக்குது. உலகம் பூரா எவ்வளவு நல்ல படம் வருது.பாத்தும் திருந்தவே இல்ல.

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.திரைத் துறையில் எத்தனையோ திறமையாளர்கள் கண்டுகொள்ளப்படாமலே இருக்கின்றனர்.
நீங்க ஏதும் எடுக்க முயற்சிக்கலையா?

எவ்வளவோ கதை வச்சிருக்கேன்.தயாரிப்பாளர் பலபேரைப் பாத்துக் கத சொல்லிச்சொல்லி ,கோபம்தான் வருது.எல்லாரும் மாட்டு மூளைக் காரனுங்க.கதைய விடச் சதையதான் விரும்புரானுக .

கவலைப்படாதிங்க.முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க.கண்டிப்பா நல்ல தயாரிப்பாளர் கிடைச்சு சூப்பர் படம் எடுப்பீங்க.சென்னையில எங்க தங்கியிருக்கிங்க?

ரூம் எடுத்து தனியாத்தான் தங்கியிருக்கேன்.அம்மாவோட பென்சன வச்சு ஓட்டிக்கிட்டிருக்கேன்.

உங்கள மாதிரி எண்ணம் உள்ளவங்களோட கூட்டாத் தங்கினா செலவு குறையும்ல ?

ஒருத்தனையும் நம்ப முடியல.ஏதாவது கதையப் பகிர்ந்துக்கிட்டா, அவன் கதை மாதிரி அடுத்தவன்கிட்டச் சொல்லிப் படம் எடுத்துடுறான்.என்னோட எத்தனையோ
 கதை படமா வந்து சூப்பாரா ஓடியிருக்கு.

அடப்பாவமே!கேஸ் போட வேண்டியதுதானே?

அதெல்லாம் முடியாதுங்க.எத்தனை பேரு மேலதான் கேஸ்  போடுறது?கஷ்டம். அப்படியே விட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கணும்.திறமை இருக்கிறவனுக்கு ஆயிரம் கத.

சூப்பர்ங்க.

அட இத விடுங்க.ரூம்மேட் அல்லது நண்பன் திருடினாக்கூட மன்னிச்சிடலாம்.எனக்குப் புரியாத ஒண்ணு என்னன்னா, ஃபாரின்காரன் கூட என் கதைய அப்படியே காப்பி அடிச்சுப் படம் எடுத்து அதுவும் உலகம் பூரா பயங்கரமா ஓடியிருக்கு.அதத்தான் என்ன செய்யறதுன்னே தெரியல.யார்கிட்ட சொன்னாலும் நம்பாம ஒரு மாதிரியாப் பாக்குறானுங்க.தமிழன் திறமைமேல தமிழனுக்கே நம்பிக்கை இல்ல.

நானும் ஒரு மாதிரியாய்க் கேட்டேன் .அது எப்படி...உங்க கதைய இங்கிலீஷ்ல படமா? யாரு அது?

யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க. நம்ப மாட்டானுக.
எனக்கே படம் பாத்தா ஒடனே தலையச் சுத்திருச்சு.கோபம் கோபமா வந்துச்சு,ஆனா எப்படி என் கதைய அப்படியே வெள்ளைக்காரன் எடுத்தான்னு குழப்பமா இருந்துச்சு.அப்பறம் என் திறமைய நினைச்சு சந்தோஷப்பட்டேன்.
அந்தப் படம்தான் டைட்டனிக்.
..!..@...#...$...&....*********?.....

Sunday 20 October 2013

பவா

எல்லா நாளும் கார்த்திகை
வாசிப்பை நேசிப்பவர்கள் அறிந்த பெயர் பவா செல்லதுரை.
அவரைப் பற்றிப் பிறர் எழுதியவற்றை வாசிப்பவர்களுக்கு
திருவண்ணாமலையில் அவர் வீட்டிற்கு நாமும் போக மாட்டோமா? என்ற ஏக்கம்  ஏற்படுவது தவிர்க்க இயலாதது.
அவரைப் போலவே அவரின் எழுத்துக்களும் எளிமையானவை,இனிமையானவை,வலிமையானவை.
வம்சி வெளியீடாக வந்திருக்கும் "எல்லா நாளும் கார்த்திகை"
பவாவின் கட்டுரைத்தொகுப்பு.
கலை,இலக்கியம் மற்றும் திரைத்துறை சார்ந்த ஆளுமைகளைப் பற்றிய பாவாவின் சொற்சித்திரங்கள் நிறைந்தது ,எல்லா நாளும் கார்த்திகை.

