Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Wednesday, 4 March 2015

08.11.2014
திரைப்பட ரசனைக்குழு உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றிய பின் மாணவர்களின் ரசனை எந்த அளவு இருக்கிறது? என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது.
ஒன்பதாம் வகுப்பில் உரையாடலைத்தொடங்கினேன்.
இப்போ நாம திரைப்படம் குறித்து பேசப்போறோம்.
மாணவர்கள் ஆர்வமானார்கள்.
ஒரு படத்தை விமர்சனம் செய்யப்போறோம்.
முக்கிய நிபந்தனை,
நடிகர்களின் ரசிகர் என்ற முறையில் தாக்குதல் கூடாது.
படத்தில் நீ பார்த்த நிறைகளை முதலில் சொல்லலாம்.
என்று சொல்லி படத்தின் பெயரை கரும்பலகையில் எழுதினேன்.
கத்தி.
படம் சூப்பர்.
கூட்டமா கத்தக்கூடாது. ஒருத்தர் எழுந்து சொல். பிறகு அடுத்தவர்.
விஜய் நடிப்பு, கதாநாயகி அழகு....
நாம படத்தோட கதை, மற்ற தொழில் நுட்ப செய்திகளை கவனிப்போம்.
கதாநாயகன் யாருக்காக போராடுறான்?
விவசாயிகள்.
வயதானவர்கள்.
விவசாய நிலம்.
திடீரென எனக்கு ஒரு கேள்வி தோன்றியது.
வில்லன் என்ன வேலை செய்கிறான்?
கம்பெனி.
இல்ல,பேக்டரி கட்டுறான்.
என்ன ஃபாக்டரி?
தொழிற்சாலை.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒருவர்கூட கோலா நிறுவனம் என்று சொல்லவில்லை.
பாடல்,நடனம் என்று நிறைகள் எழ, குறைகளைக்கேட்டேன்.

படம் முடியும்போது ஒரு விஜய் தப்பித்து வருகிறார். எப்படி என்று காட்டுப்போது காசை சுண்டுகிறார்,
ஆனா,அந்த சண்டைய காட்டல!
பெரும்பாலும் சண்டை,நடனம் போதவில்ல என்பதே குறைகளாக இருந்தது.
கதைத்திருட்டு குறித்த செய்திகள் யாருக்கும் தெரியவில்லை.
சார், படத்துல ஒரு நல்ல விஷயம் சொல்லவா?
சொல்லு.
நல்லவனால சண்டையெல்லாம் போடா முடியாது. அதுனால கெட்டவன்,அவன ஜெயிலுக்கு அனுப்பிட்டு எல்லாருக்காகவும் போராடுறான்.
அதிர்ந்துபோனேன்.
இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் தமிழ் சினிமா மசாலாவை விட்டு மாறாது என்று எண்ணினேன்.
மனம் ஏன் கதாநாயகனை விரும்புகிறது?
தமிழ் சினிமாவின் சுருக்கமான வரலாறு, சிறந்த இயக்குனர்கள்,போன்ற சில செய்திகளை சொன்னேன்.
நண்பர்களிடம் இவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ளலாம் என்று உயிரியல் ஆய்வகம் சென்றேன்.
12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிக்கொண்டிருந்தனர்.
நண்பரிடம் சுருக்கமாக சித்தியை சொல்லிவிட்டு, அந்த மாணவர்களிடம் ஒரு கேள்வி மட்டும் கேட்கலாமே! என்று கேட்டேன்.
தம்பிகளா, கத்தி படத்துல வில்லன் என்ன வேலை செய்யறார்?
சிறிது நேர யோசனைக்குப்பின்,
பாக்டரி.
கொக்கோ கோலா கம்பெனி.
இல்ல சார், MNC கம்பெனி.
போதும். எழுதுங்க.

Friday, 31 October 2014

நடிகவேள்


ஊர் ஆயிரம் சொல்லும்.வாழவேண்டிய வயது. நீ, திருமணம் செய்துகொள்.என்று தன் மனைவியை தனது நண்பனிடம் ஒப்படைக்கிறான் மரண வாயிலில் நிற்கும் நோயாளி ஒருவன்.
படம்- இரத்தக்கண்ணீர்
ஆண்டு- 1954
நடிகர்- நடிகவேள் எம்.ஆர். ராதா.
காலையில் தாலிகட்டியவள் வேறொருவனைக்காதலித்திருக்கிறாள் என்பதால் அவனைத்தேடி அவனுடனேயே சேர்த்துவைத்துவிடலாம் என ஒரு நல்லவன் 7 நாட்கள் முயன்று கண்டுபிடித்து இறுதியில் காதலனிடம் ஒப்படைகிறான்.காதலன் காதலியிடம் தாலியை கழற்றிவிட்டு வரச்சொல்ல, அவளோ தடுமாற, அந்த மலையாளக்காதலன் தமிழ்ப்பெண்களின் தாலிக்கயிற்றின் பெருமைகளைப்பட்டியலிட, கயிறுடனே காலமெல்லாம் வாழ்வாள்.
படம்- அந்த 7 நாட்கள்.
ஆண்டு- 1981
இயக்குனர், நடிகர் - கே. பாக்கியராஜ்.
நடிகவேளை நினைக்கும்போதெல்லாம் எனக்கு இந்த இரு படங்களின் இறுதிக்காட்சிகளே நினைவுக்கு வரும்.
பிற்போக்காகப்போய்க்கொண்டே இருக்கிறோம்.

Saturday, 26 July 2014

அன்பின் வலியது ?




நூறாண்டுகளுக்கு முன் பிறந்து ஓவியத்துறையில் மாபெரும் ஆளுமையாக விளங்கியவர் ஃபிரிடா காலோ
மெக்சிகோ நாட்டு ஓவியரான இவரின் பிறந்தநாளும் நினைவுநாளும் ஜூலை மாதத்தில்.
சில ஆண்டுகள் கழித்து ஃபிரிடா FRIDA திரைப்படத்தைப்பார்த்தேன்.

ஓவியர்களின் படங்களை ஒரே மூச்சில் எப்போதும் என்னால் பார்த்துவிட முடியாது. உணர்ச்சிப்பெருக்கால் அவ்வப்போது மனம் வேறு வெளிகளில் அவர்களுடன் சஞ்சரிக்கத்தொடங்கிவிடும்.
ஒரு வாரமாகியது, படம் முடிய.

இளம் வயதில் ஏற்பட்ட விபத்தால் முதுகுத்தண்டில் கடும் பாதிப்படையும் ஃபிரிடாவின் உடல் வலியின் வழியாகவே வாழ்கிறது.
உள்ளத்தின் அன்பு, உடலின் வலி, இன்பம்,காமம் .....
ஆண் ,பெண் வித்தியாசமின்றி உடல்களில் அன்பைத்தேடுகிறாள் ஃபிரிடா.
பெண் உடலை போகப்பொருளாக மட்டுமே பயன்படுத்தித்திரியும் டியகோ ரிவேராவை - சுவரோவியங்களால் உலகப்புகழ் பெற்ற ஓவிய மேதை- ஃபிரிடா சந்திக்கிறாள்.
இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

ஃப்ரிடாவின் ஓவியங்கள் பெண்ணின் உடல் வழியான அன்பையே உருவகப்படுத்துவதாக அமைகின்றன.
தொடர்ந்து பல பெண்களுடனான ரிவேராவின் உறவால் மனம் உடைந்த ஃபிரிடா அவரைப்பிரிகிறாள்.

அரசியல் அடைக்கலம் தேடி வரும் மேதை டிராட்ஸ்கியுடனான நட்பும் உறவில் முடிகிறது.

ஃப்ரிடாவின் உடல் மிகவும் பாதிப்படைகிறது.பாதங்கள் நீக்கப்படுகின்றன.
பெரும்பாலும் படுக்கையிலேயே அவளின் வாழ்நாட்கள் கழிந்திருக்கின்றன.
அன்போடு தேடி வரும் ரிவேரா, ஃபிரிடாவின் இறுதிக்காலம் வரை உடனிருந்து கவனித்துக்கொள்வதோடு அவளின் நெடுநாள் ஆசையான ஓவியக்கண்காட்சியை மெக்சிகோவில் நடத்துகிறார்.

ஃபிரிடா, தனது வாழ்நாள் முழுதும் பெண் உடலும் மனமும்
உணரும் எதிர்நோக்கும் போராட்டங்களை ஓவியங்களில் பதிவு செய்து வைத்திருப்பதாலேயே உலகமெங்கும் கொண்டாடப்படுகிறாள்.

காலந்தோறும் ஃபிரிடாக்கள்,
அன்பு உள்ளங்களைத்தேடுகிறார்கள்.
உலகம் அவர்களின் உடல்களை நாடுகிறது.

குறிப்பு : எப்போதும் ஒரு ஆளுமையைப்பற்றிய திரைப்படம் எடுக்கும்போது மேல்நாட்டவர் காட்டும் அக்கறை, நடிகர்களின் உழைப்பு வியந்து பாராட்டப்படும். இப்படத்தில் ஃபிரிடாவாக சல்மா ஹைக் நடித்திருக்கிறார் என்று பாராட்டவே தோன்றவில்லை.
ஃபிரிடாவே நடித்திருக்கிறார்.
 

காணாமல் போன காமராசர்



ஆளில்லாத லெவல் கிராசிங்.
பள்ளிப்பிள்ளைகளுடன் ஒரு வேன் சிக்கிக்கொண்டது.எங்கோ தூரத்தில் ரயில் வந்துகொண்டிருக்கிறது. ஓட்டுனர் இறங்கி ஓடுகிறார்.
மற்றவர்கள் அனைவரும் இறங்கமுடியாமல் கதறுகின்றனர்.
ஒரு மாணவன் ஜன்னல் வழியாகக்குதித்து,
தண்டபாளத்தில் ஓடுகிறான்.அவன் பின்னால் 'அண்ணே' என்றபடியே மற்றொரு சிறுவனும் குதித்தோடி வருகிறான். மயங்கி விழுகிறான்.
ரயில் வந்துகொண்டே இருக்கிறது.
முதலில் குதித்த சிறுவன் சிவப்புக்கட்டம் போட்ட சட்டை அணிந்திருக்கிறான். கால் சட்டையிலிருந்து கைக்குட்டையை எடுத்து ஆட்டியபடியே ரயிலை நோக்கி ஓடுகிறான்.
கைக்குட்டை வெள்ளையாக இருக்கிறது.
ஓடிக்கொண்டே பார்த்தவன் கண்களில், தண்டபாளத்தின் ஓரத்திலிருந்த பீர் பாட்டில் படுகிறது.
பாய்ந்தெடுத்து, ஒருகணம் யோசித்து, அதை அங்கேயே உடைத்து,கூரிய முனையால் கையைக்கிழித்து, கைக்குட்டையை இரத்தத்தில் நனைக்கிறான்.
சிவப்புக்கைக்குட்டையைப்பார்த்ததும் ரயில் நின்றுவிடுகிறது.

இப்படிச்சில அறிவுப்பூர்வமான காட்சிகளின் தொகுப்பாக 45 நிமிடங்கள் சிறார்களே பெரியவர்கள் போல வேடமிட்டு நடித்த படம் திரையிடப்பட்டது.எங்கள் பள்ளியைச்சார்ந்த 475 மாணவர்களும் 15 ஆசிரிய ஆசிரியைகளும் திரையரங்கிற்குச்சென்றிருந்தோம்.

காமராஜர் திரைப்படம் என்றுதான் சுற்றறிக்கை வந்திருந்தது.
எனது வகுப்பில் மாணவர்களுக்குப்பல்வேறு போட்டிகளைச்சொல்லியிருந்தேன். காமராஜரின் பிறந்தநாளுக்கு முதல்நாள் சென்றிருந்தோம்.
ஆனால்,காட்டப்பட்டதோ சிறுபிள்ளைகள் நடித்த, பெரியவர்களின் மூடத்தனமான கருத்துகளைச்சொல்லும் கத்துக்குட்டிப்படம்.
பாவம் மாணவர்கள்.

பல ஆண்டுகளுக்குப்பின் அரங்கு நிறைந்த காட்சிகளை அந்தப்பழமையான திரையரங்கு பார்த்திருக்கும்.

Saturday, 21 June 2014

பன்றி

"பான்ட்ரி" மராத்தி மொழிப்படம்.
தமிழில், பன்றி.
ஊருக்கு வெளியே ஒற்றைவீடு.
ஒதுக்கப்பட்டது.
கல்விக்கனவுடன் விடலைப்பையன்.
வயதுக்கேற்ற காதலும்.
குடும்ப வறுமைக்காக உழைத்த நேரம்போகப்படிப்பு.
கைக்குச்சிக்காத கரிக்குருவி,ஜீன்ஸ், கனவுப்பெண்.
வண்ணக்கனவுகள் நனவாகும் நம்பிக்கையில் சிறுவன்.

தானாய் வளர்ந்து திரியும் பன்றிகளை விரட்டும் குடும்பம்.
வேடிக்கை பார்த்துச்சிரிக்கும் ஊர்.
திறந்தவெளிக்கழிப்பிடப்பகுதியில் குறுகும் சிறுவன்.
விரட்டும் நிதர்சனம்,கரிக்குருவி.பன்றி.
நிலை உணர்ந்து வெடிக்கும்போது கேலிபேசுவோர் மீது கற்களை எறிகிறான்,கோபமும் அழுகையுமாய்.
இறுதியாய் ஒரு கல் என் முகத்தில் விழ,
கண்களை மூடிக்கொண்டேன்.

Wednesday, 7 May 2014

Artist

   ஓவியன்

               ஓவியக்கல்லூரியில் பயிலும் இருவரின் காதலை ஓவியத்துடன் சொல்லும் படம் ஆர்டிஸ்ட்.
பெற்றோரின் எதிர்புகளை மீறி ஓவியக்கல்லூரியில் சேரும் காயத்ரி, அவளின் சீனியர் மைக்கேலின் பேச்சுக்களால் கவரப்படுகிறாள்.ஓவியக்கலை குறித்த மைக்கேலின் பார்வைகள் கயத்ரியைக் காதல் கொள்ள வைக்கின்றன.
மைக்கேலின் விருப்பப்படி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழத்தன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள் காயத்ரி. காதலர்கள் தனியே வசிக்கத்தொடங்குகின்றனர்.
மைக்கேல் ஓவியத்தில் சாதிக்க விரும்புகிறான். காதலனுக்காகப் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறாள் காயத்ரி.அவளின் சம்பாத்தியத்தில் குடும்பமும் நடத்திக்கொண்டு,மைக்கேலுக்குத்தேவையான வரைபொருட்களை வாங்குவது சிரமமானதாக இருக்கிறது.
ஒரு விபத்தில் கண் பார்வையை இழக்கிறான்,மைக்கேல்.மருத்துவச் செலவுகளுக்குக் கல்லூரி நண்பன் அபினவ் உதவுகிறான். வாழ்க்கை மேலும் சிரமமானதாகிறது. கடுமையாக உழைக்கிறாள் காயத்ரி.கண் பார்வையற்ற நிலையிலும் மைக்கேல் ஓவியம் வரைய விரும்புகிறான்.

பல்வேறு வண்ணங்களை வாங்க இயலாத நிலையில்  காயத்ரிவருத்தப்படும்போது தன்னிடம் ஒரு பெட்டி ப்ருஷ்யன் நீலம் இருக்கிறது,அதை மைக்கேலிடம் கொடு என அபினவ் கூறுகிறான்.காயத்ரி தயங்க, மைக்கேலுக்குக் கண் தெரியாது என்பதால் கண்டுபிடிக்க இயலாது எனச் சமாதானம் சொல்கிறான். ,பிரஷ்யன் நீல வண்ணங்களை அபினவிடம்  பெற்று மைக்கேலுக்குத் தருகிறாள்,காயத்ரி..அவனும் பலவண்ணங்கள் கொண்டு வரைவதாக எண்ணிக்கொண்டு ஒரே வண்ணத்தில் ஓவியங்களை வரைகிறான்.
Dreams in Prussian Blue  என்ற தலைப்பில் ஓவியக்காட்சி தொடங்கும் வேளையில்
தனது ஆசைக்கு காயத்ரி இணங்க மறுத்ததால் ஒரே வண்ணத்தில் ஓவியங்களை வரைந்த உண்மையை அபினவ்  ,தன் மனைவிமூலம் மைக்கேலிடம் வெளிப்படுத்திவிடுகிறான்.
பல்வேறு வண்ணங்களை மனக்கண்ணில் கண்டு வரைந்த ஓவியங்கள் ஒரே வண்ணத்தில் இருப்பதை அறிந்து கோபம் கொள்கிறான், மைக்கேல்.
தான் ஏமாற்றப்பட்டதாக மனம் வெறுத்த மைக்கேல், காயத்ரியை தன் வாழ்விலிருந்து வெளியேற்றுகிறான்.
மைக்கேலாக பகத் பாசில், காயத்ரியாக ஆன் அகஸ்டின் இருவரும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கலைஞனாக இருந்தாலும் தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கும் ஆணாதிக்கவாதியாக மைக்கேல்.
காலம் காலமாக தான் விரும்பியவனுக்காக வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் பெண்ணாக காயத்ரி.
கலைத்துறையில் சாதிக்கத்துடிக்கும் இளைஞர்களின் வெறியை பகத் பாசில் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.சாதிக்கவேண்டும் என்ற வெறியே தன்னைச்சார்ந்தவர்களை  துன்பத்திற்குள்ளாக்குகிறது என்றாலும் ஒரு கலைஞன் பலவேளைகளில் தன்னைப்பற்றிமட்டுமே சிந்திப்பவனாக இருக்கிறான்.
அன்பு,அரவணைப்பிற்காக ஏங்குபவள் என்பதாலேயே எளிதில் பெண்ணைத் தன ஆசைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆண்கள் பெரும்பாலான ஆண்கள் நம்புகின்றனர். இயல்பாக அபினவின் ஆசைகளைக் காயத்ரி கடந்துசெல்லும் காட்சிகள் கவித்துவமானவை, பெண்ணின் இயலாமையையும் வெளிப்படுத்துபவை.
ஓவியக்கலையின் பரிமாணங்களை விவாதிக்கும் இப்படம் காதல் உணர்வை மென்மையாக வெளிப்படுத்துகிறது.
புதுமை பேசுபவர்களின் செயல்பாடுகளில், மன இடுக்குகளில் தேங்கிக்கிடக்கும் கசடுகளை, பழமை  முகமூடிகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது  இந்த மலையாளத்திரைப்படம்.
Dreams in Prussian Blue ஆங்கில நாவலை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்  சியாமாபிரசாத்.

Tuesday, 6 May 2014

அலை வாழ்க்கை 
Breaking the Waves படத்தைப்பற்றி முகநூல் மூலமே அறிந்தேன்.
உடனே படத்தைப்பார்த்துவிட வேண்டுமென மனம் துடித்தது.


டென்மார்க் நாட்டில் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் பெஸ் என்ற பெண்ணே முக்கிய பாத்திரம்.
கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் கட்டுப்பாடான கிராமம். பெஸ், இறை நம்பிக்கை மிகவும் உடையவள்.குழந்தை உள்ளம் படைத்தவள். இயான் என்பவரை மணக்கிறாள். கணவரை உயிராக நேசிக்கிறாள்.
என்னை நிறுவனத்தில் வேலைசெய்யும் இயான் ஒரு விபத்தில் சிக்கி உடல் செயல்பாட்டை இழந்து படுத்த படுக்கையாகிறார்.
'இனி என்னால் பயனில்லை,வேறு திருமணம் செய்துகொள்' என இயான் சொல்ல, மறுக்கும் பெஸ் தனது காதல் இயானைக்குணப்படுத்தும் என நம்புகிறாள்.


இயானுக்கு விபரீத ஆசை ஒன்று தோன்றுகிறது,
பெஸ்,வேறு ஆணுடன் உறவுகொண்டு அதைத் தன்னிடம் கூறவேண்டும்.
அதிர்ச்சியடையும் பெஸ், கணவன் மீது கொண்ட காதலால் அவனின் ஆசையை நிறைவேற்றத்தொடங்குகிறாள்.
ஊர் பழிக்கிறது.பெஸ் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. கடவுளோடு பேசுவதாக நம்பி எப்போதும் போல அவளே கடவுளாகவும் பேசிக்கொள்கிறாள்.இயேசு அவளுடனே இருப்பதாக ஆணித்தரமாக நம்புகிறாள்.
இயான் உடல்நிலை மோசமாகிறது. மருத்துவரின் வார்த்தைகளை நம்ப மறுக்கும் பெஸ் இயான் எழுந்து நடமாடுவார் என நம்புகிறாள்.
அதிர்ச்சிகரமான இறுதிக்கட்டத்தில் பெஸ் இறக்கிறாள்,
இயான் பிழைக்கிறார்.


பெஸ்,பாவி.எனவே இறுதிச்சடங்குகள் செய்யாமல் புதைத்துவிட வேண்டுமென ஆலயத்தில் முடிவுசெய்கின்றனர்.
நண்பர்கள் உதவியுடன் பெஸ் உடலை கடலுக்குள் எடுத்துச்சென்று ஜல சமாதியாக்குகிறார் இயான்.
அனைவரும் ஆச்சரியப்படும்படியாக வானிலிருந்து மணியோசை கேட்கிறது.
இரண்டரை மணிநேரம் ஓடும் இப்படம் முழுவதும் பெஸ் ஆக நடித்திருக்கும்  Emma Watson நம் மனதில் நிறைகிறார். கடவுளுடன் பேசும் காட்சிகள் நெகிழ்ச்சியானவை. ஒரு குழந்தைபோல படம் முழுவதும் நம்மையும் அவருடன் அழைத்துச்செல்கிறார்.
காதல்,அன்பு, நம்பிக்கையின் வலிமையை எளிமையாகக் கூறியதிலேயே இப்படம் வெற்றியடைகிறது.
படத்தின் இறுதிக்காட்சியில் வானிலிருந்து மணி ஒலிப்பது,பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்றபோதும் நம் மனம் நம்புகிறது என்பதே இப்படத்தின் வெற்றி.
இயான்,தன் மனைவியிடம் வேறு திருமணம் செய்துகொள் எனச் சொல்லும்போது ரத்தக்கண்ணீர் திரைப்படத்தின் இறுதிக்காட்சி என் மனதில் நிழலாடியது.

Monday, 20 May 2013

உஸ்தாத் ஹோட்டல்


மதுரையைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் என்ற மனிதர், சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் chef வேலைக்குச் செல்லும் முன் தனது ஊருக்கு வந்தார். சாலையோரம் உணவின்றித் தவித்த முதியவரைப் பார்த்தபோது மன மாற்றமடைந்து ,
ஆதரவின்றித் தவிப்போருக்கு உணவு சமைத்துத் தருபவராக மாறினார்.  இன்று அவர் தொடங்கிய  அக்க்ஷயா டிரஸ்ட்  ஆதரவற்றவர் காப்பகமாக வளர்ந்துள்ளது.
இந்த மாமனிதரின் கதை, கேட்போரை நெகிழச் செய்யும்.
இதையே தனது கதையின் உச்சமாக வைத்து அற்புதமான திரைப்படமாக மலையாளத்தில் உருவாக்கியுள்ளார் அன்வர் ரஷீத்.
மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற அத்திரைப்படம் "உஸ்தாத் ஹோட்டல்".
தாயை இழந்து, சகோதரிகளுடன் வளர்ந்ததால் சமையலில் ஆர்வமுடன் வளர்கிறான் பைசல். சுவிட்சர்லாந்திற்கு படிக்கச் சென்றவன் அப்பாவிற்குத் தெரியாமல் சமையல் கலை படிக்கிறான்.இலண்டனில்  வேலை கிடத்த கையோடு தனது ஊரான கோழிக்கோட்டுக்கு வருகிறான்.சமையல் கலைஞன் என்று தெரிந்ததால் திருமண நிச்சயம் தடைப்படுகிறது. அப்பாவின் கோபத்திற்கு ஆளாகி வீட்டைவிட்டு வெளியேறுகிறான். தாத்தாவிடம் செல்கிறான்.
பைசலின் தாத்தா கரீம், உஸ்தாத் ஹோட்டல் என்ற உணவு விடுதியை கோழிக்கோடு கடற்கரையில் நடத்திவருகிறார்.
அங்கு தயாராகும் பிரியாணி அனைவராலும் விரும்பப்படுவது.
பேரனைக்கண்ட தாத்தா மகிழ்கிறார்.நான் அயல் நாட்டில் சமையல் கலை படித்தவன் என்று பைசல் கூறும்போது,
"வயித்த யாராலயும் நிரப்ப முடியும்,மனசயும்  நிரப்புரதுதான் முக்கியம்"
என்று கரீம் சொல்லுவதிலேயே அவரின் சிறப்பு வெளிப்படுகிறது. அங்கேயே தாத்தாவுடன் அனைத்து வேலைகளையும் கவனிக்கிறான். தாத்தாவின் சிபாரிசால் அருகிலிருக்கும் 5 நட்சத்திர விடுதியில் வேலைக்குச் சேர்கிறான்.ஐரோப்பிய கேரளா உணவுத்திருவிழாவில் நல்ல பெயர் கிடக்கிறது.

பைசலின் காதல், உஸ்தாத் ஹோட்டலை ஆக்கிரமிக்க நினைக்கும் 5 நட்சத்திர விடுதி உரிமையாளரின் கோபம்- அதனால் உஸ்தாத் ஹோட்டல் மூடப்பட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்படுதல் எனக்  கதை  சீராகச் செல்கிறது.

ஐரோப்பிய கேரளா உணவுத்திருவிழாவிற்கு  வந்த chef  மூலம் பைசலுக்கு பாரிஸில் வேலை கிடக்கிறது.தாத்தாவின் உடல் நலம் குறைகிறது. நல்ல வேலைக்குச் செல்லும்வேலையில் தாத்தா  இப்படி உணர்வுப்பூர்வமான தடையாக இருக்கிறாரே என வருந்துகிறான்.
மருத்துவமனையில் இருக்கும் தாத்தா,பைசலை அழைத்து,
உனக்கு விருப்பமான வேலைக்குப் போ.அதற்கு முன் மதுரையிலிருக்கும் எனது நண்பரான நாராயணன் கிருஷ்ணனிடம் இந்தக் கடிதத்தையும் பணத்தையும் கொடுத்துவிட்டு வா எனக் கூறுகிறார்.
பைசல் மதுரை பயணமாகிறான். நாராயணன் கிருஷ்ணனைப் பார்த்து கடிதம் மற்றும் பணத்தக் கொடுக்கிறான்.கரிமின் பேரன் என அறிந்து அவரும் மகிழ்கிறார். கடிதத்தைப் படிக்கிறார்.

" அன்பு நண்பரே,இந்தக் கடிதம் கொண்டு வருபவன் என் பேரன்.எப்படிச் சமைப்பது என்று அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.ஏன்? சமைக்க வேண்டுமென நீங்கள்தான் சொல்லித்தர வேண்டும்"

 நாராயணன் கிருஷ்ணன்வீட்டில் நிறையப் பேருக்கு உணவுதயாராகிக் கொண்டிருக்கிறது.அவருடன் சென்று அனைத்தையும் பார்க்கிறான் பைசல்.மறுநாள் ஒரு மனநலம் குன்றியோர் விடுதிக்குச் சமைக்கச் செல்லும் நாராயணன் கிருஷ்ணன்,பைசலை பிரியாணி செய்யச் சொல்கிறார்.தாத்தா சொல்லித்தந்தபடி செய்கிறான் பைசல். குழந்தைகளின் அன்பு அவனை மாற்றுகிறது.ஊர் திரும்புகிறான். தாத்தா இறந்துவிட்ட செய்தி அறிந்து வருந்துகிறான்,உஸ்தாத் ஹோட்டலைத் தொடர்ந்து நடத்துகிறான்.


படத்தில் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். கரீமாக நடித்துள்ள முதுபெரும் நடிகர் திலகன் இன்று நம்மிடையே இல்லையே என்ற எண்ணமே கண்களை நனைக்கிறது.

மனதை நிறைக்கும் கதை.எவ்வளவோ ஓடி ஆடிச் சம்பாதிக்கிறோம்,ஏன் ? என்று எண்ணியதுண்டா?



Sunday, 17 February 2013

விஸ்வரூபம்


விஸ்வரூபம் வெளியீட்டில் நடந்த கூத்துக்கள் என்னைச்சில நாட்கள் மகிழ்ச்சியாக வைத்திருந்தன.
ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு குப்பைப்படங்களின் மீது வழக்குகள் போடப்போட என் மனம் இன்பத்தில் துள்ளியது.
தமிழ் திரைப்படங்கள் எந்தவகையுள்ளும் அடங்காத குப்பைகள். அவ்வப்போது ஏதேனும் நம்பிக்கை தோன்றினாலும் சாக்கடை.
இதைச் சுத்தம் செய்யவே முடியாது என்று நம்பிக்கை இழந்திருந்த வேளையில், விஸ்வரூபம் விவகாரம் அதைத்துளிர்க்கச் செய்திருக்கிறது.

மத அடிப்படைவாதிகளைத் தொடர்ந்து சாதிச் சங்கங்கள்,எங்கள் சாதிக்காரர் ஹீரோவாக மட்டுமே காட்டப்படவேண்டும்,
வில்லனாகக் காட்டினால் வழக்குத் தொடர்வோம் என்று மிரட்டலாம்.
வில்லனின் சாதி அடையாளங்களை மறைக்க , அவரின் முகத்தையே காட்டாமலிருக்கலாம்.  ஆண்கள் சங்கத்தினர் , ஆணை வில்லனாகக்  காட்டுவதை எதிர்க்கலாம். இதைப்போலவே பெண்களும் அரவாணிகளும் எதிர்த்தால் வில்லன் அரூப நிலை அடையலாம்.
பேய்கள் வழக்கு தொடரப்போவதில்லை.
விலங்குகளுக்கு ஏற்கனவே தடை.
வில்லன் தமிழில் பேசுவதால், மொழியை அவமதிப்பதாக தமிழறிஞர்கள் எதிர்ப்பார். வில்லனின் மொழியும் மறையும்.
இப்படியே எல்லாம் நல்லபடியாக நடந்தால் எதுவுமே இல்லாமல் எல்லோருக்கும் பிடித்தபடி படம் எடுத்து, அனைத்து தரப்பினருக்கும் போட்டுக்காட்டி ஒப்புதலுக்குப்பின்  வெளியிடலாம்.
திரையரங்குகள் காத்தாடினால் வழக்கம்போல ஷாப்பிங் மால்கள்,திருமண மண்டபங்கள் கட்டினால் ....மாலில் கடலைபோட்டு மண்டபத்தில் மாலை மாற்றி பல்கிப்பெருகும் தமிழினம்.

திடீரென உருவம், வசனம் என எதுவுமில்லாத புதுமைகள் வரலாம்.எப்படியோ, விரைவில் தமிழ்த்  திரை உலகம் பல புதுமைகளைத் தரப்போகிறது எனத் தோன்றுகிறது.
நம்பிக்கைதானே வாழ்க்கை.

