Saturday 31 May 2014

மனம் நிறைந்த மாணவன் - 1

நீண்ட நாட்களாகவே ஒருமுறையேனும் வீட்டிற்கு வருமாறு அழைத்துக்கொண்டிருந்தான் தங்கப்பாண்டி.
தங்கப்பாண்டி, எங்கள் பள்ளியில் படித்த மாணவன்.+2 க்குப்பின் அரசு இசைக்கல்லூரியில் சேர்ந்து கிராமியக்கலைகள் பயின்றவன்.
எங்கள் பள்ளியில் படிக்கும்போது கிராமிய நடனப்பயிற்சியில் ஆர்வமுடன் கலந்துகொண்டான். மிகவும் சிரமப்பட்டே நடனம் அவனுக்கு வசப்பட ஆரம்பித்தது.
தனது நண்பர்களை இணைத்துத்தனக்கென ஓர் கிராமியக் கலைக்குழுவை உருவாக்கிக்கொண்டான்.
கிராமியக்கலை நிகழ்சிகளுக்குச் செல்வது, மற்றநேரங்களில் கட்டிடவேளைகளுக்குச்செல்வது என நகர்கிறது வாழ்க்கை.
இரவு நேரத்தில் தங்கப்பாண்டியின் வீட்டிற்கு நண்பர் ஓவியர் ரவியுடன் சென்றேன்.


நன்கு குனிந்து நுழையுமளவு தாழ்ந்த வாசல்,ஒற்றை அறையுடன் ஓட்டு வீடு. குறுக்குச்சட்டம் முழுவதும் மெடல்கள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன.
அறையெங்கும் பரிசுப்பொருட்களும்,கிராமிய நடனங்களுக்குத் தேவையான பொருட்களும்.
வீட்டிலிருந்து ஊருக்கு வெளியே வந்தோம்.
வயல்வெளிகள்,வீட்டு மனைகளாக மாறியிருக்கின்றன. ஆங்காங்கே வீடுகள்.தனித்த ஒரு வீட்டின் மேலெரிந்துகொண்டிருந்த குழல் விளக்கொளியில் சிறார்கள்.
வேலைகளுக்குச்சென்று வந்தபின் தனது பகுதியில் வசிக்கும் சிறார்களுக்குஇரவு நேரத்தில் பல்வேறு கிராமியக்கலைகளைச் சொல்லித்தருகிறார் தங்கப்பாண்டி.
ஒயிலாட்டம்,சிலம்பாட்டம்,

கட்டைக்கால்  ஆட்டம்,தப்பாட்டம்,கரகம்,கபடி என அனைவரும் வெகு ஆர்வமுடன் பயின்று வருகின்றனர்.

பயிற்சியில் சேரும்போது தட்சிணையாக வெற்றிலைபாக்குடன் 11 ரூபாய்கள் தரவேண்டும். அவ்வளவுதான்.வேறு கட்டணம் ஏதுமில்லை.
சிறார்களின் பயிற்சியை வெகுநேரம் பார்த்து வியந்தோம்.
தங்கப்பாண்டி ஏராளமான சிறார்களுக்கு கிராமியக்கலைகளைப்
பயிற்றுவித்துள்ளார்.

கிராமியக்கலை பயிலவரும் பள்ளிச்சிறுவர் சிறுமியர் பலரின் கல்விச்செலவு,தனிப்படிப்புச் செலவுகளையும் தங்கப்பாண்டியே கவனித்துக்கொள்கிறார்.

இவரின் சேவையைப் பாராட்டி இளம் சாதனையாளர் விருது வழங்கிக்கௌரவித்துள்ளது,ஆனந்தவிகடன்
தங்கப்பாண்டி கண் நிறைந்த கனவுகளோடு கூறியவை,
" சார்,இப்போ 150 பேர் படிக்கிறாங்க. சிலபேரு பள்ளிக்கூடப் பசங்க,
அவங்களுக்கு பாடம் படிக்கவும் டியுசன் என் செலவுலேயே ஏற்பாடு பண்றேன்,என் பிரண்ட்சா சேந்து வேலைக்குபோய் சம்பாதிக்கறதுல ஒரு பகுதிய சேத்துவச்சு ஆட்டத்துக்குத் தேவையான பொருட்களைச் செஞ்சுக்கறோம்.எனக்கு ஒரு ஆசை, எல்லாப் பசங்களையும் சேர்த்து ஒரு அரங்கேற்றம் வைக்கணும். நாங்க வேலைக்குப் போற காசுல டிரஸ்,ஆட்ட சாமான்கள் வாங்கி வச்சுட்டோம்.எல்லாப்பசங்க, இது வரைக்கும் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்த மூத்த கலைஞருங்க எல்லாரையும் கௌரவிக்கணும். அதுக்கு சால்வை,ஷீல்டுன்னு கொஞ்சம் செலவுக்குப்பணம் சேக்கணும்."


தங்கப்பாண்டியின் ஆசைகள் தன்னலமற்றவை.
எளிய கிராமியக்கலைஞனுக்கேயுரியவை.

No comments:

Post a Comment