Friday 19 October 2012

பொன்னியின் செல்வன்



மதுரை புத்தகத்திருவிழாவில் வாங்கிய புத்தகங்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள அற்புதம் 'அஞ்ஞாடி '.
பூமணி - மன்னராட்சிகளைப் புகழ்ந்து,மங்கையரை வர்ணித்துக் கொண்டிருந்த வரலாற்றுப் புதினங்களுக்கிடையே 
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்.
மற்ற வரலாற்று  நாவல்களைப் போல ஒரே மூச்சில் வாசிக்க முடியாமல் கண்கள் அவ்வப்போது திரையிட்டுக் கொள்கின்றன .
   அஞ்ஞாடியை பாதி வாசித்துக் கொண்டிருந்தபோதே மனதுள் தோன்றியது, சில வரலாற்றுப் புதினங்களை வாசித்துவிட்டு இதை வாசித்தலென்ன?.
   நீண்ட காலத்திற்குப்பின் பொன்னியின் செல்வனை வாசிக்கத் தொடங்கினேன். வந்தியத்தேவன், தன குதிரையில் என்னையும் ஏற்றிக்கொண்டு ஒரே மூச்சில் ஏரி ,ஆறு,காடு,மலை,அரண்மனைகள்,சிறைச்சாலை,சோளம்,ஈழம் எனப் பல்வேறு இடங்கள் சுற்றி -குந்தவை,வானதி,சுந்தரச் சோழர்,ஆதித்ய கரிகாலர்,அருண்மொழி என்ற ராஜராஜ சோழன் ..........
போன்ற பலருடன் பழக வைத்து ஆயிரக்கணக்கான பக்கங்கள் தாண்டி இறக்கிவிட்டான்.
      பாண்டியர் குறித்த இழிவுகள்(?) பாண்டிய நாட்டுக்காரனான என் மனதில் சிறிது வருத்தம் தந்தாலும் தமிழன் என்ற பெருமிதத்துடன் அடுத்த மூச்சில் பாலகுமாரனின் உடையாரில் ராஜராஜ சோழனுடன்  தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயக் கட்டுமானத்தில் சில ஆயிரம் பக்கங்கள் இணைந்தேன்.
     வரலாற்றுப் புனைவு என்றாலும் பெருவுடையார் ஆலயம் உறுவாவதைப் படிக்கும் போது பெருமிதமாக இருக்கிறது.ராஜராஜ சோழன், மகத்தான சாதனையில் தன்னுடன் ஆலயப் பணியில் ஈடுபட்ட அனைவரின் பெயர்களையும் கல்வெட்டில் பதித்திருப்பதே அவனை வரலாற்று நாயகனாகக் காட்டுகிறது.
ஏறத்தாழ பத்து நாட்கள் மகத்தான சோழப் பேரரசில் வாழ்ந்து திரும்பியபோது ரஜினி படம் பார்த்த விறுவிறுப்பு.
இணையத்தில் ராஜராஜ சோழன் பற்றிய பல்வேறு பதிவுகள்,தஞ்சை பெருவுடையார் ஆலயம் குறித்த ஒளிப்பதிவுகளைப்  பார்த்து மகிழ்ந்தேன்.
மனதில் தீரா வருத்தமும் வாழ்க்கை பற்றிய சிந்தனையையும் ஒருங்கே ஏற்படுத்தியது ராஜராஜ சோழனின் பள்ளிப்படை குறித்த மக்கள் தொலைக்காட்சி செய்தி.
மீண்டும்  அஞ்ஞாடியை வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.
மாமன்னன்,மக்கள்- யாராக இருந்தாலும் வாழ்க்கை அவரவர் தளத்தில் விளையாடிக்கொண்டே இருக்கிறது,
புரிந்தும் புரியாத புதிராய்.... 





No comments:

Post a Comment