Friday 31 October 2014

கதகேளு...கதகேளு..!- 2


கதைகளின் உலகம், வசீகரமானது.
கனவுகளின் தாய் வீடு.
எல்லையில்லாக்கற்பனை.
உணர்வுகளின் சங்கமம்.
கணந்தோறும் புதுப்புது கருத்து தோன்றும்.
வார்த்தையுள் வசப்படா மாயம்.

குழந்தைகள் பாவம்,
கதைகளை விட்டே துரத்தப்பட்டுவிட்டார்கள்.
பெரியவர்களின் கதைகள் அவர்கள்மேல் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகின்றன.
குழந்தைகளெல்லாம் பெரியவர்களின் முகமூடியுள் திணிக்கப்பட்டுக்கிடக்கின்றார்கள்.
கதைசொல்லிகளே இல்லாமல் போய்விட்டார்கள்.
மாயக்கதைகளின் உலகம் குழந்தைகளைத்தேடி அலைந்துகொண்டிருக்கிறது.
கதைகளின் உலகிற்கு குழந்தைகளை கைபிடித்து அழைத்துச்செல்ல மூவர் முடிவு செய்தோம். சில முணுமுணுப்புகள். அதெப்படி ஆசிரியர், மாணவருடன் சேர்ந்து?
தூண்டுகோல்,சிறிது குத்தித்தானே தூண்டுகிறது!
முகமூடிகள் கழற்ற முகமூடி அணிந்தோம்.
முத்துக்குமார் நாடகக்கலைஞர், பாலா பிறவி நடிகன்.
நான் கிராமிய நடனக்காரனானாலும் நாடகம் நடிப்பதென்பது இரண்டாம் முறை. இரண்டுமே ஆசிரியரான பின்.
முதன்முறை, கம்பன் கழகப்போட்டியில் இராமன் வேடம்.
வாலி வதைப்படலம்.
பாலா வாலியாக கலக்க,
ஓரிரு வசனங்களுடன் முகம் முழுதும் நீலம் பாரித்துப்பாவமாய் நான்.
இம்முறை, பஞ்சதந்திரம். நீல நரி மற்றும் முயலாக.
வழக்கம்போல ரமணனின் கைவண்ணத்தில் விரைவாக முகமாற்றங்கள்.
பெரியவர்கள் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தார்கள்.
குழந்தைகளோடு குழந்தையானேன்.
குழந்தைகள் குதூகலமானார்கள்.
காட்டிற்குள் மிருகங்களுடன் ஆடிப்பாடி
பேசித்திரிந்தோம்.
மனிதனாய், நரியாய், முயலாய்......
நாள்தோறும் ஒப்பனை இல்லாமல் செய்வதுதானே.

No comments:

Post a Comment