Saturday 31 May 2014

மனம் நிறைந்த மாணவன் - 2


ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை சேதுபதி மேனிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப்பணியாற்றிக்கொண்டிருந்தேன். ஓவிய வகுப்புகளில் படம் வரைவது தவிர உலக ஓவியர்கள், ஓவியங்கள், வரலாறு, இலக்கியம், திரைப்படம் எனப்பல செய்திகள் குறித்து மாணவரிடையே பேசிக்கொண்டிருப்பதுண்டு.
ஒரு நாள் 9 ஆம் வகுப்பில் மொகலாய பேரரசர்களைப்பற்றிப்பேச ஆரம்பித்தேன்.
சிலரின் பெயர்களைச்சொல்ல மறந்து நான் திணறியபோது யாரோ ஒரு மாணவன் சரியாகச்சொல்லிக்கொண்டே இருந்தான். எனக்கு ஆச்சரியம்.
பாடத்துல இருக்காடா?
இல்ல சார்....
யார்றா, அது?
இவந்தான் சார்,
மெதுவாக, தலைகுனிந்தபடி எழுந்தவனைப்பார்த்தேன். மிகுந்த ஆச்சசரியமாக இருந்தது, கௌதம்.
அவனை நான் முதன்முதலில் அவன் அப்பாவுடன் பார்த்திருக்கிறேன். அவனை ஓவிய அறைக்கு அழைத்து வந்து இரண்டு ஓவிய ஆசிரியர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்தபின் வகுப்பிற்கு அனுப்பிவிட்டு,
"சார், இவனுக்கு சின்ன வயசுல மூளைக்காய்ச்சல் வந்து ரொம்பக்கஷ்டப்பட்டான். அதுனால, படிக்குறதுல குறைபாடு இருக்கு. படம் வரைஞ்சா நல்லதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.கொஞ்சம் பாத்துக்கோங்க."
என்று சொல்லிச்சென்றிருந்தார். ஆனால், என்னவோ, சிலநாட்களில் அவன் ஓவிய அறைப்பக்கம் வருவதை நிறுத்திக்கொண்டான்.
வகுப்பில் இப்போது கௌதமை பார்த்ததும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கலந்து கேட்டேன்.
உனக்கு எப்படி எல்லா பேரும் தெரியும்?
பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துவந்து காட்டினான்.
மொகலாயர் வரலாறு குறித்த புத்தகம். மாவட்ட மைய நூலகத்தில் எடுக்கப்பட்டது.
யாருகிட்ட வாங்கின?
நான்தான் எடுத்தேன். மெம்பரா இருக்கேன்.
இந்தப்புத்தகத்த எப்படி எடுத்த?
எனக்கு வரலாறு பிடிக்கும்.
ஒரு நோட்டில் அனைத்து மொகலாய பேரரசர்களின் படங்களையும் வரைந்திருந்தான்.
இந்த நிகழ்விற்குப்பின் கௌதம் வாசிப்பதற்கு பல புத்தகங்களை நானும் பரிந்துரைத்தேன். பத்தாம் வகுப்பில் தவறியபின் அவனைப்பார்ப்பது குறைந்துபோனது.
ஒவ்வொன்றாக எழுதி பத்தாம் வகுப்பில் தேறினான். சென்னை சென்று கிராபிக்ஸ் தொடர்பான படிப்புகளைப்படித்தான். எப்போதாவது கௌதமிடமிருந்து செல்பேசியில் அழைப்பு வரும்.திரைப்படம்,புத்தகம் குறித்துப்பேசுவான். கண்டிப்பாக சென்னை புத்தகக்கண்காட்சியின்போது பேசுவான்.மதுரை வரும்போது வீட்டுக்கு வருவான்.
இப்போது கௌதம் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் குறித்து பணிபுரியும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஆண்டுக்கு ஒருமுறையேனும், சென்னை புத்தகக்கண்காட்சியின்போது கௌதமிடமிருந்து செல்பேசி அழைக்கும்.

No comments:

Post a Comment