ஒவ்வொரு கட்டுரையையும் வாசிக்கும்போது அந்த ஆளுமைக்கு அருகில் நம்மைக் கைபிடித்து அழைத்துச்செல்கிறார் பவா.முடிவில் நாமே அவராக மாறி அந்த ஆளுமையுடன் கலந்து விடுவதே பவாவின் வெற்றி.

பாலு மகேந்திரா பற்றியது முதல் கட்டுரை.
புதிய படத்தின் கதை பற்றிய உரையாடலில் பாலு மகேந்திரா கேட்கிறார், 'மூன்றாம் பிறை' ஸ்ரீதேவியை கமல் எங்கிருந்து அழைச்சிட்டு போவார்னு ஞாபகப்படுத்துங்க பாக்கலாம்"
பவாவைப் போலவே நானும் திணறிப்போனேன்.
விடை ஆச்சரியப்படுத்தியது. மறுநாள் பள்ளியில் ஓய்வு நேரத்தில் நண்பர்களிடம் கேட்டேன்.செல்பேசியில் ஒருவர் தேடித் திரைப்படத்தை ஓடவிட்டார். அனைவருக்கும் அந்தக் காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது."இது ஞாபகமே இல்ல"
என்றனர்.அது பற்றிய பாலு மகேந்திராவின் வார்த்தைகள் ,
"ஒரு விபச்சார விடுதியிலிருந்து.ஆனா அது உங்களுக்கு மட்டுமல்ல,படம் பார்த்த யாருக்கும் ஞாபகம் இருக்காது.ஏன்னா படத்தோட ட்ரீட்மெண்ட்ல அது காணாமல் போயிடுது"
இதைப்போலவே பல்வேறு உணர்வுகளின் கலவையில் அனைத்து ஆளுமைகளையும்  நம்மோடு கலந்துவிடுகிறார் பவா.

ஃபிராய்ட்

ஏதாவது பேசும்போது தம் மேதைத் தனத்தைக் காட்டப் பலர் பயன்படுத்தும் வார்த்தைகள்,"சைக்காலஜி, ஃபிராய்ட் ". 
குறிப்பாகப் பாலுணர்வு குறித்துப் பேசுபவர்கள் தாங்கள் சொல்வதுதான் உண்மை என நிலைநாட்ட, ஃபிராய்ட் பெரிதும் பயன்படுகிறார்.

உண்மையில் யார் இவர்? என்னதான் சொன்னார்? 'பல்லி  விழும் பலன்' போல கனவுகளுக்கு விளக்கம் சொன்னாரா?
மனம்,பாலியல், ஒழுக்கம்,மதம்,நரம்பு நோய்கள்  எனப் பல பொருள்கள் பற்றி ஃபிராய்ட் கூறுவது என்ன?
அவர்தம் கருத்துக்களின் இன்றைய நிலை என்ன?

ஃபிராய்ட் குறித்த சிறந்த அறிமுக நூலான இதை ஆங்கிலத்தில் எழுதியவர்  சிகாகோ பல்கலைப் பேராசிரியர் ஜோனத்தன் லியர். இந்நூலை மிகச்சிறப்பாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ஆங்கிலப் பேராசிரியர் ச.வின்சென்ட்.
உளவியல் நூலை தக்க  கலைச்சொற்களோடு வாசிப்பவர்  புரிந்துகொள்ளும்படியான சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
இது போன்ற மொழி பெயர்ப்பு நூல்கள் தமிழ்ச் சிந்தனைப் பரப்பிற்கு புதிய வெளிகளைக் காட்டும்.

 கதை, கட்டுரை போலில்லாமல் நிறுத்தி, யோசித்து வாசித்தால் ஃபிராய்ட் வசப்படுவார்.



Monday 20 May 2013

உஸ்தாத் ஹோட்டல்


மதுரையைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் என்ற மனிதர், சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் chef வேலைக்குச் செல்லும் முன் தனது ஊருக்கு வந்தார். சாலையோரம் உணவின்றித் தவித்த முதியவரைப் பார்த்தபோது மன மாற்றமடைந்து ,
ஆதரவின்றித் தவிப்போருக்கு உணவு சமைத்துத் தருபவராக மாறினார்.  இன்று அவர் தொடங்கிய  அக்க்ஷயா டிரஸ்ட்  ஆதரவற்றவர் காப்பகமாக வளர்ந்துள்ளது.
இந்த மாமனிதரின் கதை, கேட்போரை நெகிழச் செய்யும்.
இதையே தனது கதையின் உச்சமாக வைத்து அற்புதமான திரைப்படமாக மலையாளத்தில் உருவாக்கியுள்ளார் அன்வர் ரஷீத்.
மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற அத்திரைப்படம் "உஸ்தாத் ஹோட்டல்".
தாயை இழந்து, சகோதரிகளுடன் வளர்ந்ததால் சமையலில் ஆர்வமுடன் வளர்கிறான் பைசல். சுவிட்சர்லாந்திற்கு படிக்கச் சென்றவன் அப்பாவிற்குத் தெரியாமல் சமையல் கலை படிக்கிறான்.இலண்டனில்  வேலை கிடத்த கையோடு தனது ஊரான கோழிக்கோட்டுக்கு வருகிறான்.சமையல் கலைஞன் என்று தெரிந்ததால் திருமண நிச்சயம் தடைப்படுகிறது. அப்பாவின் கோபத்திற்கு ஆளாகி வீட்டைவிட்டு வெளியேறுகிறான். தாத்தாவிடம் செல்கிறான்.
பைசலின் தாத்தா கரீம், உஸ்தாத் ஹோட்டல் என்ற உணவு விடுதியை கோழிக்கோடு கடற்கரையில் நடத்திவருகிறார்.
அங்கு தயாராகும் பிரியாணி அனைவராலும் விரும்பப்படுவது.
பேரனைக்கண்ட தாத்தா மகிழ்கிறார்.நான் அயல் நாட்டில் சமையல் கலை படித்தவன் என்று பைசல் கூறும்போது,
"வயித்த யாராலயும் நிரப்ப முடியும்,மனசயும்  நிரப்புரதுதான் முக்கியம்"
என்று கரீம் சொல்லுவதிலேயே அவரின் சிறப்பு வெளிப்படுகிறது. அங்கேயே தாத்தாவுடன் அனைத்து வேலைகளையும் கவனிக்கிறான். தாத்தாவின் சிபாரிசால் அருகிலிருக்கும் 5 நட்சத்திர விடுதியில் வேலைக்குச் சேர்கிறான்.ஐரோப்பிய கேரளா உணவுத்திருவிழாவில் நல்ல பெயர் கிடக்கிறது.

பைசலின் காதல், உஸ்தாத் ஹோட்டலை ஆக்கிரமிக்க நினைக்கும் 5 நட்சத்திர விடுதி உரிமையாளரின் கோபம்- அதனால் உஸ்தாத் ஹோட்டல் மூடப்பட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்படுதல் எனக்  கதை  சீராகச் செல்கிறது.

