Friday 31 October 2014

சோழர் கலைச்செல்வங்கள்- நவக்கிரகங்கள்


மயிலாடுதுறையில் பத்துநாட்களுக்குமேல் NCC முகாம் என்பதால் மனம் மிகவும் மகிழ்ச்சியால் துள்ளியது. இணையத்தில் தேடி கங்கைகொண்ட சோழபுரம் எவ்வளவு தூரம் என்று பார்த்தேன்.40 கி.மீ.என்று காட்டியது. தாராபுரமும் அப்படியே. இரண்டு ஊர்களையும் எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என முடிவுசெய்துகொண்டேன்.
தமிழக அதிகாரிகள் அனைவரும் ஒருநாள், அனுமதிபெற்று, அதிகாலை 5 மணிக்குக்கிளம்பினோம். கோவில்கள் என்றாலே நவக்கிரகக்கோவில்கலையே சொல்கிறார்கள். வாகன ஓட்டியிடம் என்னென்ன கோவில்கள் செல்லப்போகிறோம்?
என்று கேட்டேன்.
'நான் சொல்லும்படி கேட்டு,நவக்கிரகங்களை மட்டும் தரிசித்துவிட்டு உடனே வந்துவிட்டால் இன்றைய நாளுக்குள் ஒன்பது கோவில்களையும் தரிசித்துவிடலாம்.'
வேகமாக வந்துவிடுங்கள். என்றார்.


வேறு எந்தக்கோவில்கள் செல்வோம்? என்றேன்.
நவக்கிரகக்கோவில்களுக்குச்செல்வதாகத்தான் பேச்சு.என்றார்.
எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
வழியில் வேறு கோவில்கள் இல்லையா? என்றேன்.
அவருக்குப்புரியவில்லை.
தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம் இதெல்லாம் எங்கே இருக்கிறது? நாம் போகும் வழியில் பார்க்கலாமா? என்றேன்.
அப்படி வேறு கோவில்கள் போனால் நவக்கிரகக்கோவில்களை முழுமையாகப்பார்க்க முடியாது என்றார்.
முதலில் வைத்தீஸ்வரன் கோவில் சென்றோம்.
நேரே செவ்வாய்-இருக்குமிடம் சொல்லி விரைவில் வந்துவிடுங்கள் என்றார்.
அடுத்தது,திருவெண்காடு. புதன்- இருக்குமிடம் சொல்லி விரைவில் வந்துவிடுங்கள் என்றார்.
எனக்கோ ஆச்சரியம். இது பட்டினத்தடிகள் வாழ்ந்த இடம். முழு ஆலயத்தையும் பார்க்க விரும்பினேன். மற்றவர்களும் ஒப்புக்கொண்டனர். இப்படியே ஒருசில கோவில்கள். அவ்வப்போது நல்ல மழை.
மீண்டும் ஆரம்பித்தேன்.
இப்படியே சாதாரண கோவிலா போயிட்டிருக்கோமே....தாராசுரம்....
ஓட்டுனர் சற்றே குரலை உயர்த்திவிட்டார்.
" என்னசார், சாதாரணக்கோவில்னு சொல்றீங்க, எவ்வளவு பேர் வர்றாங்க தெரியுமா? லீவு நாள்ல லட்சக்கணக்குல வருவாங்க.தாராசுரத்துல அப்புடி என்ன இருக்கு?"
எனக்கு கோபம் வந்தது.
என்னங்க நீங்க? கலையம்சமே இல்லாத கோவிலை எல்லாம் கூட்டம் வர்றதுனால மட்டுமே பெரிசா சொல்றீங்க.இந்தக்கோவில் ஒன்பதுல சில மட்டுமே பழைமையா தெரியுது. தாராசுரம் சோழர் சிற்பக்கலையோட உச்சம் தெரியுமா? தேர்மாதிரியான வடிவமான கோவில்.
ஒரு வழியாக ' சந்திரன்' இருக்கும் திங்களூர் சற்றே தூரம். அதை வேண்டுமானால் விட்டுவிட்டு கங்கை கொண்ட சோழபுரம் போகலாம் என்றார். இரண்டு நண்பர்கள் என்பக்கம் வர, சந்திரன் கோபித்துக்கொள்ளமாட்டார் என்று திங்களூரை விட்டுவிட்டோம்.
வழியில் கும்பகோணத்தில் மதிய உணவு.
உணவகத்தில் கோவில்கள் பற்றி விசாரித்தாலும் நவக்கிரகக்கோவில்கள் பற்றியே சொல்கிறார்கள். கும்பகோணம் கோவில்களின் நகரம். என் மனம் மிகவும் வருந்தியது. கலைச்செல்வங்கள் நிறைந்த கோவில்கள் சொல்லப்படாமலே இருக்கின்றன. யார் சொல்வது?

தஞ்சையும் சிதம்பரமும் எப்படியோ தப்பிவிட்டன.சுற்றுலா செல்கிறார்கள்.
கங்கைகொண்ட சோழபுரம், ஆயிரம் ஆண்டுகளை இப்போதுதான் நிறைவு செய்திருக்கிறது.
இராஜேந்திரன், தந்தைக்கு ஏற்ற தனயன்.
அற்புதமான கலைச்செல்வம்.
மாலைவரை ராஜேந்திரனின் கரம்பற்றி சுற்றிச்சுற்றி வந்தேன்.

No comments:

Post a Comment