Sunday 12 August 2012

வினோத ராட்சசன் - தேவதச்சன்


எளிமையான வாழ்வின் மின்னும் தருணங்களை படம் பிடிப்பவர் தேவதச்சன்.
கண்மூடித்திறக்கும் நேரத்தில் நிலவில் நிறுத்தி பூமியைக்காட்டும் ஆச்சரியம்.எளிய வார்த்தைகளுக்குள் தோன்றி விரியும்பிரமாண்டம்.ஜென் பௌத்தம் கூறுவதைப் போன்ற எளிய தருணங்களில் மனம் மென்மையாகும்போது திடீரெனக் கிடைக்கும் ஞானம்,அவர் கவிதைகள்.

மனம் இலேசாகக் கலங்கினாலும் தேவதச்சனை வாசிக்கத் தொடங்கிய  நொடியே தள்ளி நின்று என்னை நானே பார்த்துக்கொள்வேன்.வார்த்தைகள் மனதை சலவை செய்யும்,
அடித்துத் துவைத்தல்ல,அறியாமலே.
இன்று மீண்டும் வாசித்தது அவரின் ஹோம்ஸ் என்னும் காற்று  கவிதை தொகுப்பு .ஒவ்வொரு வாசிப்பிலும் புதுப் புது வெளிகள் தரும் பரவசம் ,வாழ்வின் தரிசனம்.

எப்போவெல்லாம்
மைனாவைப் பார்க்கிறேனோ
அப்போவெல்லாம் தெரிகிறது
நான்
நீராலானவன் என்று

அதன்
குறுஞ்சிறகசைவில்
என் மேலேயே
தெறிக்கிறேன் நான்.

வாசித்ததும் வாசல் திறந்து எண்ண வெளிகளில் பறக்கத்தொடங்கும் மனம்.
 மைனாவாகவும் நீராகவும்.

ஒரு தட்டைக்
கீழே போட்டுவிடாதே
அதன்
 ஓசை விரிவில்
தட்டு பிரம்மாண்டமாகிவிடும்.

 
வார்த்தைகளால் நினைவில் விழுந்த தட்டின் ஓசை மனம் தாண்டி அண்டமெங்கும் விரிந்து செல்கிறது.
ஒவ்வொரு கவிதையும் அதற்கான தனித்த வெளியில் என்னை அலைக்கிறது.
ஒரு கவிதையின் வெளியிலிருந்து மீண்டு அடுத்ததை வாசிக்கத் தொடங்க ஆகும் இடைவெளியில் வெளிச்சமாகிறது வாழ்க்கை.

பள்ளிக்குத் திரும்புகையில்
ஆசிரியர்கள் அவர்களை அதிசயிக்கிறார்கள்
அடையாளம் தெரியாமல்
ஆசிரியர்களை அவர்கள் அதிசயிக்கிறார்கள்
அடையாளம் தெரிந்து.


பள்ளி சென்ற எல்லோருமே வியந்த  தருணம்.வாசித்ததும் நினைவில் ஒட்டிக்கொள்ளும் வார்த்தைகள்,என்னிடம் வார்த்தைகள் அற்றுப் போகச் செய்துவிடுகின்றன.

தேவதச்சனின் வார்த்தைகள்  அண்ட வெளியில் அழைத்துச் செல்லும் தூரத்திலிருந்து மீண்டு வந்து என் முகம் அணியும் வரையான இடைவெளியே  நான்.
தேவதச்சன் 

No comments:

Post a Comment