ஐரோப்பிய கேரளா உணவுத்திருவிழாவிற்கு  வந்த chef  மூலம் பைசலுக்கு பாரிஸில் வேலை கிடக்கிறது.தாத்தாவின் உடல் நலம் குறைகிறது. நல்ல வேலைக்குச் செல்லும்வேலையில் தாத்தா  இப்படி உணர்வுப்பூர்வமான தடையாக இருக்கிறாரே என வருந்துகிறான்.
மருத்துவமனையில் இருக்கும் தாத்தா,பைசலை அழைத்து,
உனக்கு விருப்பமான வேலைக்குப் போ.அதற்கு முன் மதுரையிலிருக்கும் எனது நண்பரான நாராயணன் கிருஷ்ணனிடம் இந்தக் கடிதத்தையும் பணத்தையும் கொடுத்துவிட்டு வா எனக் கூறுகிறார்.
பைசல் மதுரை பயணமாகிறான். நாராயணன் கிருஷ்ணனைப் பார்த்து கடிதம் மற்றும் பணத்தக் கொடுக்கிறான்.கரிமின் பேரன் என அறிந்து அவரும் மகிழ்கிறார். கடிதத்தைப் படிக்கிறார்.

" அன்பு நண்பரே,இந்தக் கடிதம் கொண்டு வருபவன் என் பேரன்.எப்படிச் சமைப்பது என்று அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.ஏன்? சமைக்க வேண்டுமென நீங்கள்தான் சொல்லித்தர வேண்டும்"

 நாராயணன் கிருஷ்ணன்வீட்டில் நிறையப் பேருக்கு உணவுதயாராகிக் கொண்டிருக்கிறது.அவருடன் சென்று அனைத்தையும் பார்க்கிறான் பைசல்.மறுநாள் ஒரு மனநலம் குன்றியோர் விடுதிக்குச் சமைக்கச் செல்லும் நாராயணன் கிருஷ்ணன்,பைசலை பிரியாணி செய்யச் சொல்கிறார்.தாத்தா சொல்லித்தந்தபடி செய்கிறான் பைசல். குழந்தைகளின் அன்பு அவனை மாற்றுகிறது.ஊர் திரும்புகிறான். தாத்தா இறந்துவிட்ட செய்தி அறிந்து வருந்துகிறான்,உஸ்தாத் ஹோட்டலைத் தொடர்ந்து நடத்துகிறான்.


படத்தில் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். கரீமாக நடித்துள்ள முதுபெரும் நடிகர் திலகன் இன்று நம்மிடையே இல்லையே என்ற எண்ணமே கண்களை நனைக்கிறது.

மனதை நிறைக்கும் கதை.எவ்வளவோ ஓடி ஆடிச் சம்பாதிக்கிறோம்,ஏன் ? என்று எண்ணியதுண்டா?



Sunday 17 March 2013

கொடும்பாளூர் ...காலம் சிதைத்த கலை - 2

 கொடும்பாளூர் ...காலம் சிதைத்த கலை - 2


கொடும்பாளூரில் இருந்த பல சிற்பங்கள் பல்வேறு அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பெற்று வருகின்றன.
தற்போது பாதுகாக்கப்படும் இரு கோவில்களின் சுவர்கள்,விமானங்களில் உள்ள சிற்பங்கள் முற்காலச் சோழர் கலைக்குச் சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.
கொடும்பாளூரில் உள்ள சிற்பங்களைத்  தள்ளி நின்றும், அருகே சென்றும், பார்த்தும், தொட்டும், கண்மூடித் தடவியும் பல வழிகளில் இரசித்தேன் . உணர்வுப்பூர்வமாக அன்றைய  கொடும்பாளூரில் இருந்தேன். என்னை மிகவும் ஈர்த்தவை அர்த்தநாரி , ஆடவல்லானின் சிற்பங்கள்.
ஆணும் பெண்ணும் கலந்த அர்த்தநாரியின் எளிய வடிவம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். ஆடவல்லானைச் செதுக்கிய சிற்பியின்,உடற்கூறு அறிவும் சிற்ப வடிவமைப்பின் தேர்ந்த ஞானமும் என்னை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தின.

சோழர் காலக் கலைக்கு மிகவும் புகழ் சேர்த்தது நடராஜரின் செப்புத்திருமேனி.பிரபஞ்சத் தத்துவ நடனமாக நடராஜர் வடிவம் பெற்றுள்ளார். கொடும்பாளூரில் ஏறத்தாழ 5 அடி உயரமுள்ள ஆடவல்லானின் சிற்பமும் சிவதாண்டவத்தைக் காட்டுவதாக வடிவமைக்கப் பெற்றுள்ளது.
சராசரி ஆணின் உடல் அமைப்புடன் சிவன், முயலகன் மீது நடனம் புரிகிறார். தனது இடதுகாலை முயலகன் மீது ஊன்றி வலது காலைச் சிறிது தூக்கியபடி காட்சிதருகிறார்.