Sunday, 18 November 2012

மரணக் கவிஞர் குழு

பள்ளிப் பருவம் வாழ்வின் நாற்றாங்கால்.
  ஆடம்பர வாழ்க்கைக்கான பணம் சம்பாதிக்கும் வேலைகளை அடையவே கல்வி என்று இன்றைய மாணவர்கள் பல வழிகளில் பெற்றோரால் அறிவுறுத்தப் படுகின்றனர்.டாக்டர்,பொறியாளர்,கணிப்பொறி வல்லுநர் எனப் பெற்றோரின் ஆசை விளக்கில் தோன்றும் பூதங்களாகவே பிள்ளைகள் நடத்தப்படுகின்றனர்.பணமே வாழ்க்கை என அனைவரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
அறிவு வளர்ச்சி,மானுடப் பண்புகள் போன்றவை எழுத்தில் கூட இல்லாமல் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கூடங்களும் மாணவர்களை மனிதர்களாக நடத்தாமல் மதிப்பெண்களால் அளவிடுகின்றன. கல்விக்கூடங்களில் மானுடத்தைப் போதிக்கும் ஆசிரியர்கள் அருகி வருகின்றனர்.
 அதிக அளவு மதிப்பெண் பெறும்  மாணவர்களை உருவாக்கும் பள்ளியே சிறந்த பள்ளியாகப் போற்றப்படுகிறது.
தம் பிள்ளைகள் மதிப்பெண்களைக் குவிக்க என்ன விலை வேண்டுமானாலும் தரப் பெற்றோர்கள் தயாராக உள்ளனர். அதிக லாபம் தரும் வியாபாரமாகவே பெரும்பாலான கல்விநிலையங்கள் 
நடத்தப்படுகின்றன. புரிந்தாலும் புரியாவிட்டாலும் மனப்பாடம் செய்தே தீரவேண்டுமென ஆசிரியர்கள் சொல்லித்தருகின்றனர். பாடத்தை வாசித்து விடும் இயந்திரமாகவே பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கின்றனர். மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யாருமே கவலைப்படுவதில்லை.
அடக்குமுறை பள்ளிகளின் கல்விமுறை பற்றிய உலகப் படங்களில் முதன்மையானதாகக் கொண்டாடப் படுவது Dead Poets Society. Tom Schulman தனது பள்ளி வாழ்விலிருந்து எழுதிய கதையை Peter Weir இயக்கியுள்ளார்.1989 இல் எடுக்கப்பட்ட இப்படத்தில் Robin Williams ஆசிரியராக நடித்துள்ளார்.
 அமெரிக்காவின் புகழ்பெற்ற பள்ளிகளுள் ஒன்றான வெல்டன் அகாடமியின் கல்வியாண்டுத்தொடக்கம். 17 வயது வரையான மாணவர்கள் பயிலும் பள்ளி அது.
அறிவிற்கான ஒளி என்று பள்ளி முதல்வர் நீட்டும் மெழுகுவர்த்தியிலிருந்து மாணவர்கள் தங்களுடைய மெழுவர்த்தியை ஒளிஏற்றிக் கொள்கின்றனர்.பள்ளியின் பழம் பெருமை,கண்டிப்பு,சட்ட திட்டங்கள்,நடைமுறைகள் குறித்து முதல்வர் உரையாற்றுகிறார். புதிய ஆங்கில ஆசிரியராக நமது பள்ளியின் முந்நாள் மாணவரான
ஜான் கீட்டிங் பணியாற்றுவார் என அறிமுகம் செய்து வைக்கிறார். கூட்ட முடிவில் பெற்றோர்கள் தம்  முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு பிள்ளைகளை   விட்டுச்செல்கின்றனர்.
மாணவர் விடுதியில் நீல் பெர்ரியும் டோட் ஆண்டர்சனும் ஒரே அறையைப் பகிர்ந்துகொள்கின்றனர்.நீல் துடிப்பானவன்.டாக்டர் ஆகவேண்டும் என அப்பாவால் கண்டிப்புடன் வளர்க்கப்படுபவன்.டோட்,கூச்ச சுபாவம் உள்ளவன். அவனது அண்ணனைப் போல உயர் பதவி பெறவேண்டுமென அதே பள்ளியில் சேர்க்கப்பட்டவன்.
நீல்  அறையில் மற்ற நண்பர்களும் கூடுகின்றனர்.முதல்வரின் உரையைக் கிண்டல் செய்கின்றனர்.பள்ளியின் பெயரை Hell-ton எனக் கேலி செய்துமகிழ்கின்றனர்.
மறுநாள் பள்ளி தொடங்குகிறது.ஆங்கில வகுப்பு.கீட்டிங் விசிலடித்தபடி வகுப்பினுள் நுழைந்து மானவர்களைக்கடந்து வெளியேறுகிறார்.அனைவரும் ஆச்சரியமாக பார்த்தபடி இருக்க,வகுப்பினுள் எட்டிப்பார்த்து அனைவரையும் வெளியே அழைக்கிறார். வரவேற்பறை. அனைவரையும் நிற்கவைத்து,தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். நீங்கள் என்னை மிஸ்டர் கீட்டிங் அல்லது 'ஓ கேப்டன் மை கேப்டன்' என அழைக்கலாம் என்கிறார்.அந்த வரியிலிருந்து கவிதை வகுப்பு தொடங்குகிறது. இந்த நாளைக் கைப்பற்றுங்கள். இந்தப் பள்ளியில் எத்தனையோ மாணவர்கள் பயின்றுள்ளனர்.அனைவருக்கும் ஒரே கனவுதான். இந்த நாளைக் கைப்பற்றுங்கள்.
கீட்டிங்கின் முதல் வகுப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.கோமாளித்தனம் என்றும் வித்தியாசமானது என்றும் பலவாறு அனைவரும் பேசிக்கொள்கின்றனர்.
மறுநாள் புத்தகத்தில் உள்ள 'கவிதையைப் புரிந்து கொள்வது எப்படி?' என்ற பாடத்தை வாசிக்கச் சொல்கிறார் கீட்டிங். கவிதையைக் அறிவியல்பூர்வமாக பலவிதமாக அளவிடுகிறது பாடம். முடிவில் கவிதையை அறிவியல்பூர்வமாக எப்படி அளவிட முடியும்? கவிதை என்பது உணர்வுப்பூர்வமானது.எனவே,தவறான பாடத்தை அனைவரும் கிழித்து விடுங்கள் என்கிறார்.மாணவர்கள் மகிழ்ச்சியாக புத்தகத்தைக் கிழிக்கின்றனர்.
' ஏன் நாம் கவிதையை எழுதவும்,படிக்கவும் வேண்டும்?
ஏனெனில்,நாம் மனிதர்கள். மருத்துவம்,சட்டம், பொறியியல்,போன்றவை வாழ்வதற்கான   பணத்தைத் தருபவை.
கவிதை, அன்பு, காதல் போன்றவை நம்மை உயிர்ப்புடன் வைப்பவை.'
என்று அரிய வகுப்பு நிறைவடைகிறது. மாணவர்கள் கீட்டிங்கை விரும்பத்தொடங்குகின்றனர்.
நீல், பழைய பள்ளி மலரிலிருந்து கஈட்டிங்கைப் பற்றிய குறிப்புகளை அறிகிறான்.'மரணக் கவிஞர் குழு' அமைத்தவர் என்பதைப் பற்றி அறியும் ஆவலுடன் நண்பர்கள் அனிவரும் ஆசிரியரிடம் கேட்கின்றனர்,
"பள்ளிக்கு அருகிலுள்ள ஏரிக்கு அப்பாலுள்ள குகையில் யாருக்கும் தெரியாமல் இரவுகளில் நண்பர்களுடன் சென்று கவிதைகள் வாசிப்போம். இது பள்ளி விதிகளுக்கு முரணானது.இருந்தாலும் கவிதைமேல் கொண்ட காதலால் அப்படிச் செய்தோம். இதை ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்." என்று கீட்டிங் கூறுகிறார்.

நீல், தனது நண்பர்களுடன் அன்றைய இரவே குகைக்குச் சென்று கவிதை வாசித்துத் திரும்புகிறான்.அவ்வப்போது இது தொடர்கிறது.

மைதானத்தில் கால் பந்து உதைத்தபடி கவிதை சொல்வது, ஓசையுடன் நடந்து கொண்டே கவிதை சொல்வது, வகுப்பறையில் மேசைமேல் ஏறி  நின்று வித்தியாசமான கோணத்தில் பார்ப்பது என கீட்டிங்கின் புதிய அணுகுமுறைகள் மாணவரிடையே ஆர்வத்தையும் மற்றவரிடையே பொறாமையையும் ஏற்படுத்துகின்றன.

மிட் சம்மர் நைட் டிரீம் என்ற நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு நீலுக்கு கிடைக்கிறது.அப்பாவிடம் கேட்டால் அனுமதி கிடைக்காது என்று,அவரின் கையெழுத்தை தானே போட்டு அனுமதிக்கடிதம் கொடுத்து நாடக ஒத்திகையில் ஈடுபடுகிறான். நாடகத்தில் மகன் நடிப்பதை எதிர்பாராத விதமாக அறிந்த தந்தை பள்ளிக்கு வந்து நீலைக் கண்டிக்கிறார்.மருத்துவர் ஆவதே அவனது குறிக்கோளாக இருக்கவேண்டும்.நாடகத்திலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்துகிறார். நீல் வழக்கம் போலத் தந்தையின் சொல்படிக் கேட்பதாகக் கூறுகிறான்.
ஆனாலும் மனம் பொறுக்காமல் இரவில் கீட்டிங்கின் அறைக்குச் சென்று அவரது கருத்தைக் கேட்கிறான்.
அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவது மகனின் கடமை. உனது ஆசைகளையும் அவரிடம் அன்பாக எடுத்துக் கூறி நடிக்க அனுமதி பெறுமாறு ஆசிரியர் கூறுகிறார்.
அப்பாவிடம் பேசினாலும் அனுமதிகிடைக்காது என முடிவுசெய்து,அவருக்குத் தெரியாமல் நாடகத்தில் நடிக்கிறான் நீல். நாடக முடிவில் அனைவரும் அவன் நடிப்பைப் பாராட்டுகின்றனர்.அவன் அப்பாவும் அரங்கிற்கு வந்திருக்கிறார்.கோபமுடன் நீலைத் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். தனது வார்த்திகளை அவன் மீறிவிட்டதாகவும் அவனை ராணுவப் பள்ளியொன்றில் சேர்க்கவிருப்பதாகவும் கூறுகிறார்.மனம் உடைந்த நீல்,இரவில் அப்பாவின் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொள்கிறான்.
நீலின் பெற்றோரின் வேண்டுகோளின்படி வெல்டன் பள்ளி முதல்வர் நோலன், நீலின் நண்பர்களையும் பெற்றோரையும்  அழைத்து மிரட்டி நீலின் தற்கொலைக்குக் காரணம் கீட்டிங்கின் தவறான போதனா முறைகள்தான் என எழுதி வாங்குகிறார்.டோட், மறுத்தாலும் அனைவரின் வற்புறுத்தலின் பேரில் கையொப்பமிடுகிறான். கீட்டிங் பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறார்.

