Friday 10 August 2012

அசடன்-அசடி

அப்பாடி என்றிருக்கிறது.
பல தடைகளைத்தாண்டி ஒருவழியாக தஸ்தாவெஸ்கியின் அசடனைப் படித்துவிட்டேன்.
கரமசோவ் சகோதரர்கள்,குற்றமும் தண்டனையும் -போலவே தஸ்தாவெஸ்கி அசாதாரணமாக மனித மன  வெளிகளை துல்லியமாக படம் பிடிக்கிறார்.பெரும்பாலும் ஆணின் மன ஓட்டங்களையே பதிவு செய்பவராக இருந்தாலும் அசடனில் பெண்களின் மனதையும்  அற்புதமாக வரைந்துள்ளார்.

மிஷ்கின், அற்புதமான பாத்திரப் படைப்பு.நல்லவன் இப்படித்தான் இருப்பான்.என்றெல்லாம் பல்வேறு விமரிசனங்களில் படித்திருக்கிறேன்.அதே எண்ணத்துடன் வாசிக்கத் தொடங்கிய எனக்கு அப்படித் தோன்றவில்லை.மிஷ்கினை விட என் மனதை நிறைத்தது தஸ்தாவெஸ்கியின் பெண்களே.அவர்களே ஆண்களின் அச்சாணிகள்.ஆணின் மையப்புள்ளி பெண்ணாகவும் பெண்ணின் மையப்புள்ளி ஆணாகவும் வாழ்க்கை பயணிக்கிறது.
அசடனில் உலவும் பெண்கள் அனைவருமே பல்வேறு மனப்போராட்டங்களுடனும் சரியாகவும் குழப்பமாகவும் முடிவெடுப்பதில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகின்றனர்.

என்னைக் கவர்ந்தவள்  நஸ்தாஷியா பிலிப்போவ்னா  .அவள் அற்புதமான உணர்வுகளுடைய மனுஷி.பல்வேறு கஷ்டங்களையும் அவமானங்களையும் தாங்கிய அவள் வாழ்வின் வசந்தமாய் வருகிறான் மிஷ்கின்.இருவரின் காதல் வார்த்தைகளில் சிக்காத உணர்வுப்பிரவாகம்.மிஷ்கின் மீது கொண்ட உண்மைக்  காதலே அவளை விலகி ஓடவைக்கிறது.ரோகோஷினை திருமணம் செய்ய முடிவும் தப்பித்தலுமாக அலைக்கழிக்கிறது.நாவலின் உயிர் மூச்சாக, தென்றலும் சூறாவளியுமாக நடத்திச் செல்கிறாள் நஸ்தாஷியா பிலிப்போவ்னா .

மிஷ்கின், அசடன்.சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் மனதில் எண்ணியதை அப்படியே வெளிப்படுத்துவதால் அசடன். கொஞ்சம் கொஞ்சமாக நானும்  அவனாகவே ஆகிவிட்டேன்.ஆணை இயக்கும் சக்தியாக இருக்கிறாள் பெண்.ஆகிய இருவரையும் காதலிக்கிறேன் என்று சொன்ன நிமிடத்திலேயே அற்புதமான,முழுமைபெற்ற மனிதனாக எனக்குத் தோன்றினான் மிஷ்கின்.
நம் உள்ளத்து உணர்வுகளை அதே தளத்தில் நம்மைத் தவிர யாராலும் புரிந்துகொள்ள இயலாது.நம்மை சரியாகப் புரிந்து  கொள்பவரைத் தேடியலையும் மனம் இறுதியில்  தனக்குத் தானே  பேசி,சிரித்து,அழுது, இருமையாகும் போதே அசடாகிறோம்.தொடங்கிய இடத்தில் முடிந்துபோன முழுமை மிஷ்கின்.

அக்லேயா இவானோவா ,துடுக்குப்பெண்ணாக வளம் வருபவள்.இளம் வயது தேவதை.இளம் பருவத்திற்கே உரிய தாவல்களை உடையவள்.யாரைத் திருமணம் செய்வது என பல எண்ணங்களிடையே மிஷ்கினையும் தொலைத்தவள்.

மரண தண்டனை பெற்றவனின் கடைசி எண்ணங்கள்,பல்வேறு ஆண்,பெண்களின்  அக உணர்வுகள் என மனித வாழ்வின் ரகசியங்களிடையே நம்மைக் கைபிடித்து   அழைத்துச் செல்கிறார் தஸ்தாவெஸ்கி.

மனம் மகிழ்ச்சியையே பெற விரும்புகிறது,ஆனால் துக்கத்திலேயே மகிழ்கிறது.மகிழ்ச்சியை விட துக்கத்தையே பிறரிடம் பகிர்ந்துகொள்கிறோம் உருவாக்கியும், உண்மையாகவும்.
தஸ்தாவெஸ்கியின் எழுத்துக் கண்ணாடி நம் முகமும் காட்டுகிறது.அதுவே மனிதத்தின் முகமும்.


1 comment: