Friday 31 October 2014

பாரதிவிழா.


14 ஆண்டுகளுக்கு முன். சேதுபதி மேனிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப்பணி.
முதுகலைத்தமிழாசிரியர் செந்தூரன் அவர்கள் சொன்னார்,"எனக்கு ஒரு ஆசை,பாரதியின் நினைவு நாளுக்கு பள்ளிப்பிள்ளைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசளித்து 'பாரதி விழா' என்று கொண்டாடலாமா?"
நானும் ஆசைப்பட்டேன். எங்களுடன் தாவரவியல் ஆசிரியர் கோபாலகிருஷ்ணனும் சேர்ந்துகொள்ள கனவு பெரிதாகி செயல் வடிவம் காணத்தொடங்கியது.
ஒரு குழந்தை பிறக்கும்போது சாமானியன், உலகை விட்டு நீங்கும்போதே புகழுடல் எய்துகிறான்.பாரதி இறவாப்புகழ் அடைந்த நாளையே கொண்டாட வேண்டும் என்று கல்கியும் எழுதியுள்ளார் எனச்சொல்லி, நினைவுநாளை விழாவாகக்கொண்டாடக்கூடாது என்று எழுந்த எதிர்ப்புகளை சுலபமாக சமாளித்தோம்.
ஆசிரியர்கள்,நண்பர்களிடம் நன்கொடைகள் பெற்று போட்டிகள் நடத்தப்பெற்றன.
தொடக்கமற்றும் நடுநிலைப்பள்ளிகள்,
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள்,
மெட்ரிக் பள்ளிகள்
என மூன்று பிரிவுகள்,மூன்று நாட்கள்.பல்வேறு வகுப்பு நிலைகள்.
பல்வேறு போட்டிகள் என முதல் பாரதிவிழா களைகட்டியது.

பாரதி நினைவுநாளில் பரிசளிப்பு விழா.
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் பட்டிமன்றம். அனைவரும் மகிழ்ந்தனர்.
இரண்டு ஆண்டுகள் கழித்து நிர்வாக காரணங்களுக்காக செந்தூரன் ஐயா மதுரைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றலாக,நானும் மாறினேன்.
பாரதி விழா,
தலைமையாசிரியர் திரு ராஜகோபால் ஆசிரியர்கள் ரமணன்,பாலா,முத்துக்குமார், வெங்கட்,சொக்கலிங்கம்,நாராயணன்,பரமசிவம்  மற்றும் பலரின் கூட்டு முயற்சியால் மாபெரும் விழாவாகத்தொடர்ந்தது.

அனைத்துப்பள்ளிகளும் ஆவலுடன் எதிர்நோக்கும் போட்டியாக மாறியது.
போட்டிகளில் சிறு சிறு மாற்றங்கள் - கல்லூரி,ஆசிரியர்கள் என்று புதிதாகச்சேர்த்து - பாரதி விழா பிரமாண்டமாக நடைபெற்று வந்தது.
மறைந்த காளிமுத்து அவர்கள், திரு.இறையன்பு, திரு.மாலன், தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன், பாரதி.கிருஷ்ணகுமார். என்று பல்வேறு அற்புதமான பேச்சாளர்கள் பாரதி விழாவில் சிறப்புரை ஆற்றிப்பரிசுகள் வழங்கிச்சிறப்பித்திருக்கின்றனர்.

மூன்றாண்டுகளுக்குமுன் திரு.செந்தூரன் ஓய்வு பெற்றுவிட, மற்றவர்கள் விழாவை நடத்தினோம்.
மாற்றங்கள் தொடங்கின.
விழா தொடக்கத்தில் சந்தித்த அதே விமர்சனங்களை சந்தித்தது.
அதே பதிலைச்சொன்னோம்.
மூன்று நாள் போட்டிகள் குறைந்து ஒருநாள் ஆனது.

13 ஆண்டுகளுக்குப்பின் இந்த ஆண்டு பாரதிக்கு விழா இல்லாமல் , அவன் நினைவுநாள் ஒரு சாதாரண நாளாக கடந்துபோனது.

தனி மனிதன் என்ன செய்துவிடமுடியும்?
வகுப்பறைக்குள் பாரதியைப்பற்றி பேசினேன்.
வருங்காலத்தலைமுறையின் எண்ணத்தில் பாரதியை ஏற்றிவிட முடியும்.

பாரதி ஓவியம் .....ஓவியர் ரவி

No comments:

Post a Comment