Sunday 17 March 2013

கொடும்பாளூர் ...காலம் சிதைத்த கலை - 2

 கொடும்பாளூர் ...காலம் சிதைத்த கலை - 2


கொடும்பாளூரில் இருந்த பல சிற்பங்கள் பல்வேறு அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பெற்று வருகின்றன.
தற்போது பாதுகாக்கப்படும் இரு கோவில்களின் சுவர்கள்,விமானங்களில் உள்ள சிற்பங்கள் முற்காலச் சோழர் கலைக்குச் சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.
கொடும்பாளூரில் உள்ள சிற்பங்களைத்  தள்ளி நின்றும், அருகே சென்றும், பார்த்தும், தொட்டும், கண்மூடித் தடவியும் பல வழிகளில் இரசித்தேன் . உணர்வுப்பூர்வமாக அன்றைய  கொடும்பாளூரில் இருந்தேன். என்னை மிகவும் ஈர்த்தவை அர்த்தநாரி , ஆடவல்லானின் சிற்பங்கள்.
ஆணும் பெண்ணும் கலந்த அர்த்தநாரியின் எளிய வடிவம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும். ஆடவல்லானைச் செதுக்கிய சிற்பியின்,உடற்கூறு அறிவும் சிற்ப வடிவமைப்பின் தேர்ந்த ஞானமும் என்னை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தின.

சோழர் காலக் கலைக்கு மிகவும் புகழ் சேர்த்தது நடராஜரின் செப்புத்திருமேனி.பிரபஞ்சத் தத்துவ நடனமாக நடராஜர் வடிவம் பெற்றுள்ளார். கொடும்பாளூரில் ஏறத்தாழ 5 அடி உயரமுள்ள ஆடவல்லானின் சிற்பமும் சிவதாண்டவத்தைக் காட்டுவதாக வடிவமைக்கப் பெற்றுள்ளது.
சராசரி ஆணின் உடல் அமைப்புடன் சிவன், முயலகன் மீது நடனம் புரிகிறார். தனது இடதுகாலை முயலகன் மீது ஊன்றி வலது காலைச் சிறிது தூக்கியபடி காட்சிதருகிறார்.

முகத்தில் கோபமும் உதட்டில் புன்னகையும் ஒருங்கே காணப்படுகிறது.



முன். பின் கைகள் சமநிலையுடன் இருக்கின்றன. உடல் நளினமாக இருக்கிறது.

















சிவன் தனது  வலது காலைத்  தூக்கி அந்தரத்தில் வைத்து இருப்பதால் உடலின் எடை முழுவதையும் இடது காலே தாங்கவேண்டியுள்ளது. இடது பாதத்தின் முன் பகுதியை  முயலகனின் பின்புறத்தில் வைத்திருப்பதால் குதிகால் இடுப்புச்சரிவில் இறங்கியாக வேண்டும்.அப்போது உடலின் சமநிலை குலையும். இதைச் சரிப்படுத்த முயலகனைக்  கை , கால்களை ஊன்றியபடி  தவழும் நிலையில் சிற்பிவடிவமைத்துள்ளார். இருந்தாலும் ,இடுப்புச்சரிவில் சிவனின் பாதத்தைத் தங்கவேண்டி முயலகனின் வலது கையை வடிவமைத்ததே  சோழச் சிற்பியின் கலைத் திறனின் உச்சம் .

 சிற்ப  இலக்கண விதிகள்  என இருந்தாலும் ஒன்றுபோலவே செய்யாமல் தனது மனதிற்கேற்ப சில சுவையான மாற்றங்களுடன் படைக்கப்படும் கலையே காலத்தைத்தண்டி அதே உணர்வைப் பார்ப்பவர்களின் மனதில் ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment