Friday 4 July 2014

அக்கினிக்குஞ்சொன்று......




திருமணப்பத்திரிக்கை கொடுப்பதுபோல இனிப்புடன் கொடுத்தான் தங்கப்பாண்டி.
சார், அவசியம் வந்துரணும்,ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யணும்.
தங்கப்பாண்டியனின் கிராமியக்கலை மாணவர்களின் அரங்கேற்ற விழா.
ஆசிரியர்களின் பெயர்கள் அழைப்பிதழிலேயே அச்சிடப்பட்டும் இருந்தன.
என் மணநாளின் மாலையை மாணவனுக்காக ஒதுக்கினேன்.
பாலா, சமூக சேவையில் நாட்டம் கொண்ட ஆசிரியர் பிரின்ஸ் உடன் வந்திருந்தார்.

ஆனையூரில் இறங்கியதுமே பறையின் முழக்கம்.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்,இளைஞர் பட்டாளம் ஊர்வலமாக, பல்வேறு கிராமியக்கலைகளை நிகழ்த்தியவாறே வந்துகொண்டிருந்தனர்.
கிராமத்தின் மத்தியில் பிரமாண்ட மேடை.
ஆயிரக்கணக்கான மக்கள்.
தங்கப்பாண்டியனின் தாயார் மற்றும் விருந்தினர்கள் குத்துவிளக்கேற்ற விழா தொடங்கியது.
பேரா.கே.ஏ.குணசேகரன் சிறப்பு விருந்தினர்.
தங்கப்பாண்டியனுக்குக்கலைகளை கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் மேடையில் அமர வைக்கப்பெற்று மரியாதைகள் செய்யப்பெற்றன.
பல மூத்த கிராமியக்களைஞர்களுடன் நாங்களும்.


ஆசிரியராகப்பெருமிதம் கொண்ட மகத்தான தருணத்தை நானும் பாலாவும் அனுபவித்து நெகிழ்ந்தோம்.

60 சிறார்கள் ஒயிலாட்டமாட நிகழ்சிகள் தொடங்கின.
அப்போது ஆடத்தொடங்கிய மேடையும் மனங்களும் இரவு நெடுநேரம் வரை ஓயவேயில்லை.

நூற்றுக்கணக்கான சிறார்களின் ஒயிலாட்டம், சிலம்பாட்டம்,கரகம்,காளை,கட்டைக்கால்,காளி,பறை,
புலி என அனைத்துவிதமான கிராமிய நடன நிகழ்வுகள்
மதுரை மண்ணிருக்கும்வரை மக்களின் கலை உயிர்ப்புடன் இருக்கும் என நிரூபித்தன.


இளம் வயதிலேயே உலகநாடுகள் பலவற்றிற்குச்சென்று கிராமியக்கலைகளின் புகழ் பரப்பிவரும் தங்கப்பாண்டியன் என்ற மகத்தான கலைஞன் எங்கள் மாணவன் என்று மார்தாட்டிக்கொள்வதில் எவ்வளவு பெருமிதம்!

....பற்றியெரிந்தது காடு,
தீம்தரிகிட....தீம்தரிகிட...தித்தோம்.......

No comments:

Post a Comment