முகத்தில் கோபமும் உதட்டில் புன்னகையும் ஒருங்கே காணப்படுகிறது.



முன். பின் கைகள் சமநிலையுடன் இருக்கின்றன. உடல் நளினமாக இருக்கிறது.

















சிவன் தனது  வலது காலைத்  தூக்கி அந்தரத்தில் வைத்து இருப்பதால் உடலின் எடை முழுவதையும் இடது காலே தாங்கவேண்டியுள்ளது. இடது பாதத்தின் முன் பகுதியை  முயலகனின் பின்புறத்தில் வைத்திருப்பதால் குதிகால் இடுப்புச்சரிவில் இறங்கியாக வேண்டும்.அப்போது உடலின் சமநிலை குலையும். இதைச் சரிப்படுத்த முயலகனைக்  கை , கால்களை ஊன்றியபடி  தவழும் நிலையில் சிற்பிவடிவமைத்துள்ளார். இருந்தாலும் ,இடுப்புச்சரிவில் சிவனின் பாதத்தைத் தங்கவேண்டி முயலகனின் வலது கையை வடிவமைத்ததே  சோழச் சிற்பியின் கலைத் திறனின் உச்சம் .

 சிற்ப  இலக்கண விதிகள்  என இருந்தாலும் ஒன்றுபோலவே செய்யாமல் தனது மனதிற்கேற்ப சில சுவையான மாற்றங்களுடன் படைக்கப்படும் கலையே காலத்தைத்தண்டி அதே உணர்வைப் பார்ப்பவர்களின் மனதில் ஏற்படுத்துகிறது.

கொடும்பாளூர்....காலம் சிதைத்த கலை.




 அன்று...
முற்காலச் சோழர் காலம். சோழவள நாட்டின்  எல்லையைக்காத்து,  சோழப் பேரரசர்களுடன் இணைந்து போரிட்டுப்பல வெற்றிகளைப் பெற உறுதுணையாக இருந்த சிற்றரசர்களுள் ஒருவர் இருக்குவேளிர்கள்.
கொடும்பாளூரைத் தலைநகரமாகக் கொண்டவர்கள். இந்நகரம் சிலப்பதிகாரத்தில் புகழப்படுகிறது.
கவுந்தியடிகளுடன் மதுரை செல்லும் வழியில் கோவலனும் கண்ணகியும் கொடும்பாளூர்க் கோட்டம் கடக்கின்றனர்.
சிவபெருமானின் திரிசூலம் போல மூன்று பெருவழிகள் இங்கிருந்து மதுரை செல்கின்றன.
இருக்குவேளிர்கள் சோழர் படைத்தளபதிகள். ஈழப்போரில் முக்கியப்பங்கு வகித்தவர்கள்.சோழ அரசகுடும்பத்தினருடன் மண உறவு கொண்டவர்கள். இவர்களுள் முக்கியமானவர் பூதி விக்கிரம கேசரி. மாவீரன்.இரண்டாம் பராந்தகன் சுந்தரச்சோழனின் சமகாலத்தவன்.
பூதி விக்கிரம கேசரிக்கு கற்றளிப் பிராட்டி, வரகுண நங்கை என்ற இரு மனைவியர். இம்மூவரும் சேர்ந்து எழுப்பிய கோயிலே மூவர் கோயில் என்ற  ஒரே வரிசையில் ஒரே விதமாகக் கட்டப்பெற்ற மூன்று சிவன் கோயில்கள்.
பிற்காலத்தில் கொடும்பாளூர் மணிக்கிராமத்தார் என்ற வணிகக் குழுவாக தமிழகமெங்கும் வணிகம் செய்தனர்.