மறுநாள் ஆங்கில வகுப்பு.பள்ளி முதல்வர் நோலன்,மாணவர்களின் புத்தகத்தை எடுத்து 'கவிதையைப் புரிந்து கொள்வது எப்படி?' என்ற பாடத்தை வாசிக்கச் சொல்கிறார். கீட்டிங்கின் சொற்படி அந்தப்பாடத்தைக் கிழித்து விட்டதாக அனைவரும் கூறுகின்றனர்.

" அது மிகச்சிறந்த அறிவியல் பூர்வமான அணுகுமுறை.இவ்வளவு நாள் நீங்கள் தவறாக வழி நடத்தப்பட்டு இருக்கிறீர்கள்.இனி நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன்." என்று தனது புத்தகத்தைக் கொடுத்து வாசிக்கச் சொல்கிறார் நோலன்.
அப்போது தனது உடைமைகளை எடுக்கவேண்டி அங்கு வருகிறார் கீட்டிங். அவரைப் பார்த்ததும் குற்ற உணர்வுடன் அனைவரும் தலை குனிய, பிறரின் வற்புறுத்தலின் பேரிலேயே தானும் கைஎழுத்திட்டதாக கதறுகிறான் டோட்.நோலன் அவனைக் கண்டித்து, விரைவில் வெளியேறுமாறு கீட்டிங்கிடம்  கூறுகிறார். முதல்வரின் சொல்லையும் மீறி தனது மேசைமேல் ஏறி நின்று  'ஓ கேப்டன் மை கேப்டன்' என்று கண்ணீருடன் அழைக்கிறான் டோட் . முதல்வர் கடுமையாகக் கண்டித்துச் சத்தமிட மற்ற சில மாணவர்களும் அதையே செய்கின்றனர்.அமைதியாக வெளியேறுகிறார் கீட்டிங்.

மாற்றங்களை விரும்புபவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்கத்தயாராகவும் இருக்கவேண்டும். எவ்வளவுதான் அடக்குமுறைகள் இருந்தாலும் கற்பித்தலில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தம் பணியைத் தொடருவார்கள். அவர்களிடமே மானுடத்தின் எதிர்காலம் ஆக்கம் பெறுகிறது.
பல்வேறு விருதுகளைக் குவித்த இப்படம் இன்றளவும் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் ஒரு பாடமாகவே விளங்கி வருகிறது.




Monday, 22 October 2012

சூப்பர் மேன் வருவாரா?

அமெரிக்கக் கல்வி பற்றிய ஆவணப் படமான Waiting for Superman பார்த்தேன்.2010 ஆம் ஆண்டு வெளியான இப்படம் அமெரிக்கக் கல்விமுறையின் சீரழிவுகளையும் எதிர்காலத்தேவைகளையும் அலசும் ஆகச்சிறந்த படம்.

"சூப்பர் மேன் -உண்மையில்லை என்று அம்மா சொன்ன நாளில்தான் நிறைய அழுதேன்.கிறிஸ்மஸ் தாத்தா வரமாட்டார் என்பதைவிட சூப்பர்  மேன் வரமாட்டார் என்பதுதான் என்னை அதிகம் பாதித்தது.ஏனெனில் சூப்பர் மேன், கெட்டவங்களை அழித்து நல்லவங்களை காப்பாற்றுவார்." என்று ஒரு ஆசிரியர் கூறுவதுடன் படம் தொடங்குகிறது.

ஒவ்வொருநாளும் அதே சடங்குகள்.....காலை உணவு,புத்தகப் பை, பள்ளிக்குச் செல்லுதல்.எதற்காக?

சில குழந்தைகளிடம் அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் ? என்ற கேள்வி கேட்கப்படும்போது ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு துறையைக் கூறுகின்றனர்.குழந்தைகள் தம் எதிர்காலம் குறித்த கனவுகளை, நண்பர்கள்,பெற்றோர்,மற்றும் ஆசிரியரிடமிருந்து பெறுகிறார்கள்.

4 ஆம் வகுப்பில் முதலிடம் பெறும்  மாணவர்கள் 5,6,7,8 என மேலே செல்லச்செல்ல பின்னடைகிறார்கள்.குறை யாரிடம் உள்ளது?
மாணவர்? ஆசிரியர்? கல்வித்திட்டம்?
 எனப் பல கேள்விகளுடன் தொடங்கும் படம் அமெரிக்கக் கல்விமுறை மற்றும் ஆசிரியர்களின் நிறை குறைகளை அலசுகிறது.

அமெரிக்காவில் அருகமைப் பள்ளிகளில்தான் குழந்தைகள் கல்வி பயில வேண்டும்.கிராமம் மற்றும் நகரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் வாழும் பகுதியிலுள்ள பள்ளிகள் தரத்தில் குறைந்ததாக உள்ளன.பல பள்ளிகள் 'இடைநிற்றல் தொழிற்சாலை'களாக ( dropout factories) இயங்குகின்றன.எட்டாம் வகுப்புவரை தள்ளப்பட்டு வருபவர்கள் 9,10 ஆம் வகுப்புகளில் பள்ளிப் படிப்பை பெரும்பாலும் கைவிடுகின்றனர்.

40 ஆண்டுகள் பழமையான ஒரு பள்ளியில் இதுவரை பயின்றவர்கள் 60,000 பேர்.அதில் கல்லூரிக்கல்வி முடிக்காதவர்கள் 40,000 பேர்.

அரசுப்பள்ளிகளில் குறைந்த இடங்கள்,ஆசிரியர்களின் ஆர்வக்குறைவு ஆகிய காரணங்களால் பெரும்பாலான பள்ளிகள் தரம் குறைந்ததாக உள்ளன.ஒரு சில பள்ளிகளே தரமானதாக உள்ளன.

இங்கே நான் சில செய்திகளைச்  சொல்ல வேண்டும்.
மேலே கூறப்பட்ட செய்திகளைப் படிக்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?
 "அமெரிக்க பள்ளிகளும் இந்தியா போலத்தான்" என்றுதானே? அதுதான் இல்லை.மேலே சொல்லப்பட்ட செய்திகள் அமெரிக்க கல்விமுறையின் அவலத்தைக் காட்டினாலும் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் நம் நாட்டின் ஆகச்சிறந்த பள்ளிகளைப்போல் உள்ளது. விசாலமான வகுப்பறைகள்,சிறந்த கட்டிடங்கள்,உபகரணங்கள்,
வகுப்பிற்கு 20 மாணவர்கள் என வசதிகளில் எந்தக்குறையும் இல்லை.

இப்போது ஆவணப்படத்தைத் தொடருவோம்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய பகுதிகளில் கல்வியைத் தொடர இயலாதவர்களே அதிகம் உள்ளனர்.அவர்களில் பெரும்பாலானோர் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.அவரவர் குற்றங்களைப் பொறுத்து பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.ஒருவர் குறைந்தபட்ச தண்டனையாக 4 ஆண்டுகள் சிறைவாசம் பெறுகிறார் எனக்கொண்டால் ,
குறைந்தபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெரும் 1   சிறைவாசிக்கு ஆகும் செலவு
33,000 X 4= 1,32,000 டாலர்கள்.
ஒரு மாணவனுக்கு கல்லூரிக் கல்வி வரை ( 13 ஆண்டுகள்) ஆகும் செலவு
8,300 X 13 = 1,07,900 டாலர்கள்.
கல்வியைவிட சிறை பலமடங்கு மக்களின் பணத்தைச் செலவாக்குகிறது.
எனவே கல்வித்தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.

2020 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் பெரும் உயர் பணிகளுக்கு 12 கோடியே 10 இலட்சம் பேர் தேவை.ஆனால்,5 கோடி அமெரிக்கர்கள் மட்டுமே இதற்குத் தகுதியுடன் இருப்பார்கள்.மீதிப் பணியிடங்களை வெளிநாட்டினர் பெறுவார்கள்.இது அமெரிக்காவைப் பெரிதும் பாதிக்குமென பில் கேட்ஸ் கூறுகிறார்.

தற்காலக் குழந்தைகள் கற்பதில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள் என்ற கூற்று உண்மையல்ல.பல புதிய செயல்முறைகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்ற ஆசிரியர்களின்  கூற்றுப்படி,
 'சரியான வழிமுறைகள் கல்வியின் தரத்தை அதிகரிக்கும்'.

சுருக்கமாகக் கூறினால்,
தரமான ஆசிரியர்கள்
அதிகக் கற்றல் நேரம்
உலகத்தரமான கல்வி
உயர்ந்த எதிர்பார்ப்பு ,செயல்முறைகள்
பொறுப்பு உணர்ந்து செயல்படுதல்

ஆகியவை கல்வித்தரத்தை உயர்த்துவதாக கண்டறியப் பெற்றுள்ளன.எனவே சூப்பர் மேனைப் போன்ற ஆசிரியர்கள்தாம் இப்போதைய தேவை.என ஆவணப்படம் நிறைகிறது.

இந்த ஆவணப்படம் என்னுள் பல எண்ணங்களை எழுப்பியது.


அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளே இல்லாத பள்ளிகள்,தொலைநோக்கு திட்டங்கள் ஏதும் இல்லாமல் இலவசங்களில் இயங்கும் அரசுகள்,பிள்ளைகளை ஏதும் செய்ய இயலாத பெற்றோர்,பணி பெறும்வரை போராடி அதன் பின் ஓய்வு வரை ஓய்வெடுக்கும் ஆசிரியர்கள்,மாற்றிமாற்றிக் குறை கூறியே கழியும் கல்வித் திட்டங்கள் இன்னும் பலப் பல தடைகளைத் தாண்டியும் சிறந்த சில  மாணவர்கள் -அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் உருவாக்கப்படுகிறார்கள் என்றால் அதற்குக் காரணமான சூப்பர் மேன்களைக் கண்டறிந்து அவர்களின் வழிமுறைகளை ஆய்ந்து அனைவரும் பின்பற்ற முயல வேண்டும்.

