Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Friday, 31 October 2014

கே.பி.எஸ்.


12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நண்பர்களுடன் சாலையில் சென்றுகொண்டிருந்தேன். ஒலிபெருக்கியில் ஒரு பாடல், கே. பி. சுந்தராம்பாள் பாடியது. அப்படியே நின்றுவிட்டேன். நண்பர்கள் அழைத்தார்கள். பாடலைக்கேட்டபின் வருகிறேன் என்று சொல்லி நின்றுவிட்டேன்.
இதுதான் என் நினைவில் இருக்கும் கே.பி.எஸ். பாடலை ரசித்த முதல் நிகழ்வு.

அதன் பின் எப்போது எங்கு கே.பி.எஸ். பாடல் கேட்டாலும் நின்று ரசித்திருக்கிறேன். பாடலுக்காகவே அவர் நடித்த படங்களைப்பார்த்திருக்கிறேன்.காதுக்குள் நுழைந்ததும் நரம்புகள் வழியே உடலெங்கும் பாயும் மின்சாரம் அவர் குரல்.அது எனக்குள் என்னவெல்லாம் செய்யுமென்று எழுத வார்த்தைகளால் இயலாது.

மகாகவி காளிதாஸ் படத்தில்,
" சென்று வா மகனே, சென்று வா" என்று பாடும் போது இன்று வரை அவர் என்னைப்பார்த்துப்பாடியதாகவே உணர்கிறேன்.

எனது நண்பர்கள் பலர் சூரியன் பண்பலையில் பணியாற்றுகிறார்கள் ,நண்பர் சுதன் பாலா 'சூர்யோதயம்' என்ற நிகழ்ச்சியை காலையில் வழங்கினாலும் கே.பி.எஸ். பாடல்களை அடிக்கடி ஒலிபரப்புகிறார்கள் என்பதற்காகவே காலை வேளையில் சமையலறையில் 'ரேடியோ மிர்ச்சி' கேட்கிறேன்.
கே.பி.எஸ் தனது குரலால் அன்றாடம் எனது ஒவ்வொரு அணுவுக்கும் புத்துயிரூட்டிகொண்டே இருக்கிறார்.
 
தினந்தோறும் ரசித்துக்கொண்டே இருக்கிறேன்.

Saturday, 31 May 2014

மனம் நிறைந்த மாணவன் - 1

நீண்ட நாட்களாகவே ஒருமுறையேனும் வீட்டிற்கு வருமாறு அழைத்துக்கொண்டிருந்தான் தங்கப்பாண்டி.
தங்கப்பாண்டி, எங்கள் பள்ளியில் படித்த மாணவன்.+2 க்குப்பின் அரசு இசைக்கல்லூரியில் சேர்ந்து கிராமியக்கலைகள் பயின்றவன்.
எங்கள் பள்ளியில் படிக்கும்போது கிராமிய நடனப்பயிற்சியில் ஆர்வமுடன் கலந்துகொண்டான். மிகவும் சிரமப்பட்டே நடனம் அவனுக்கு வசப்பட ஆரம்பித்தது.
தனது நண்பர்களை இணைத்துத்தனக்கென ஓர் கிராமியக் கலைக்குழுவை உருவாக்கிக்கொண்டான்.
கிராமியக்கலை நிகழ்சிகளுக்குச் செல்வது, மற்றநேரங்களில் கட்டிடவேளைகளுக்குச்செல்வது என நகர்கிறது வாழ்க்கை.
இரவு நேரத்தில் தங்கப்பாண்டியின் வீட்டிற்கு நண்பர் ஓவியர் ரவியுடன் சென்றேன்.


நன்கு குனிந்து நுழையுமளவு தாழ்ந்த வாசல்,ஒற்றை அறையுடன் ஓட்டு வீடு. குறுக்குச்சட்டம் முழுவதும் மெடல்கள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன.
அறையெங்கும் பரிசுப்பொருட்களும்,கிராமிய நடனங்களுக்குத் தேவையான பொருட்களும்.
வீட்டிலிருந்து ஊருக்கு வெளியே வந்தோம்.
வயல்வெளிகள்,வீட்டு மனைகளாக மாறியிருக்கின்றன. ஆங்காங்கே வீடுகள்.தனித்த ஒரு வீட்டின் மேலெரிந்துகொண்டிருந்த குழல் விளக்கொளியில் சிறார்கள்.
வேலைகளுக்குச்சென்று வந்தபின் தனது பகுதியில் வசிக்கும் சிறார்களுக்குஇரவு நேரத்தில் பல்வேறு கிராமியக்கலைகளைச் சொல்லித்தருகிறார் தங்கப்பாண்டி.
ஒயிலாட்டம்,சிலம்பாட்டம்,

கட்டைக்கால்  ஆட்டம்,தப்பாட்டம்,கரகம்,கபடி என அனைவரும் வெகு ஆர்வமுடன் பயின்று வருகின்றனர்.

பயிற்சியில் சேரும்போது தட்சிணையாக வெற்றிலைபாக்குடன் 11 ரூபாய்கள் தரவேண்டும். அவ்வளவுதான்.வேறு கட்டணம் ஏதுமில்லை.
சிறார்களின் பயிற்சியை வெகுநேரம் பார்த்து வியந்தோம்.
தங்கப்பாண்டி ஏராளமான சிறார்களுக்கு கிராமியக்கலைகளைப்
பயிற்றுவித்துள்ளார்.

கிராமியக்கலை பயிலவரும் பள்ளிச்சிறுவர் சிறுமியர் பலரின் கல்விச்செலவு,தனிப்படிப்புச் செலவுகளையும் தங்கப்பாண்டியே கவனித்துக்கொள்கிறார்.

இவரின் சேவையைப் பாராட்டி இளம் சாதனையாளர் விருது வழங்கிக்கௌரவித்துள்ளது,ஆனந்தவிகடன்
தங்கப்பாண்டி கண் நிறைந்த கனவுகளோடு கூறியவை,
" சார்,இப்போ 150 பேர் படிக்கிறாங்க. சிலபேரு பள்ளிக்கூடப் பசங்க,
அவங்களுக்கு பாடம் படிக்கவும் டியுசன் என் செலவுலேயே ஏற்பாடு பண்றேன்,என் பிரண்ட்சா சேந்து வேலைக்குபோய் சம்பாதிக்கறதுல ஒரு பகுதிய சேத்துவச்சு ஆட்டத்துக்குத் தேவையான பொருட்களைச் செஞ்சுக்கறோம்.எனக்கு ஒரு ஆசை, எல்லாப் பசங்களையும் சேர்த்து ஒரு அரங்கேற்றம் வைக்கணும். நாங்க வேலைக்குப் போற காசுல டிரஸ்,ஆட்ட சாமான்கள் வாங்கி வச்சுட்டோம்.எல்லாப்பசங்க, இது வரைக்கும் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த மூத்த கலைஞருங்க எல்லாரையும் கௌரவிக்கணும். அதுக்கு சால்வை,ஷீல்டுன்னு கொஞ்சம் செலவுக்குப்பணம் சேக்கணும்."


தங்கப்பாண்டியின் ஆசைகள் தன்னலமற்றவை.
எளிய கிராமியக்கலைஞனுக்கேயுரியவை.

Tuesday, 23 October 2012

மக்கள் கலைஞன்







இசை என்றவகையில் என் மனதில் பல்வேறு உணர்வுகளை கர்நாடக இசை ஏற்படுத்துகிறது.ராகங்களை பற்றிய அறிவு சிறிதும் எனக்கில்லாவிட்டாலும் நவீன இசை போலவே கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கும் செல்வதுண்டு.
மகாராஜபுரம் சந்தானம்,பாலமுரளி கிருஷ்ணா,M .S.சுப்புலட்சுமி,அருணா சாய்ராம்,சுதா ரகுநாதன்,நித்யஸ்ரீ மகாதேவன் எனப் பலரின் பாடல்களுக்கு,குறிப்பாக தமிழில் பாடியவற்றிற்கு நான் அடிமை.

இசைக்கருவி இசையில் என்றென்றும் என் உள்ளம் கவர் கள்வன் குன்னக்குடி வைத்யநாதன்.பல கச்சேரிகளை நேரில் ரசித்திருக்கிறேன் .
பல முறைகள் அவரிடம் பேசியுமிருக்கிறேன் .
சில ஆண்டுகளுக்குமுன் டெல்லியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்குபெற தமிழக அரசின் கிராமியக் கலைக் குழுவினருடன் நானும் கரகம் ஆடச் சென்றிருந்தேன்.தமிழ்நாடு விடுதியில் தங்கியிருந்தோம்.அங்கே குன்னக்குடியும் இருப்பதாக அறிந்து அனைவரும் அவர் அறைக்குச் சென்றிருந்தோம்.அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
ஒருவர் கதவைத் திறக்க,வந்தவர் ஏதோ  கூறினார்.
என்ன?என்று கேட்டார் குன்னக்குடி.
கதவைத் திறந்தவர் கூறினார்,"பக்கத்து அறையில போலிஸ் IG இருக்காராம்.சத்தம் ரொம்ப வருதாம்.அமைதியா இருக்கச் சொல்றாராம் "
வந்தவரை உள்ளே அழைத்து குன்னக்குடி சொன்னார்,
" அவன்கிட்டப் போய்ச் சொல்லு,பக்கத்துல இருக்கறது குன்னக்குடின்னு"

எந்தத் தொந்தரவும் இல்லாமல் வெகுநேரம் பேசியபின் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பினோம்.

மற்ற கர்னாடக இசைக்கலைஞர்களைப் போலின்றி மக்கள் விரும்பியதையும் தந்தவர் குன்னக்குடி.
அவரது கச்சேரி மூன்று பிரிவுகளாக இருக்கும்.முதலில் கர்னாடக இசையை வாசிப்பார்.அதன் பின் திரைப்படப் பாடல்கள்.பழைய பாடல்கள் முதல் அப்போது வெளியான பாடல்கள் வரை அனைத்தும் வாசித்தபின் பக்திப்பாடல்கள் தொடர்ந்து வாசிக்கப்படும்.ரசிகர்களும் கூடவே பாடிக்கொண்டே கேட்பது கண்கொள்ளாக் காட்சி.

இசையோடு அவர் முகம் காட்டும் பாவங்களும் தனித்தன்மையானவை.
கர்நாடக இசையை மேற்கத்திய இசைக் கருவியான வயலினில் வாசித்ததோடு மட்டுமில்லாமல் வயலினை,பக்க வாத்தியத்திலிருந்து மையத்திற்குக் கொணர்ந்தவர் குன்னக்குடி.
இந்த இணைப்பிலுள்ள பாடலைக் கேளுங்கள், அந்த மகத்தான கலைஞன் மக்களை மயக்கிய விதம் புரியும்....