Friday 4 July 2014

நீர்வழிப்படூவும் புணைபோல.............



இரண்டு நாட்களுக்கு முந்திய மாலை. வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.தெருவுக்குள் நுழைந்ததும் திடுக்கிட்டேன். வீட்டு வாசலில்,எதிரில் இருக்கைகளில் பலர்.
யாராக இருக்கும்? மனதிற்குள் சுற்று வீடுகளில் இருந்த வயதானவர்கள் வந்துபோனார்கள்.
வீட்டிற்குள் வந்ததும் மனைவியிடம் கேட்டேன்.
யாரு?
எதிர்வீட்டுப்பையன்.
அவனா? கொஞ்ச வயசாச்சே!
ஆமா 23. குடிச்சிட்டு வண்டி ஓட்டிப்போயி லாரில மோதிட்டான்.
தினமும் காலையில் அவன் வண்டி பெரிதாக உறுமும்.திடீரெனச்சீறிக்கிளம்பும்.

அந்த இளைஞனுக்கு 19 வயதிலேயே திருமணம் செய்திருக்கிறார்கள்.
தாய்மாமன் மகள்.காதல்.
3 வயதிலொரு பெண்குழந்தை.
பையனின் அப்பா, கொத்தனார்.
அவர் சம்பாதிக்க செலவு செய்வது மட்டுமே பையனின் வேலை.
எங்கள் பகுதிக்கு வந்து ஒரு வருடமாகிறது.
ஒருமாதம் முன்பு அந்தப்பெண் கோபித்துக்கொண்டு தாய்வீடு சென்றுவிட்டாள்.
அன்று காலைதான் வீடு திரும்பியிருந்தாள்.
சண்டையிடுச்சென்றவன், திரும்பவில்லை.
இரண்டு நாட்களாக வீட்டு வாசலில் சண்டைகள்.
இருவீட்டாரும் மாற்றி மாற்றிக்குறைகள்.

குழந்தை விளையாடிக்கொண்டிருக்கிறது.
அந்தப்பெண்...அவளும் சிறுமிதானே?

இரண்டு நாட்களாக, செய்வதறியாமல் தவிக்கிறேன்.
தூக்கம் வரும்போதும் கொடுங்கனவுகள்.

இப்போது,
வாசலில் வண்டி உறுமும் சத்தம்.
எட்டிப்பார்த்தேன்.
அவன் தம்பி, சீறிக்கொண்டிருக்கிறான்.

நீர்வழிப்படூவும் புணைபோல.............

No comments:

Post a Comment