ஆசிரியர்கள் தம் கடமையை உணர்ந்து தாமாகவே தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.கேட்பாரில்லாத இன்றைய சூ ழல், ஆசிரியர்களுக்கு எதிரான மக்களின் மனப்புலம்பலின் இறுதியில் பெருவெடிப்பாக மாறக்கூடும்.
ஆசிரியர்,பெற்றோர் கலந்துரையாடி புதிய செயல்முறைகளைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.
விருப்பு வெறுப்பு இன்றி விவாதம் செய்வோமா?

Saturday, 20 October 2012

கற்பிக்க, கசடற!





   Youtube இல் School of life என்ற படம் பார்த்தேன்.
பால்புரூக் நடுநிலைப்பள்ளியில் கடைசி வேலைநாள்.ஆசிரியர்,மாணவர் கூட்டம்.மாணவர் அனுபவப் பகிர்விற்குப்பின் அந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது அறிவிக்கப்படுகிறது.பலத்த ஆரவாரங்களுக்கிடையே நார்மன் வார்னர் பரிசைப் பெறுகிறார். கடந்த 43 ஆண்டுகளும் அவரே தொடர்ந்து சிறந்த ஆசிரியர் பரிசைப் பெற்றுவருகிறார்.அவர் மகன் மேட் ,அதே பள்ளியில் அறிவியல் ஆசிரியர்.தந்தையின் நிழலில் வளரும் அவருக்கும் சிறந்த ஆசிரியர் பரிசுபெற்ற ஆவலாக இருக்கிறது.பரிசு பெற்ற மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே மேடையிலேயே நார்மன் வார்னர் உயிர் பிரிகிறது.
இந்த ஆண்டின் சிறந்த ஆசிரியர் விருது பெரும் ஆவலுடன் புதிய கல்வியாண்டில் பள்ளிக்குச் செல்கிறார் மேட் .ஆசிரியர்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார் முதல்வர்.வார்னரின் பாடமான சமூக அறிவியலுக்கு புதிய ஆசிரியராக மைக்கேல் டி ஆஞ்சலோ பொறுப்பேற்கிறார்.மைக்கேல் அதே பள்ளியில் பயின்ற மாணவர்.
மைக்கேலின் அறிமுக உரையே மாணவரிடம் ஆரவாரத்தையும் மிஸ்டர்- டி என்ற செல்லப் பெயரையும் பெற்றுத்தருகிறது.
மேட்டின் அறிவியல் வகுப்பு தொடங்குகிறது.குதர்க்கமாகக் கேள்வி கேட்கும் மாணவர் வெளியேற்றப்படுகிறார்.வகுப்பறை ஒழுங்குடன்(?) பாடம் நடைபெறுகிறது.
மைக்கேல், மாணவர் இருக்கைகளை வட்டமாக மாற்றியமைக்கிறார்.அன்பாகப் பேசுகிறார்.அமெரிக்க சுதந்திரப் போர் நாடகமாகவே மைதானத்தில் நடத்தப்படுகிறது.பள்ளி முழுவதும் அனைவர் வாயிலும் மிஸ்டர்-டி .
மிஸ்டர் -டி , புகழடைவது மேட்டிற்கு எரிச்சலைத் தருகிறது.இரவு நேரங்களில் அப்பா பெற்ற விருதைப் பார்த்தபடி இருக்கிறார்.
இரவில் மிஸ்டர்-டி யின் வகுப்பறையுள் தேடுவது,மாணவர்களிடம் நெருங்க முயல்வது என மேட்டின் செயல்கள் அனைத்தும் நகைச்சுவையுடன் படமாக்கப்பட்டுள்ளன.
இரு நாட்கள் மிஸ்டர்-டி யைப் பின்தொடர்ந்து ,அவருக்கு நுரையீரல் புற்று நோய் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார் மேட் .டி-யின் மீது இறக்கம் வருகிறது.தனது தந்தையின் வழியையே மிஸ்டர்-டி பின்பற்றுவதை அறிகிறார்.
மறுநாள் தனது மாணவர்களுடன் டி -யின் வகுப்பறைக்குச் சென்று அவரது செயல்முறைகளை அறிகிறார்.
மிஸ்டர் -டி  யின் உடல் நலம் குறைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.புதிய சமூக அறிவியல் ஆசிரியை மீண்டும் வகுப்பறையை பாரம்பரிய(?) முறைக்கு மாற்றுகிறார்.
மேட்டின் வகுப்பறை செயல்பாடுகளின் களமாகிறது .இரண்டாண்டுகள் கழித்து வகுப்பறை காட்டப்படுகிறது.புகைப்படத்தில் மிஸ்டர்-டி யுடன் மேட்  மற்றும் மாணவர்கள்.அதன் கீழ் மிஸ்டர்-டி  யின் பிறந்த,இறந்த ஆண்டுகள்.அருகில் மேட்  கடந்த இரு ஆண்டுகளாகப் பெற்ற சிறந்த ஆசிரியர் விருதுகள்.
நல்லாசிரியர் விருது பெற ஆசைப்படுவது,மாதிரிகளை வைத்துப் பாடம் நடத்த முயல்வது,மாணவர்களுடன் நெருக்கமாக இருக்க முயல்வது,மிஸ்டர் டி மீதான பொறாமை,அதனால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள்,மிஸ்டர்-டி  யின் வழிமுறைகளைக் கற்க முயல்வது என நகைச்சுவையுடன் நடிப்பிலும் முதலிடம் பிடிக்கிறார் மேட்டாக வரும் டேவிட் பெமர்.
மிஸ்டர் -டி ஆக வரும் ரைன் ரெனல்ட்ஸ் எளிமையான நடிப்பால் எளிதில் கவருகிறார்.

பாடம் பார்த்து முடித்தவுடன் மனது கனமாகவும் இலகுவாகவும் இருந்தது. அந்த இருவரில் நான் யார்?
கல்வியாண்டின் தொடக்கத்திலேயே  என் வகுப்பில் இருக்கை முறைகளை மாற்றிவிட்டேன்.ஆனாலும் மாணவர்களுக்கும் எனக்கும் சிறிது இடைவெளி இருப்பதாகவே படுகிறது.வெறுமனே பாடம் நடத்துவதை விடுத்து பல்வேறு செயல்முறைகளில் ஈடுபட்டாலும் ஏதோ குறைகிறது.

எனது பாடமான தமிழில் அனைத்து மாணவரும் எழுதவும்,வாசிக்கவும்,பேசவும் திறமை பெறவேண்டும்.
வகுப்பறைச் சிறையிலிருந்து மாணவரை விடுவித்துக் கற்றலை இனிமையாக்கவேண்டும்.செயல்திட்டங்களை வகுத்து,செயல்படுத்திய பின் குறை நிறைகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.
ஒவ்வொரு நாளும் கற்க வேண்டியவர்கள்-ஆசிரியர்களும்,மாணவர்களும்.


Thursday, 4 October 2012

சாட்டை


கல்வி பற்றிய ஆங்கிலப் படங்களான 
    Dead Poets Society, Stand and Deliver,  Mr. Holland’s Opus,   Lean on Me ,                        To Sir, with Love
போன்றவற்றைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் தோன்றும்...
தமிழில் எப்போது இது போன்ற படங்களை எடுப்பார்கள்?.

நம் வருங்காலச் சமுதாயத்தை வடிவமைக்கும் கல்விக்கூடங்கள் அதிலும் குறிப்பாகப் பள்ளியைச் சரியாகக் காட்டிய படங்களே இல்லையென நினைக்கிறேன்.

இன்றைய கல்விமுறை, கல்வி உரிமைச் சட்டம் 2009 க்குப் பின் பல்வேறு மாற்றங்களை அடைந்து வருகிறது.ஆசிரியரை விடுத்து மாணவரை மையப்படுத்தி புதிய அவதாரம் எடுத்து வருகிறது.
எதுவாக இருந்தாலும் மாற்றம் ஆசிரியர் மனங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

சென்ற ஆண்டு பார்த்த  'மாணிக்கக்  கல்லு' என்ற மலையாளப்படம்  அரசுப்பள்ளியை மாற்றிக்காட்டும் ஆசிரியரை ஆரவாரமின்றி இயல்பாகக் காட்டியது.
யாருக்கும் அடங்காத மாணவர்கள், பகுதி நேர (?) ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ஆசிரியர், பொதுவுடைமை பேசும் ஆசிரியர், தூங்கும் ஆசிரியர், நாடகம்,கலை நிகழ்வுகளில் ஈடுபட்ட நேரம் போக பள்ளிவரும் ஆசிரியர்,கோழி முட்டை வியாபாரம் செய்யும் உடற்கல்வி ஆசிரியை ,கைத்தொலைபேசியில்  நேரம் செலவழிக்கும் ஆசிரியை, உர வியாபாரம் செய்யும் தலைமை ஆசிரியர் என மாணவர்கள் எக்கேடு கெட்டாலென்ன? கல்விமுறை, அரசு,கலாச்சாரச் சீர்கேடு ,என்றெல்லாம் பல்வேறு காரணங்களைக்  காட்டித் தப்பிக்கும் ஆசிரியர்கள் மத்தியில் மாணவர் நலனை நினைக்கும் ஒரு ஆசிரியர் எப்படி  அனைவரையும்  மாற்றுகிறார்?
ரசித்து ரசித்துப் பார்த்தேன்.

என் தமிழரும் படம் செய்தார்...சாட்டை.