இன்று...
மூவர் கோயில், மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் கொடும்பாளுர் சத்திரம் என்ற  கிராமத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ளது.முதற் கோயிலும் திருச்சுற்றும் அழிந்துபட்ட நிலையில் இரு கோயில்கள் மட்டுமே உள்ளன.கோயில் விமானத்தின் உள்  கட்டமைப்பு தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு முன்மாதிரியானது.

ஒருகாலத்தில் தலைநகராக இருந்த இடம் இன்று தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படுகிறது.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உன்னதமான கலைப் பாணியை உடையவர்கள் சோழர்கள். கோயிலின் சுவர்களில் உள்ள சிற்பங்கள் இயல்பான உருவ அமைப்பு உடையவை.அரை அடிக்கும் குறைவான அளவுள்ள பல சிற்பங்கள் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டு விளங்குகின்றன.



வயல் வெளியிடையே கலைப் பொக்கிஷமாக இருக்கும் மூவர் கோயில் மனதில்  மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது.
இக்கோயிலில்  பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டும் காலத்தால் சிதைந்தும் காணப்படுகின்றன. அவை சொல்லாமல் சொல்கின்றன நாம் வாழ்ந்த கதையை, வாழ வேண்டிய முறையை.






Sunday 17 February 2013

விஸ்வரூபம்


விஸ்வரூபம் வெளியீட்டில் நடந்த கூத்துக்கள் என்னைச்சில நாட்கள் மகிழ்ச்சியாக வைத்திருந்தன.
ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு குப்பைப்படங்களின் மீது வழக்குகள் போடப்போட என் மனம் இன்பத்தில் துள்ளியது.
தமிழ் திரைப்படங்கள் எந்தவகையுள்ளும் அடங்காத குப்பைகள். அவ்வப்போது ஏதேனும் நம்பிக்கை தோன்றினாலும் சாக்கடை.
இதைச் சுத்தம் செய்யவே முடியாது என்று நம்பிக்கை இழந்திருந்த வேளையில், விஸ்வரூபம் விவகாரம் அதைத்துளிர்க்கச் செய்திருக்கிறது.

மத அடிப்படைவாதிகளைத் தொடர்ந்து சாதிச் சங்கங்கள்,எங்கள் சாதிக்காரர் ஹீரோவாக மட்டுமே காட்டப்படவேண்டும்,
வில்லனாகக் காட்டினால் வழக்குத் தொடர்வோம் என்று மிரட்டலாம்.
வில்லனின் சாதி அடையாளங்களை மறைக்க , அவரின் முகத்தையே காட்டாமலிருக்கலாம்.  ஆண்கள் சங்கத்தினர் , ஆணை வில்லனாகக்  காட்டுவதை எதிர்க்கலாம். இதைப்போலவே பெண்களும் அரவாணிகளும் எதிர்த்தால் வில்லன் அரூப நிலை அடையலாம்.
பேய்கள் வழக்கு தொடரப்போவதில்லை.
விலங்குகளுக்கு ஏற்கனவே தடை.
வில்லன் தமிழில் பேசுவதால், மொழியை அவமதிப்பதாக தமிழறிஞர்கள் எதிர்ப்பார். வில்லனின் மொழியும் மறையும்.
இப்படியே எல்லாம் நல்லபடியாக நடந்தால் எதுவுமே இல்லாமல் எல்லோருக்கும் பிடித்தபடி படம் எடுத்து, அனைத்து தரப்பினருக்கும் போட்டுக்காட்டி ஒப்புதலுக்குப்பின்  வெளியிடலாம்.
திரையரங்குகள் காத்தாடினால் வழக்கம்போல ஷாப்பிங் மால்கள்,திருமண மண்டபங்கள் கட்டினால் ....மாலில் கடலைபோட்டு மண்டபத்தில் மாலை மாற்றி பல்கிப்பெருகும் தமிழினம்.

திடீரென உருவம், வசனம் என எதுவுமில்லாத புதுமைகள் வரலாம்.எப்படியோ, விரைவில் தமிழ்த்  திரை உலகம் பல புதுமைகளைத் தரப்போகிறது எனத் தோன்றுகிறது.
நம்பிக்கைதானே வாழ்க்கை.