Sunday 10 August 2014

சேர நன்னாட்டிளம் பெண்களுடனே.


சேரநாடு செல்வதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.காரணம்,குறிஞ்சி நிலம்.
மலையகப்பகுதிகளின் மேல் மனதுக்கு இனம்புரியா ஈர்ப்பு.
தனியே நடந்து ஊரைச்சுற்றுவது பிடித்தமான ஒன்று.
திருவனந்தபுரத்தில் நடந்து சென்றுகொண்டிருக்கிறேன்.
காலை நேரம்.
வேலைநாளுக்குரிய பரபரப்பை மெதுவாகப்போர்த்திக்கொள்ள ஆரம்பித்திருந்தது நகரம்.
பழமையைப்பிடிவாதமாகப்பிடித்துக்கொண்டிருக்கும் நகரம்.
மழைக்காலம் என்பதால் கூடுதல் ஈரமும் குளிரும்.
தண்ணீர் தேங்காத நில அமைப்பு.
மனிதனின் பாதம் படாத இடமெல்லாம், பாறைகள் உட்படப்பசுமை.
நவ நாகரீக உடையணிந்த இளைஞர் கூட்டத்திலும் ஓரிருவர் வேட்டியுடனிருப்பது சாதாரணம்.
வழியே ஒரு பேருந்து நிறுத்தம்.
நிறையப்பெண்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். அனிச்சையாய் தலைகுனிந்து கடக்கையில் பேருந்தின் ஒலி. திடுக்கிட்டுத்தலை நிமிர்ந்தேன்.
என் பின்னே பேருந்து, பெண்களனைவரும் பேருந்தைப்பார்க்க நான் அவர்களைப்பார்த்தேன். ஒரே நேரத்தில் நிறைய முகங்கள். ஒரு கணம் அப்படியே மெய்மறந்து நிற்க, எண்ணத்தில்,
எங்கெங்கு காணினும் சக்தியடா
எழுகடல் அவள் வண்ணமடா......
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே..
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை....
என்று பாரதியின் வரிகள் மின்னலிட்டன.
நிஜத்தை நொடிகளில் கடந்துவிட்டேன்.
நினைவு நிறுத்திக்கொண்டது.
ஆமாம், பாரதி ஊர் சுற்றி. கண்டிப்பாகச்சேரநாடும் சுற்றியிருப்பான். இல்லையென்றால் இப்படியொரு வரியைப்பாடுவது சுலபமல்ல.
சேர நன்னாட்டிளம் பெண்கள் என்றால் உடலமைப்பல்ல, முகத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது.
அதுதான் தெய்வீகம்.
நெளிந்த முடி,தளர்ந்த கூந்தல், மாநிறம், செதுக்கிய நாசி, தீற்றலாய்ச்சந்தனம்,
ஞானச்செருக்கு.

ஓர வகிடுக்கு சற்றே கூடுதல் அழகு.
அந்த முகங்களைத்தரிசித்த பரவச நிலை நெடுநேரம் நிலைத்திருந்தது.
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே தோணிகளோட்டி விளையாடிக்கொண்டிருந்தேன்.
பாரதி மாகாகவி.


ஓவியம்....ரவி.

No comments:

Post a Comment