பள்ளியை மையக்கருவாக வைத்து தமிழில் படம் எடுத்த தைரியத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.
கொலைவெறியுடன் மடியில் கத்தியை மறைத்து வைத்திருக்கும் வில்லன்...உதவித் தலைமை ஆசிரியரைத் தவிர மற்ற அனைத்துக் குறைகளையும் மன்னித்து விடலாம்.
படம் பார்க்கும் அனைவரின் மனதிலும் அவர்கள் வாழ்வில் சந்தித்த நல்ல,கெட்ட(?) ஆசிரியர்களின் நினைவுகள் மலரும்.இதுவே படத்தின் வெற்றி.
ஆசிரியர்கள், இந்தப் படத்தைப் பார்க்கும்போது  நான் இப்படியெல்லாம் இல்லை.கதாநாயகனைப் போல பல மாற்றங்களை என் வகுப்பறையில் செய்திருக்கிறேன் அல்லது செய்வேன் என்ற எண்ணம் தோன்றினால் மாற்றங்களை வரவேற்கத் தொடங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

எல்லாம் சரி.அசகாய சூரர்களான இன்றைய  மாணவர்கள் படுத்தும் பாட்டை எப்படிச் சமாளிப்பது?
ஆசிரியர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

Saturday, 4 August 2012

முத்துக் காதணிப் பெண்



Girl with a Pearl Earring
17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டச்சு (Dutch) ஓவியர் வெர்மீர்.(1632 - 1675)  இவரது ஓவியங்கள் பெரும்பாலும்  வீட்டின் உட்புறக் காட்சிகளையே சித்தரிப்பவை.பெரும்பாலும் அவரது ஓவிய அறையையே வரைந்திருக்கிறார். அக்கால நடுத்தர வர்க்கம் மற்றும் உயர் வக்கத்தினரையும் பணிப்பெண்களையும் 
அவரது ஓவியங்கள் காட்டுகின்றன.மிகத்தெளிவாக இல்லாவிட்டாலும் அவரது வாழ்க்கை பற்றிய குறிப்புகள் 
மூலம் அவரைப்பற்றி அறியமுடியும்.
                தம் வாழ்நாளில் ஏறத்தாழ 66 படங்கள் வரைந்திருந்தாலும் 34 ஓவியங்களே தற்போது காணக் கிடைக்கின்றன.மிகச்சிறப்பான பார்வைப்புலம்,வண்ணக்கலவை,அலங்காரப் பொருட்கள்
 ஆகியன இவரது ஓவியங்களின் தனிச்சிறப்பு.
camera obscura  என்ற கருவியைப் பயன்படுத்தியதாலேயே இவரது 
ஓவியங்களில் perspective மிகச் சிறப்பாக வந்துள்ளது என்று கூறுவர்.
               வெர்மீருக்கு 14 குழந்தைகள் பிறந்தன.பிறந்த சில நாட்களிலேயே இறந்த 4 தவிர பத்து குழந்தைகளுடன் வாழ்ந்த இவர் அக்காலத்தில் நாடெங்கும் ஏற்பட்ட பண நெருக்கடியால் வருந்தி தனது 43  ஆவது வயதிலேயே இறந்தார்.
               வெர்மீரின் புகழ் பெற்ற ஓவியங்களுள் ஒன்று Girl with a Pearl Earring. இதை வரைந்த நிகழ்வு  குறித்த டிரேசி  செவாலியே  வின்   புகழ் பெற்ற நாவலைத் தழுவி எடுக்கப்பெற்ற  திரைப்படம் Girl with a Pearl Earring.
              வெர்மீர் வசிக்கும் சிறு நகரம் டெல்ப். அவரது வீட்டுப் பணிப்பெண் வேலைக்கு வருகிறாள் கிரிட்.   மூத்த பணிப்பெண் கிரிட்டிற்கு வீடு முழுவதையும் சுற்றிக்காட்டுகிறாள்.வெர்மீரின்அறையைக் காட்டி
 " இது எஜமானரின் அறை.இதையும் நீ சுத்தம் செய்ய வேண்டும்.ஆனால் அனுமதியில்லாமல் உள்ளே செல்லக் கூடாது" என்கிறாள்.
மறுநாள் காலை எசமானியுடன் ஓவியரின் அறைக்குள் சென்று
 சுத்தம் செய்யத் தொடங்குகிறாள்.அப்போது வரைந்து கொண்டிருக்கும் ஓவியமும் அதற்கான மாதிரி அமைப்பும் அவளை மிகவும் கவருகின்றன.
                ஓவியரின் ஆறாவது குழந்தை பிறப்பையும் புதிதாக வரைந்து முடித்த ஓவியத்தை, வரையப் பணித்த பணக்காரரான வான் ரைவனிடம் ஒப்படைப்பதையும் விருந்தாகக்  கொண்டாட ஏற்பாடு செய்கிறார் ஓவியரின் மாமியார். 
                          
                  விருந்தின்போது தமது அடுத்த ஓவியத்தை வேறு  ஒரு 
ஓவியரிடம் வரையவிருப்பதாக அறிவிக்கிறார் வான் ரைவன்.
அவர் வாங்குவதை நம்பியே வெர்மீரின்  குடும்பம் உள்ளது.
                  மறுநாள் ஒவியரின் அறையைச் சுத்தம் செய்யச் செல்லும் முன் எஜமானியிடம் கேட்கிறாள் கிரிட் ,
     ஜன்னல்களை சுத்தம் செய்யட்டுமா?
     செய்.ஒவ்வொன்றையும் என்னிடம் கேட்கத் தேவையில்லை.
    இல்லை...ஜன்னலை சுத்தம் செய்தால் அறையின் ஒளியமைப்பு மாறும்.
    அதனாலென்ன? பரவாயில்லை.செய்.
                   இந்த சிறு உரையாடலே கிரிட்டின் ஓவிய ஆர்வத்தையும் 
ஓவியரின் மனைவியின் மெத்தனத்தையும் தெளிவாகக் காட்டுகின்றது.
கொஞ்சம் கொஞ்சமாக வீட்டை ஆக்கிரமிக்கத்தொடங்குகிறாள் கிரிட்,நமது மனதையும்.


                   அறையைச் சுத்தம் செய்யும்போது புதிய ஒரு பெட்டி 
இருப்பதைப்  பார்க்கிறாள் கிரிட்.அங்குவந்த ஓவியர் அவளிடம் இது ஓர் ஒளிப்படக்  கருவி  என்றும் அதைப் பயன்படுத்துவதையும் காட்டுகிறார்.அது எதிரே உள்ள காட்சியை பிரதிபலிப்பதைக் கண்டு ஆச்சரியப்படுகிறாள். மெதுவாக ஓவியருடன் பழகத் தொடங்குகிறாள்.வண்ணங்களைப்பற்றி எடுத்துக் கூறுகிறார் வெர்மீர்.நம்மைச் சுற்றியுள்ளவற்றை எப்படிப் பார்க்க வேண்டுமென அறிந்து கொள்கிறாள்.
                  கிரிட் , மாமிசம் வாங்கச் செல்லும்போது அங்கு வேலை பார்க்கும் இளைஞனுடன் நட்பு மலர்கிறது.
பணிப்பெண் என்ற புதிய ஓவியத்தை வரையத்தொடங்குகிறார் வெர்மீர்.வண்ணங்களை அரைப்பதில் உதவியாக இருக்கிறாள் கிரிட்.
                 புதிய ஓவியம் வரைய ஒப்பந்தம் பெரும் ஆசையில் 
ஓவியரின் மாமியார் மீண்டும் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்கிறார்.உங்களுடைய குடும்பத்துடன் விருந்து மேசையில் இருக்கும் காட்சியை பெரிய ஓவியமாக வரைந்தால் நன்றாக இருக்கும் என வான் ரைவனிடம் ஆசை காட்டுகிறாள்.விருந்தில் கிரிட்டைப் பார்த்து ஆசை கொண்ட ரைவன்,
  " விருந்துக்காட்சி வரையலாம்.ஆனால் என் அருகில் கிரிட் இருக்குமாறு வரைந்தால் மட்டுமே வாங்கிக்கொள்வேன்."
என்கிறான்.ஓவியர் அதன் உட்பொருளை அறிந்து அதிர்ச்சியடைகிறார்.
                 மறுநாள் மாமிசம் வாங்கச் செல்லும் கிரிட்டை பார்த்து 
அனைவரும் ரகசியமாகப் பேசிக்கொள்ள,கடைக்காரர் மற்றும் தன் காதலன் மூலம் ,ரைவன் ஒரு பணிப்பெண்ணை வரைய சொன்னால்அவளை அடைந்துவிடுவான்  என்று அர்த்தம் என அறிகிறாள்.காதலன் எச்சரிக்கின்றான்.
                கிரிட்,வெர்மீரிடம் தன்னை வரைய வேண்டாம் என 
 கேட்டுக்கொள்கிறாள்.ஓவியரும் சம்மதிக்கிறார்.ஆனால் அவளைத் தனியாக ஒரு ஓவியம் வரைய விரும்புவதாகக் கூறுகிறார்.அவளும் சம்மதிக்கிறாள்.தன் மனைவியின் முத்துக் காதணியை அணிந்துகொண்டால் நன்றாக  இருக்குமென ஓவியர் கூற தனக்கு காதில் துளை இல்லையென மறுத்துவிடுகிறாள் கிரிட்.
                வான் ரைவன் கிரிட்டைக் கற்பழிக்க முயல்கிறான்.
வாழ்க்கை பயத்துடனே கழிகிறது. 
கிரிட் காதணி அணிய மறுத்ததால் இரண்டு ஓவியங்களும் 
முடிக்கப்படாமல் இருக்கின்றன.இதனை  அறிந்த ஓவியரின் மாமியார் தனது மகள் வீட்டில் இல்லாத நாளில் அவளது முத்துக் காதணிகளை எடுத்து வந்து கிரிட்டிடம் கொடுத்து,
 இதை அணிந்துகொள்.உன்னால் தான் ஓவியங்களை முடிக்க வைக்க முடியும்.என் மகள் வீட்டில் இல்லை.-என்கிறாள். 
தானே கிரிட்டின் காதில் துளையிட்டு முத்துக் காதணியை அணிவித்து ஓவியத்தை வரைந்து முடிக்கிறான் வெர்மீர்.கிரிட்டின்  காதில் வெர்மீர் துளையிடும் காட்சி பாரதிராஜாவின் நாடோடித் தென்றலை நினைவு படுத்துகிறது.

           ஆரம்பம் முதலே கிரிட்டிற்கு ஓவியரின்  பிள்ளைகளுடனான உறவு சுமுகமாக இல்லை.ஓவியரின் மகள் மூலம் நடந்ததை அறிகிறாள் ஓவியரின் மனைவி.அவளுக்கு,கிரிட்டுடன் ஓவியர் பழகுவது பிடிக்கவில்லை.என் முத்துக்காதணியை இவள் எப்படி அணியலாம் என சண்டையிடுகிறாள்.அந்த ஓவியத்தைப் பார்க்க விரும்புகிறாள்.ஓவியர் காட்ட மறுக்கிறார். விவாதங்களுக்குப்பிறகு ஓவியத்தைக் காட்டுகிறார். கோபத்துடன் அதைக் கிழிக்கச் செல்லும் மனைவியைத் 
தடுக்கிறார்.கோபத்தில் "வீட்டை விட்டுப் போ " என கிரிட்டிடம் கத்துகிறாள்.ஓவியர் ஏதும் சொல்லாமலிருக்க அங்கிருந்து வெளியேறி காதலனுடன்வசிக்கத்தொடாங்குகிறாள் கிரிட்.
                 சிலநாட்கள் கழித்து ஓவியரின் மூத்த பணிப்பெண் கிரிட்டின் வீட்டிற்கு வந்து ஒரு துணி மடிப்பைக் கொடுக்கிறாள்.பிரித்துப் பார்க்கிறாள் கிரிட்.அதனுள் அவளை   வரைந்தபோது அவள் தலையில்  அணிந்திருந்த நீல வண்ணத் துணியுள் இருந்தன முத்துத் தோடுகள்.
               கடைசிக்காட்சியில் நடைபெறும் மனைவியுடனான 
வாக்குவாதத்தின் போது ஓவியம் நமக்குத் தனியாகக் காட்டப்படாமல் கிரிட் கையிலிருக்கும் காதணிகள்   ஓவியத்தின் காதணியாகமாறி அதிலிருந்து camera வெளியேறி அந்த அற்புதமான ஓவியம் நம் மனமெங்கும் நிறைவதோடு 
படம் முடிகிறது.
              17 ஆம் நூற்றாண்டின் டெல்ப் நகரம்,வெர்மீரின்  அறை ஆகியன  நம் கண்முன்னே அப்படியே காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் உடை அலங்காரங்களும் ஓவியம் போன்ற காட்சி  அமைப்புகளும் தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமைக்குச் சான்று.
         கிரிட்,   ஓவியருடன் நெருக்கமாகப் பழகும்போது தன் உடலில் எழும் உணர்வுகளை காதலன் மூலமாகவே தீர்த்துக்கொள்ளும் காட்சிகள் கவித்துவமானவை.
              கலைஞர்களின் வாழ்க்கையும் படைப்பிற்கான தேடல்களும் எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன.
Directed by
Peter Webber
Produced by Andy Paterson
Anand Tucker
Screenplay by Olivia Hetreed
Based on Girl with a Pearl Earring by
Tracy Chevalier
Starring Colin Firth
Tom Wilkinson
Cillian Murphy

Judy Parfitt
Music by Alexandre Desplat
Cinematography Eduardo Serra
Editing by Kate Evans

விருதுகள் 

Wins


வெர்மீரின் ஓவியங்கள்  




























Tuesday, 17 July 2012

குவஹாத்தி மற்றும் பில்லா


        குவஹத்தியில் நண்பர்களுடன் பாருக்கு சென்ற 11 ஆம் வகுப்பு மாணவி
இருபதுக்கும் மேற்பட்டவர்களால் நெரிசல் மிகுந்த சாலையில் பாலியல்  வன்முறைக்கு ஆளான படக்காட்சி நம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
      போதை எத்தகைய செயல்களை தூண்டுகிறது என்று எண்ணும் போது
எதிகாலத்தைப்பற்றிய கவலை அதிகரிக்கிறது.
    மிகக்குறைவான நபர்களையே காவல்துறை கைது செய்திருக்கிறது.
இதற்கெல்லாம் என்ன காரணம்?
பாலியல் பற்றிய சரியான புரிதல்கள் ஆண்களிடையே இல்லாததுதான் என நான் நம்புகிறேன்.
பெண் ஒரு இன்பச்சுரங்கம் என்றே அனைத்து ஊடகங்களிலும் காட்சிப்படுத்தப்படுகிறாள்.
விளம்பரங்கள்,திரைப்படப் பாடல்கள்.வசனங்கள்,கதைகள், எல்லாவற்றிலும் பெண் உடல் இன்பச்சுரங்கமாகவே காட்டப்படுகிறது.
திரைக்கதாநாயகர்கள் தம் நண்பர்களுடன் சேர்ந்து பெண்களைக் கேலியும் கிண்டலும் செய்வது நியாயப்படுத்தப்படுகிறது.
இணையம் எல்லா ரகசிய வாசல்களையும் திறந்து வைத்திருக்கிறது.
நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்க பெற்றோர்கள் ஓடி ஓடிச் சம்பாதிப்பவர்கள் ஆகியுள்ளனர்.
பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது இல்லாததாகியுள்ளது.
இதற்குப் பதிலியாக பிள்ளைகளுக்கு கேட்டதை வாங்கித்தருவது  செல்வச்செழிப்பின் அடையாளமாகவும்
கருதப்படுகிறது.பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளால் மிரட்டப்படுகின்றனர்.
        திரைக் கதாநாயகர்களே பெரும்பாலான இளைஞர்களின் ஆதர்சம்.
பில்லா 2 ஆப் பாகம் பார்த்தேன்.ஒரு கடத்தல்காரனின் கதை.எந்தவிதமான நம்பகத்தன்மையும் இல்லாமல்
படம் முழுவதும் நமது "கடவுள்" பலரையும் கொன்று குவிக்கிறார்.
'நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்ல' என்பது போன்ற நியாயப்படுத்தல் எதுவுமே இல்லாமல்
பணம் சம்பாதிக்கவேண்டி பில்லா-வைரம்,போதைப் பொடிகள்,ஆயுதக் கடத்தல் என்று சகட்டுமேனியாக கடத்தித்தள்ளி இளைஞர்களின் இதயத்தையும்(?) கடத்துகிறார்.
இது போன்ற திரைப்படங்களே பெரும்பாலும் தயாரிக்கப்படுகின்றன.
கவர்ச்சி நடனங்கள்,இரட்டை-அவ்வப்போது நேரிடையாகவும் ஆபாச வசனங்கள்,பாரில் குத்துப் பாடல்,
இப்படியாக தமிழ்-இதற்கெல்லாம் தமிழ் எதற்கு?-மனித வாழ் நெறிகளே இல்லாத படங்களே வெற்றிபெறுகின்றன.
இப்படியான கருத்துப் பட நாயகக் கடவுள்களை வழிபடும் இளைஞர்கள் வேறு என்னதான் செய்வார்கள்?
வேலையில்லாதவர்கள் - வழிப்பறி, திருட்டு.
சம்பாதிப்பவர்கள் - கார்பரேட் சாமியார்கள்
   என்ற வழிகளில் செல்கின்றனர்.
இப்படியே பேசிக்கொண்டிருந்தால்..?
எப்படி சரிசெய்வது?
 சாலைகளெல்லாம் பள்ளியை நோக்கியே செல்கின்றன.

ஆசிரியர்கள்,பெற்றோர் சேர்ந்து மாணவர்களின் மதிப்பெண்கள்
பற்றிமட்டும் பேசாமல் அவர்களை மனிதர்கள் ஆக்கவும் யோசிக்கத் தொடங்க வேண்டும்.
குறை சொல்வதை  விடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கத் தொடங்க  வேண்டும்.

Monday, 25 June 2012

கனவும் நம்பிக்கையும்                                                                                                                   
http://www.dancewithshadows.com/movies/wp-content/uploads/2008/11/taare-zameen-par-oscar-plagiarism.jpg http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/06/saguni_releasing.jpg                                                                                                                                                                                                       விடுமுறை நாளில் ஏதாவது படம் பார்க்கலாம் என்று சகுனி பார்த்தேன்.
முதலமைச்சராக வேண்டிய நல்லவர் மீது பெண் பழி சுமத்தி அரசைப்பிடிக்கும் வில்லன்.ஆகா அற்புதமான தொடக்கம் என மனம் மகிழ்ந்தது.
                          பாலம் கட்டுவதால் இடிபடப்போகும் தனது பரம்பரை வீட்டை (தினமும் நூற்றுக்கணக்கானோர் சாப்பிட்டுச்செல்லும் தர்மப்பிரபுவின் வீடு)
காக்கத் தனி மனிதனாக அமைச்சரைப்பார்க்க நகரம் வருகிறார் ஹீரோ.
                        வழக்கம் போலவே அரசியல்வாதி  ஏமாற்ற அடுத்தடுத்து  திருப்பங்களுடன் படம் விறுவிறுப்படைகிறது.
                        கதாநாயகன் கமலக்கண்ணன் -கிருஷ்ணசகுனியாய்,
*இட்லிக்கடை வட்டிக்காரியை கவுன்சிலராக்கி மேயரக்குகிறார்.
         அடியாட்களுடன் வட்டி வசூலித்தவர் மேயரானதும் திருந்தி மக்களுக்காக 
         உழைக்கிறார்.
*மரத்தடி சாமியாரை கார்பரேட் சாமியாராக்கி கோடிகளைக் குவிக்க       வைக்கிறார்.
* சிறையிலிருக்கும் எதிர்க்கட்சித்தலைவரை ஒரே கேள்வியில் பதவி ஆசையை இழக்கவைத்து மக்கள் தலைவனாக்கி ஆட்சியில் அமர்த்துகிறார்.
                                         இடையிடையே கதாநாயகியுடன் பாடல்,குத்துப்பாடல், சந்தானத்தின் நகைச்சுவை? என  இரண்டரை மணி நேரக்கனவில் மட்டுமே எல்லாம் சுபமாய் முடிய இருட்டுக் கொட்டகையிலிருந்து வெளியே வந்தேன்.
40 டிகிரி வெயில் முகத்தில் அறைந்தது.
                                    எவ்வளவு  பட்டாலும்  என்றாவது  இவர்கள் திருந்திவிடுவார்கள்  என்ற நம்பிக்கையிலேயே  இது போன்ற படங்களுக்குச்சென்று  தலைவலியை வாங்கிக்கொள்வதே என் வேலை.
                                    கைவசம் மருந்திருக்கு... பல்வேறு படங்களில் இன்று இரவு பார்த்தது , 
தாரே ஜமீன் பர் . 
                                  தன்னைப்போலவே டிஸ்லெக்ஷியா பாதிப்புள்ள மாணவனை படிக்கவும் வரையவும் மாற்றும் ஓவிய ஆசிரியரின் கதை. எத்தனைமுறை பார்த்தாலும் மனசுக்கு தெம்பு தருகிறது.

                               மசாலாப்படங்களின் கனவிலிருந்து மீட்டு எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை தரும் படத்தைப்  பார்த்த பின்பே தூங்கச்சென்றேன்.
ஆழ் துயிலில் தொடரும், கனவும் நம்பிக்கையும்.